Thursday 19 September 2013

Tagged Under:

வேலூர் கோட்டை - சுற்றுலாத்தலம்!

By: Unknown On: 17:49
  • Share The Gag

  •  
    வேலூர் கோட்டை
     
     
     
    வேலூர் கோட்டை
     

    மிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் வழித்தடத்தில் 145 கிலோமீட்டர்  தொலைவிலும்
    காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து மூன்று  கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது வேலூர் கோட்டை.
    வானளாவிய கற்களாலான மதிற்சுவர்கள். பிரமிக்கவைக்கும்  பரந்த சுற்றளவு....ஒரு கோட்டைக்குள் மற்றொரு கோட்டை போல் மூன்று கொத்தளங்கள்.... பல நூற்றாண்டுகளை கடந்து கம்பீரமாக வானுயர்ந்து நிற்கும் உறுதி.... வரலாற்றுப் பக்கங்களை தன்னகத்தே வைத்துக்கொண்டு சாந்த சொரூபி போல் வீற்றிருக்கும்  அழகு.... இந்த அடையாளங்களின் பெயர் தான் வேலூர் கோட்டை
     
    பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் விஜயநகரப் பேரரசுக் காலத்தில் நாயக்கர் தலைவர்கள் , திம்மி ரெட்டி, பொம்மி ரெட்டி சகோதரர்களால்  வேலூர் மண்டலப் பகுதிகளுக்கான பாதுகாப்பு அரணாக கட்டப்பட்டது இந்த வேலூர் கோட்டை. காலச் சூழலின் காரணமாக நாயக்கர்களிடம் இருந்து பீஜப்பூர் சுல்தானுக்கும், பின்னர் மராட்டியருக்கும், தொடர்ந்து கர்நாடக நவாப்புகளுக்கும் இறுதியாகப் பிரித்தானியருக்கும் இக் கோட்டை கைமாறியது. 1947 இல் இந்தியா விடுதலை பெறும்வரை இக் கோட்டை பிரித்தானியர்களிடமே இருந்தது. பிரித்தானியர் காலத்தில் இக் கோட்டையிலேயே திப்பு சுல்தான் குடும்பத்தினரைச் சிறை வைத்திருந்தனர். இலங்கையின் கண்டியரசின் கடைசி மன்னனான ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனும் இங்கேயே சிறை வைக்கப்பட்டிருந்தான்.
     
    தென்னிந்தியாவிலேயே மிகச் சிறந்த போர் அரண்களுடன் கட்டப்பட்ட கோட்டை இது. சுற்றிலும் சுமார் 64 அடி ஆழம் கொண்ட அகழியும், மரப்பாலமும் உயிரைக் கொல்லும் முதலைகளும் கொண்டு பாதுகாப்பு அரணாக விளங்கியதாம் இக்கோட்டை. ஆனால் பற்பல போர்களைக் கண்ட கோட்டையின் அகழி தற்போது ஒரு புறத்தில் தூர்ந்து விட்டது. ஒரு பகுதியில் மட்டும் தண்ணீர் நிரம்பி உள்ளது.பொதுவாகவே கோட்டைகளுக்குப் பெயர் வைப்பது தமிழகத்தில் வழக்கமில்லை. ஆனால்இக்கோட்டைக்கு ஒரு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
    கோட்டையின் மேற்குப் பகுதியில் நீருக்கடியில் தமிழிலும், கன்னடத்திலும் மீசுரகண்டக் கொத்தளம் என்ற பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது
     
    அந்த காலத்தில் வெளியிலிருந்து கோட்டைக்கு செல்ல வேண்டுமானால் மரப் பாலத்தை கடந்து தான் செல்லவேண்டும் ..எதிரிகள் வந்தால் மரப் பாலத்தை உள்  பக்கமாக இழுத்துவிடுவார்களாம் அவர்கள் அகழியை கடந்து தான் உள்ளே செல்லமுடியும் அகழியில் ஏராளமான  முதலைகள் இருந்ததால் அப்படி யாரும் எளிதில் அகழியை கடந்து உள்ளே செல்ல முடியாது
    ஆனால் தற்போது தற்போது மரப்பாலம் இல்லை. அகழியின் மீது அமைக்கப்பட்ட பாலத்தில் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
    கோட்டையின் முதற் சுவர்; அழகிய கருங்கல் வேலைப்பாடுகள் மற்றும் சிற்பங்களுடன் அம்பெய்யும் மாடம் கூர்மையான தாமரைப்பூ வடிவம் கொண்ட கொத்தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. அதன் உட்சுவர் தஞ்சைப் பெரிய கோவிலின் மதில் பாணியில் அமைந்துள்ளது.
    அதற்கும் உட்பகுதியில் யானை அல்லது தேர் செல்லக்கூடிய அளவில் சுமார் 12 அடி அகலம் கொண்ட உயர்ந்த மண் பாதை போன்ற சுவர் அமைந்துள்ளது.
     
    ஜலகண்டேஸ்வரர்  கோவில்
     
    க்கோட்டைக்குள் சுமார் 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள அகிலாண்டேஸ்வரி,சமேத ஜலகண்டேஸ்வரர்  கோவில் உள்ளது. ஏழுநிலை ராஜகோபுரமும். இடப்புறத்தில் கலையழகு மிக்க கல்யாண மண்டபமும். வலப்புறத்தில் தீர்த்தமும். 
    உள்ளே  நான்குநிலை உள்கோபுரமும், அமையப்பெற்ற தொன்மையான கோவில் இது
    உள் பிரகாரத்தில்  செல்வவிநாயகர், வெங்கடேசப் பெருமாள், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், அகிலாண்டேஸ்வரி அம்பாள் சந்நிதிகள் உள்ளன. அம்பாள் சந்நிதிக்கு எதிரே நந்தா விளக்கு இருக்கிறது.
    தங்க வெள்ளிப் பல்லிகள், பாம்புகள், சூரிய சந்திரர்கள் பிரகார மண்டபத்தின் மேற்கூரையில் உள்ளன.
    அடுத்து  கங்கை பாலாறு ஈஸ்வரன் சந்நிதி . அருகே காலபைரவர் சந்நிதி. அடுத்து நந்திதேவரும் கொடிமரமும் அமைந்திருக்கின்றன
    இங்கிருக்கும் நடராஜர் சந்நிதியில் இருந்து விரிஞ்சிபுரத்தில் இருக்கும் மார்க்கபந்தீஸ்வரர் கோவிலுக்கு ஒரு சுரங்கப் பாதை உள்ளதாகச் செவிவழிச் செய்தி சொல்லப்படுகிறது
    அடுத்து கோட்டையினுள்ளே 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மசூதியும் உள்ளது.
    1806-ல் கட்டப்பட்ட கிறித்தவ தேவாலயமும் உள்ளது. இதனால் இக்கோட்டையை மும்மதச் சந்திப்பு என்றே கூறலாம்.மேலும் திப்பு மகால், ஐதர் மகால் என்றழைக்கப்படும் அரண்மனைகளும், பாத்தி மகால், பேகம் மகால் என்று கூறப்படும் மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையைப் போன்ற தூண்களைக் கொண்ட இரு அரசவை மண்டபங்களும் உளளன.
     
    சிப்பாய் கலகம்
    ந்த கோட்டையினுள்ளே தான் வரலாற்று சிறப்பு கொண்ட சிப்பாய் கலகம் நடந்தது சுதந்திர இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்ட முதல் புரட்சியான வேலூர் சிப்பாய் புரட்சி 10-7-1806 அன்று நடைபெற்றது.
    1805-ம் ஆண்டு, வேலூர் கோட்டையில் இருந்த மெட்ராஸ் ரெஜிமெண்டைச் சேர்ந்த தென்னிந்தியத் துருப்புகள் பாதுகாப்புப் பணியில் இருந்தனர்.அந்த ஆண்டில், இந்தியப் படைகள் சமய அடையாளங்களை அணியக் கூடாது. தலையில் குடுமி வைக்கக் கூடாது. ஐரோப்பிய ராணுவ உடைகளை மட்டுமே அணிய வேண்டும் என்ற கடுமையான விதிமுறைகள் உருவாக்கப்பட்டன.சிப்பாய்கள் அனைவரும் ஐரோப்பிய முறையில் தொப்பி அணிந்து, மாட்டுத் தோலால் ஆன பட்டையை வைக்க வேண்டும் என்ற உத்தரவால் இந்து, முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த 1,500 வீரர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது.அதனால் ஆங்கிலேயர்களுக்கு எதிராக அவர்கள் கிளர்ச்சியில் ஈடுபட முற்பட்டனர். இதனால் அவர்களுக்கு தலா 600 பிரம்படி தண்டனை வழங்கப்பட்டது.
     இந்த நடவடிக்கை அவர்களுக்கு இன்னும் கோபத்தை அதிகப்படுத்தியது வேலூர் கோட்டையில் அப்போது சிறை வைக்கப்பட்டிருந்த திப்பு சுல்தான் மகன்கள்தான்
    இந்த கிளர்ச்சிக்கு காரணம் என குற்றம் சாட்டி கடுமையான சித்ரவதைகள் தொடர்ந்தன.இந்நிலையில், ஆத்திரமடைந்த இந்திய சிப்பாய்கள் 1806-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி
    அதிகாலை உறக்கத்தில் இருந்த ஆங்கிலேய அதிகாரிகள் பலரைக் கொன்று குவித்தனர்.
    350 அதிகாரிகளில் 100 பேர் கொல்லப்பட்ட நிலையில், ஆங்கிலேயர் படைகள் சில மணி நேரத்தில் இந்திய சிப்பாய்கள் 350-க்கும் மேற்பட்டோரை கொன்று புரட்சியை அடக்கினர்.இந்த புரட்சியில் கொல்லப்பட்ட வீரர்களை வேலூர் கோட்டைக்குள் இருந்த கிணறு ஒன்றில் வீசி அக்கிணற்றை மூடியதாகக் கூறப்படுகிறது.
    கொலையுண்ட ஆங்கிலேய அதிகாரிகளின் உடல்கள் மீட்கப்பட்டு, கோட்டையின் எதிரே அடக்கம் செய்யப்பட்டு கல்லறைகள் எழுப்பப்பட்டன. இன்றைக்கும் அந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்ட ஆங்கிலேய அதிகாரிகளின் பெயர்கள் தாங்கிய கல்லறைகளை  காண முடியும்


    பிரமாண்டத்தையும் வரலாற்று பக்கங்களின் வடுக்களையும் தாங்கி  நிற்கும் வேலூர் கோட்டை நிச்சயம் நாம்  பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாகும்  ....
    அன்று  மன்னர்களின் பாதுகாப்பு அரணாக விளங்கிய கோட்டை அகழி இன்று படகு சவாரி செய்யும் சுற்றுலா தளமாக மாறியுள்ளது...தினமும்  அகழியில் சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ள படகு சவாரி நடக்கின்றது.
    மாலை நேரத்தில் அலங்கார ஒளிவிளக்குகள் வீச காட்சி தரும் கோட்டையை காணும் போது அன்று விளக்கொளி இல்லாத காலங்களில் இந்த கோட்டையில் வாழ்ந்த மனிதர்களின் காலத்தை அசைபோட மனம் நினைக்கிறது  

    0 comments:

    Post a Comment