Friday, 1 August 2014

இதில் எல்லாம் நாம்தான் கடைசி...அவசியம் படிக்கவும்..!

இதில் எல்லாம் நாம்தான் கடைசி

தற்போது சுமார் 25-30 வயதிருக்கும் நபர்கள் பல விஷயங்களை கடைசியாக செய்த, பார்த்த தலைமுறையாக இருப்பார்கள். அது ஒரு சில விஷயங்களை நினைக்கும் போது வேதனையாகவும் இருக்கிறது.

அது என்ன கடைசி…

பெண்களாக இருந்தால், பள்ளியில் பாவாடை தாவணியை பள்ளிச் சீருடையாக அணிந்த தலைமுறை நாமாகத்தான் இருப்போம்.

தலைக்கு சீகக்காயும், முகத்துக்கு மஞ்சளும் தேய்ச்சி குளித்த இளம் பெண்களாக இருந்தவர்களும் நாம்தான் கடைசி.
பள்ளி விடுமுறையில் நண்பர்களுக்கு கடிதம் எழுதிய தலைமுறையும் நாம்தான்.

மயில் இறகை புத்தகத்தில் வைத்து அது வளர்ந்துவிட்டதற்கு மகிழ்ச்சியும், காணாமல் போயிருந்தால் துக்கமும் அடைந்ததும்;

தந்தி வந்து மரணச் செய்தியை அறிந்து கொண்டவர்களும், தந்திக்கே மூடு விழா நடந்து அதிர்ந்தவர்களும் நாம்தான்.
சைக்கிள் டயரிலும், நுங்கு மட்டையிலும் சைக்கிள் ஓட்டியவர்களில் கடைசி நபர் நாமாகவே இருக்கும்.

பள்ளி விடுமுறையில் ஊருக்குப் போய், மரத்தில் ஏறி கை மூட்டை உடைத்துக் கொண்டவர்கள் நாமாகவோ, நமது நண்பர்களாகவோ தான் இருப்பார்கள்.

கேலண்டர் அட்டையில் துணிக் கிளிப்பை வைத்து தேர்வெழுதியவர்களும், சிலேட்டில் வீட்டுப் பாடம் எழுதி அதனை அழியாமல் எடுத்துச் செல்ல அதிக பிரயத்தனம் செய்தவர்களும் நாமேதான்.

மண்ணில் விளையாட்டுச் சொப்புகள் செய்து அடுப்பில் சுட்டு விளையாடியவர்களும்;

காதலிக்கு பயந்து பயந்து கடிதம் எழுதி புத்தகத்தில் வைத்துக் கொடுத்து மாட்டிக் கொண்டவர்களும், மாட்டாதவர்களும் நாமாகவே இருக்கும்.
       
உள்ளூர் நபர்களுக்கே, தொலைபேசி பூத்களில் ஒருவர் பேசி முடிக்கும் வரை காத்திருந்து நாம் பேசி அதற்கான காசை கொடுத்துவிட்டு வந்ததும் நாமாகத்தான் இருக்கும்.

போன் நம்பர் கேட்டால் பக்கத்து வீட்டு அல்லது அடுத்த தெருவில் இருக்கும் ஒருவரின் தொலைபேசி எண்ணைக் கொடுத்தவர்களும் நாம்தான்.

தெருவிலேயே ஒரே ஒரு வீட்டில் இருக்கும் தொலைக்காட்சியில் இடம் பிடித்து உட்கார்ந்து ஒலியும்-ஒளியும் பார்த்தவர்களும் நாம்தான் கடைசி.

இதுபோல பல விஷயங்களை இந்த தலைமுறையே இறுதியாகக் கண்டுள்ளது. அடுத்த தலைமுறை இதுபோல இழக்கும் பல விஷயங்களை பட்டியலிட்டால் அது முடியவே முடியாது என்றே தோன்றுகிறது.

இதுபோல நாம் இழந்த பல விஷயங்கள் உள்ளன. அவை உங்களுக்கும் தெரியுமா?

No comments:

Post a Comment