Tuesday 10 September 2013

கற்பூரவள்ளி - மருத்துவ பயன்கள்!

By: Unknown On: 23:28
  • Share The Gag

  •  கற்பூரவள்ளி - மருத்துவ பயன்கள்




    கற்பூரவள்ளி மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி. கற்பூரவள்ளி (Coleus aromaticus) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். வாசனை மிக்க இச்செடியின் தண்டு முள்போல நீண்ட மயிர்த் தூவிகளைக் கொண்டிருக்கும். இதன் இலைகள் தடிப்பாகவும் மெதுமெதுப்பாகவும் இருக்கும்.

    கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும். இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது. கற்பூரவல்லியின் தண்டும், இலைகளும் பயன்தரக்கூடியவை. கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு முக்கிய மருந்து.

    வியர்வை பெருக்கியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. இலைச் சாற்றை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க சீதள இருமல் தீரும். இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும்.சூட்டைத் தணிக்கும்.

    இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல்,சளிக் காச்சல் போகும். இதன் இலைகளை எடுத்து கழுவி சாறெடுத்து இரண்டு மி.லி சாருடன் எட்டு மி.லி தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மார்பு சளி கட்டுக்குள் வரும்.

    இந்த மூலிகை குழந்தைகளின் அஜீரண வாந்தியை நிறுத்தக் கூடிய மருத்துவ குணத்தைப் பெற்றிருக்கிறது. கட்டிகளுக்கு இந்த இலையை அரைத்துக் கட்ட கட்டிகள் கரையும். தசைகள் சுருங்குவதைத் தடுக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு உள் மருந்தாகவும், கண் அழற்சிக்கும் இதன் சாறு மேல் பூச்சாக தடவ குணம் தரும்.

    மருத்துவ துறையில் இது நரம்புகளுக்குச் சத்து மருந்தாகிறது. மனக் கோளாறுகளைச் சரிசெய்யும். சிறுநீரை எளிதில் வெளிக் கொணரவும் பரிந்துரைக்கப்படுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தும் தாவரமாகவும் கருதப்படுகிறது.

    குழந்தைக்கு குடிப்பதற்காக கொதிக்க வைக்கும் நீரில், சுத்தமாக அலசி வைத்திருக்கும் 4 அல்லது 5 கற்பூரவல்லி இலைகளைப் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துவிடுங்கள்.

    இலையின் சாறு முழுமையாக நீரில் இறங்கி தண்ணீர் லேசாக பச்சை நிறத்தை அடைந்து இருக்கும். அந்த நீரை மட்டும் குழந்தை பருகுவதற்குக் கொடுங்கள். 2 அல்லது 3 நாட்களுக்கு இதுபோன்ற நீரையே கொடுத்து வாருங்கள்.குழந்தைக்கு சளியின் தீவிரம் கட்டுப்படும்.

    சுகப்பிரசவத்திற்கு தேவை சரியான எடையும், உடல் உழைப்பும்!

    By: Unknown On: 22:42
  • Share The Gag

  • சுகப்பிரசவத்திற்குப் பெண்களின் இடுப்பு எலும்பு விரிந்து கொடுப்பது மிக மிக முக்கியமான ஒன்று. இது கையில் வளையல் அணிவது போன்ற செயல்பாடுதான். சிறிய அளவுள்ள வளையல் பெரிய மணிக்கட்டு உள்ள கையில் எப்படி நுழையாதோ, அதுபோல இடுப்பு எலும்பு சிறியதாக இருந்து குழந்தையின் தலை பெரியதாக இருந்தால், குழந்தையின் தலை வெளியே வராமல் மாட்டிக்கொள்ளும்.

    பெண்கள் கருவுற்ற காலத்தில் இருந்து குனிந்து வீட்டைச் சுத்தம் செய்வது, அமர்ந்து துணி துவைப்பது போன்ற வீட்டு வேலைகளில் ஈடுபடுவது நல்லது. அமர்ந்தே வேலை செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ள பெண்கள் தினமும் கட்டாயம் நடைப்பயிற்சி செய்தே ஆக வேண்டும்.

    மேலும், உடற்பயிற்சி செய்யும்போது எண்டோர்ஃபின் என்கிற ஹார்மோன் சுரக்கும். இதனால், உடல் தசைகள் வலுப்பெற்று, குழந்தை சரியான நிலையில் இருக்கும். பெண்களின் பிறப்புறுப்பு நல்ல நெகிழ்வுத் தன்மையுடன் இருக்கும். பிரசவமும் சுலபமாகும். தினமும் காலையில், முக்கால் மணி நேரம் மூச்சு இரைக்காதவாறு மெதுவாக நடக்கலாம்.

    கர்ப்பமாக இருக்கும்போது பெண்களின் எடை 10 முதல் 12 கிலோ வரை கூடலாம். ஆனால், சில பெண்களுக்கு 15 கிலோவுக்கும் அதிகமாக எடை கூடும். இவர்களுக்கு இரட்டைக் குழந்தையாக இருக்கலாம் அல்லது குழந்தையின் எடை அதிகமாக இருக்கலாம்.

    இவை இரண்டுமே இல்லை என்றால் உடலின் எந்தப் பகுதியிலோ நீர் கோத்திருக்கிறது என அர்த்தம். இதனால், கர்ப்பிணிகளின் கால் வீங்கிக் காணப்படும். பொதுவாகவே கர்ப்பிணிகளுக்கு கால் வீக்கம் இருப்பது இயல்புதான். ஆனால், இந்த வீக்கம் கணுக்காலுக்குக் கீழே மட்டும் இருக்கும்.

    அதுவும் நன்றாகத் தூங்கி எழுந்ததும் சரியாகிவிடும். அப்படி இல்லாமல் கணுக்காலைத் தாண்டியும் வீக்கம் இருந்தால் உப்பு அதிகமாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். சிறுநீர்ப் பரிசோதனை மூலம் உப்பின் அளவைக் கண்டறிந்து, அதைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும்.

    இத்துடன் ரத்த அழுத்தம் அளவுக்கு அதிகமாகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லாவிடில் பேறுகாலத்தின்போது வலிப்பு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற பிரச்னைகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துக் குணப்படுத்த வேண்டியது அவசியம். 

    குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு செய்து கொண்டவர்கள் கவனத்திற்கு!

    By: Unknown On: 22:38
  • Share The Gag

  • குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்து கொ‌ண்ட பெ‌ண்களு‌க்கு உட‌ல் எடை அ‌திக‌ரி‌க்க அ‌திக வா‌ய்‌ப்புக‌ள் இரு‌ப்பது தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது. த‌ற்போது உ‌ட‌ல் எடை உய‌ர்வு ஒரு ‌மிக‌ப்பெ‌ரிய ‌பிர‌ச்‌சினையாக உருவெடு‌த்து‌ள்ள ‌நிலை‌யி‌ல், ‌வீ‌ட்டு வேலைகளை செ‌ய்ய இ‌‌ய‌ந்‌திர‌ங்க‌ள் வ‌ந்தது‌ம், உணவு‌‌ப் பழ‌க்கமு‌ம் காரண‌ங்களாக இரு‌ந்தாலு‌ம், குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சையு‌ம் மு‌க்‌கிய‌க் காரண‌ம் எ‌ன்‌கிறது மரு‌‌த்துவ‌ம்.

    குடும்பக்கட்டுப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சை‌க்கு‌ப் ‌பிறகு பெ‌‌ண்க‌ளி‌ன் உட‌லி‌ல் ப‌ல்வேறு மா‌ற்ற‌ங்க‌ள் ஏ‌ற்படு‌கி‌ன்றன. சினைப்பையில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பில் பிரச்சினை ஏற்படுகிறது. அடைப்பு காரணமாக இந்த ஹார்மோன் சரியாக சுரக்காது. இதுதான் உடலில் அதிக கொழுப்பு சேராமல் தடுக்கின்ற ஹார்மோன்.

    மருத்துவர்கள் இதை `புரொடக்டிவ் ஹார்மோன்' என்று அழைக்கிறார்கள். குடும்பக்கட்டுப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சை‌ காரணமாக இந்த ஹார்மோன் சுரப்பு தடைபட்டு, அதிகப்படியான கலோரிகள் தேங்கி, கொழுப்புச்சத்து சேர்ந்து உடல் குண்டாகி விடுகிறது. குடும்பக்கட்டுப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சை‌ செய்து கொண்ட பெண்கள் உணவு விஷயத்தில் மிகவும் கண்டிப்புடன் இருக்க வேண்டும்.

    கலோரிகள் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். நார்ச்சத்துகள் நிறைந்த உணவுப்பொருட்களை அதிகமாகச் சாப்பிட வேண்டும். காய்கறிகள், பழங்கள், கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். குறைந்தது ஒரு நாளைக்கு 5 கிலோமீட்டர் தூரமாவது நடக்கலாம். முடிந்தால் நீச்சல் பயிற்சிக்குச் செல்லலாம்.

    தொடர்ந்து யோகா, தியானம் செய்வது நல்ல பலனைத் தரும். சிலர் கர்ப்பத்தைத் தவிர்ப்பதற்காகக் கருத்தடை மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிடுவர். இந்த மாத்திரைகளால் கர்ப்பத்திற்கான ஹார்மோன் சுரப்பில் தடை ஏற்பட்டு, கரு உருவாவது தடுக்கப்படும். இந்த மாத்திரைகளை அனைவரும் எடுத்துக் கொள்ள முடியாது.

    குறிப்பாக கால் வீக்கம், பித்தப்பையில் கல், ரத்தத்தில் அதிக கொழுப்பு உள்ளவர்கள் கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தினால் பின் விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். சில பெண்கள் பரிசோதனை செய்து கொள்ளாமலேயே காப்பர்-டி பொருத்திக் கொள்கிறார்கள்.

    பின்னர் ரத்தப்போக்கு அதிகமாகி அவதிப்படுகின்றனர். எனவே, முழு உடல் பரிசோதனை செய்து கொண்டு, எந்தப் பிரச்சினையும் இல்லை என்றால் மட்டுமே காப்பர்-டி பொருத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக ரத்தம் எளிதில் உறைதல், வெள்ளைப்படுதல், அதிக ரத்தப்போக்கு போன்ற பிரச்சினைகள் உள்ள பெண்கள் கண்டிப்பாக காப்பர்-டி பொருத்திக் கொள்ளக் கூடாது.

    அதேபோல் அதிகபட்சமாக 5 வருடங்கள் மட்டுமே காப்பர்-டியைப் பயன்படுத்தலாம். அதற்குமேல் பயன்படுத்தினால் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. நா‌ம் சா‌ப்‌‌பிடு‌ம் கொழு‌ப்பை‌ உட‌லி‌ல் சேராம‌ல் தடு‌க்கு‌ம் ஈ‌ஸ்‌ட்ரோஜ‌‌ன் ஹா‌ர்‌மோ‌ன், குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சை‌க்கு‌ப் ‌பிறகு ச‌ரியாக சுர‌க்காம‌ல் போவதை‌க் கவன‌த்‌தி‌ல் கொ‌ண்டு, அத‌ற்கு மு‌ன்பு சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்த அ‌திக‌ப்படியான கொழு‌ப்பு உணவுகளை த‌வி‌ர்‌ப்பது உட‌ல் எடையை பராம‌ரி‌க்க உதவு‌ம்.

    'நன்மைக்கு நன்மையே நடக்கும்;.........குட்டிக்கதை

    By: Unknown On: 22:00
  • Share The Gag


  • ஒரு நாள் கந்தன் தந்தையுடன் மலைகள் இருந்த பகுதி ஒன்றில் நடந்து சென்றுக் கொண்டிருந்தான்.அப்போது கால் தடுக்கி விழ நேரிட்டது...வலியால் 'ஆ'எனக் குரல் கொடுத்தான்..

    'ஆ' என எதிரொலியும் கேட்டது...

    கந்தனுக்கு ஒரே ஆச்சரியம்..

    'யார் நீ 'என்றான்.

    பதிலுக்கு 'யார் நீ' என்று கேட்டது...

    'உன்னை பாராட்டுகிறேன்; என்றான்.

    அதுவும் அப்படியே கூறிற்று.

    அப்பாவிடம் கந்தன்..'அப்பா..என்னது இது;என்றான்.

    அவன் அப்பா சொன்னார்..'கந்தா..இதன் பெயர் எதிரொலி' ஆகும். உண்மையில் நாம் என்ன சொல்கிறோமோ..அதையே இது திரும்பச்சொல்லும்.

    நீ இப்போது..'நீ சொல்கிறபடி செய்கிறேன்' என்று சொல் என்றார்..

    கந்தனும் ..அப்படியே சொல்ல..திரும்ப எதிரொலியும் 'நீ சொல்கிறபடி செய்கிறேன் 'என்றது.

    கந்தா...இதிலிருந்து தெரிந்து கொள்..நல்லதோ..தீமையோ எது நாம் செய்தாலும் அதுவே நமக்குத் திரும்ப நடக்கும்.

    இதைத்தான் இந்த எதிரொலி உணர்த்துகிறது.

    ஆகவே எப்போதும் நாம் அனைவருக்கும் நல்லதே செய்ய வேண்டும் என்றார்

    பால்காரனும் ...பேராசையும்.........குட்டிக்கதை

    By: Unknown On: 21:05
  • Share The Gag


  • பால்காரன்...தன் மாட்டிலிருந்து கறந்த பாலை ஒரு குடத்தில் இட்டு....அதை தலையில் சுமந்தபடியே அடுத்த ஊருக்கு ..விற்க புறப்பட்டான்.

    பாலை விற்றதும் என்ன செய்யலாம் என்று எண்ணமிட்டுக் கொண்டிருந்தான்.

    இப்பாலை விற்று வரும் பணத்தில் நூறு கோழிகள் வாங்குவேன்...அவற்றை வளர்த்து சந்தையில் அதிக பணத்திற்கு விற்பேன்.

    விற்று வந்த பணத்தில் மூன்று அல்லது நான்கு ஆட்டுக் குட்டிகளை வாங்குவேன்.வீட்டின் அருகில் உள்ள புல்வெளியில் அவை மேயும்..அவை வளர்ந்தவுடன் அவற்றை விற்று ஒரு பசுமாட்டை வாங்குவேன்.

    அப்போது என்னிடம் பசுமாட்டின் எண்ணிக்கை அதிகரிக்கும்.அதனால் ஒரு குடத்திற்கு பதில் இரு குடத்தளவு பால் விற்க கிடைக்கும்.

    அது விற்ற பணம் ஏராளமாய் கிடைக்கும்...அதில் சந்தோஷமாக இருப்பேன்,,,ஆனந்தக் கூத்தாடுவேன் என...தலையில் இருந்த குடத்திலிருந்து கைகளை எடுத்துவிட்டுக் குதித்தான்.

    தலையில் இருந்த குடம் கீழே விழுந்து பால் முழுவதும் தெருவில் ஆறாய் ஓடியது.

    அவனது பேராசை எண்ணங்கள்...இருந்ததையும் அவனை விட்டு ஓடிப்போகச் செய்தது.

    பேராசை பெரு நஷ்டம்.

    'எல்லோரும் நல்லவரே'.........குட்டிக்கதை

    By: Unknown On: 18:13
  • Share The Gag




  • ஒரு நாள் ஒரு புழு ஒன்று புல்வெளியில் தன் குட்டிப் புழுவுடன் விளையாடிக் கொண்டிருந்தது.

    அதை மரக்கிளையில் அமர்ந்திருந்த புறா ஒன்று பார்த்தது.அதைக் கொத்தித் தின்ன விரும்பியது.அதை பார்த்த புழு அசையாமல் இருந்தது...புழுவின் இந்த செய்கை புறாவிற்கு வியப்பைத் தந்தது...'நான் உன்னை தின்ன வருவது தெரிந்ததும்..அசையாமல்..என்னிடம் பயம் இல்லாமல் இருக்கிறாயே..எப்படி' என்றது புறா.

    'என் மனதிற்குள் ...நீ என்னை துன்புறுத்தமாட்டாய் என்றே தோன்றுகிறது'என்றது புழு.

    'என் மனதில் உள்ளது உனக்கு எப்படித் தெரியும்'என புறாக் கேட்டது.

    'உன்னைப் பார்த்ததும்..உன்னை என் தோழனாக நினைத்து விட்டேன்..நண்பனுக்கு ஆபத்து வந்தால் காப்பவன் நண்பன் அல்லவா..உயிர் காப்பான் தோழன் ஆயிற்றே..சரி..உனக்கு ஒன்று சொல்கிறேன்..வேடன் ஒருவன் வலைவீசி உன்னைப் பிடித்தால் உனக்கு வருத்தம் ஏற்படாதா ...? அதே போன்று தானே..நீ என்னைத் தின்றால் நானும் வருத்த மடைவேன்.

    அது போலவே..அந்த வேடன் உன்னை விடுவித்தால்..நீ எவ்வளவு சந்தோஷம் அடைவாய்...நீயும் என்னை விட்டு விட்டால் நானும் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்..அதுதானே நட்பின் இலக்கணம் என்றது.

    புறா...புழுவின் பேச்சுத் திறமையை பாராட்டி விட்டு புழுவை விட்டுச் சென்றது.

    நல்ல குணம் கொண்ட புறா போன்றவர்கள் ஒருவருக்குக் கெடுதல் செய்யும்போது ..எடுத்துச் சொன்னால் தன்னைத் திருத்திக்கொள்வார்கள்.

    உலகில் எல்லோரும் நல்லவர்களே!.

    புத்திசாலித்தனம்...........குட்டிக்கதை

    By: Unknown On: 18:12
  • Share The Gag




  • படிக்காத ஒருவன்...மெத்தப் படித்த ஒருவனும் அடுத்த ஊருக்குச் செல்ல புறப்பட்டனர்.படிக்காதவன் ஒரு பை நிறைய பணம் எடுத்துக்கொண்டான்.படித்தவனோ கையில் ஒன்றும் எடுத்துக்கொள்ளவில்லை.

    சிறிது தூரம் அவர்கள் நடந்ததும் இருண்ட காடு வந்தது,காட்டினுள் நடந்தனர்..பசிக்கு.. அங்கு மரங்களில் பழுத்திருந்த பழங்களை உண்டனர்.

    திடீரென ..திருடர்கள் கூட்டம் ஒன்று அவர்களை வழிமறித்தது.

    படிக்காதவனிடம் இருந்த பணமூட்டையைக் கேட்க படிக்காதவன் கொடுக்க மறுக்க..அவனை நைய்யப் புடைத்து பணப்பையினை பிடுங்கிக் கொண்டார்கள்.

    படித்தவனைப் பார்த்து..'உன்னிடம் இருப்பதையும் கொடு' என்றனர்....

    படித்தவன் தன்னிடம் ஒன்றுமில்லை என்று கூறியதோடு திருடர் தலவனைப் புகழ்ந்து புத்திசாலித்தனமாக ஒரு இனிய பாடலைப் பாடினான்...பாடலைக் கேட்ட திருடர் தலைவன் மகிழ்ந்தான். படிக்காதவனிடமிருந்து பிடுங்கிய பணமூட்டையிலிருந்து சிறிது பணத்தை படித்தவனிடம் எடுத்துக் கொடுத்தான்.

    ஒருவனது புத்திசாலித்தனம் அவனை ஆபத்துக் காலத்தில் காப்பாற்றும்.அதற்கு கல்வியறிவு அவசியம்.

    'கிணற்றுத் தவளையும்...கடல் தவளையும்'.........குட்டிக்கதை

    By: Unknown On: 18:10
  • Share The Gag




  • ஒரு கிணற்றில் ஒரு தவளை வாழ்ந்து வந்தது..அது அங்கேதான் பிறந்து வளர்ந்ததால் கிணற்றைத் தவிர அதற்கு எதுவும் தெரியாது.

    ஒரு நாள் வேறு தவளையொன்று அக்கிணற்றுக்கு வந்தது...இரு தவளைகளும் பின் நட்புடன் பழக ஆரம்பித்தன...

    ஒரு நாள் புது தவளை 'இந்தக் கிணறு சிறியதாக இருக்கிறது..நான் வாழும் இடம் பெரிது' என்றது.

    'நீ எங்கே வாழ்கிறாய்?' என் கிணற்றுத்தவளை கேட்டது.

    புதிய தவளை சிரித்தவாறே ....'நான் கடலிலிருந்து வந்தேன் ..கடல் மிகப்பெரியதாக இருக்கும்' என்றது.

    'உன் கடல்..என் கிணறு போல இருக்குமா?' என்றது கிணற்றுத்தவளை...

    அதற்கு புதிய தவளை ..'உன் கிணற்றை அளந்து விடலாம்...சமுத்திரத்தை யாராலும் அளக்கமுடியாது'என்றது.

    'நீ சொல்வதை என்னால் நம்ப முடியாது..நீ பொய்யன்.உன்னுடன் சேர்ந்தால் எனக்கு ஆபத்து'என்றது கிணற்றுத்தவளை. மேலும்..'பொய்யர்களுக்கு இங்கு இடமில்ல.நீ போகலாம்'என கடல் தவளையை விரட்டியடித்தது.

    உண்மையில் இழப்பு கிணற்றுத்தவளைக்குத் தான்.

    நாமும் நமக்கு எல்லாம் தெரியும்..நாம் இருக்கும் இடமே உலகம்,,,நம் கருத்து எதுவாயினும் அதுவே சிறந்தது என எண்ணி...நம் அறிவை வளர்த்துக் கொள்ளாமல் கிணற்றுத் தவளையாய் இருந்து விடக்கூடாது.

    பள்ளி மாணவர்களுக்கு கூகுள் நடத்தும் போட்டி!

    By: Unknown On: 18:05
  • Share The Gag

  • கூகுள் நிறுவனம் நடத்தும் படைப்பாக்கத் திறன் போட்டியில் ஐந்து முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம். ஒரு கம்ப்யூட்டரும், இன்டர்நெட் இணைப்பும் இருந்தால் போதும், இப்போட்டியில் பங்கேற்பது எளிது. ஐந்து மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும், ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும் போட்டி நடைபெறும்.

    மாணவர்கள் ஏதேனும் ஒரு கதை, விளையாட்டு, இசைப் போட்டி, கார்ட்டூன் அல்லது ஏதேனும் ஒரு வித்தியாசமான படைப்பை பற்றி சிந்தித்து, MIT Media Lab உருவாக்கியுள்ள ஸ்கிராட்ச் (Scratch) புரோகிராமிங் லேங்க்வேஜை உபயோகித்து புதிதாக ஏதேனும் ஒன்றை உருவாக்கவேண்டும். ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் Scratch அல்லது  C+ + அல்லது Java  மொழியைப் பயன்படுத்தி படைப்புகளை உருவாக்கலாம்.

    ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். வெற்றி பெறும் ஒன்பது மாணவர்களுக்கு சான்றிதழ்களும், ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள டேப்லெட் அல்லது அதற்கு இணையான எலெக்ட்ரானிக் பொருட்கள் பரிசாக வழங்கப்படும்.

    விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.09.2013

    விவரங்களுக்கு


    அட!

    By: Unknown On: 17:48
  • Share The Gag
  • இந்திய ரயில்வே சமீபத்தில் ரயில் ராடார் (railradar.trainenquiry.com) என்கிற புது இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

    இந்தத் தளத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால் இந்தியா முழுவதும் செயல்பாட்டில் உள்ள ரயில்களின் நிலையை அதாவது இந்த நிமிடத்தில் எந்தெந்த ரயில்கள் எங்கெங்கு சென்றுகொண்டிருக்கின்றன என்கிற தகவலை கூகுள் வரைபடத்தின் மூலம் மிகவும் எளிமையான முறையில் அறிந்துகொள்ளலாம்.

    இத்தளத்திற்குச் சென்றால் நீலம் மற்றும் சிவப்பு அம்புக்குறிகள் நிறைந்த இந்திய வரைபடம் தோன்றும். நீல நிற அம்புக்குறிகள் சரியான நேரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ரயில்களையும், சிவப்பு நிற அம்புக்குறிகள் தாமதமாக ஓடிக்கொண்டிருக்கும் ரயில்களையும் குறிக்கும். நீல நிற அம்புக்குறிகளில் கர்சரை வைத்து கிளிக் செய்தால், ரயிலின் பெயர் மற்றும் எண், ரயில் கிளம்பிய நாள், கடைசியாக கடந்த ரயில் நிலையம். அடுத்துள்ள ரயில் நிலையம், அவற்றிற்கிடையே உள்ள தொலைவு, அடுத்த நிலையத்தைச் சென்றடைய எவ்வளவு நேரமாகும் போன்ற பல தகவல்கள் நம் முன்னே தோன்றும். ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் இத்தளம் அப்டெட் செய்யப்பட்டுக் கொண்டே இருக்கும்.

    இந்தியன் ரயில்வேஸ்  சென்டர் பார் ரயில்வே இன்பர்மேஷன்  சிஸ்டம் (CRIS) என்ற அமைப்பின் உருவாக்கமே இத்தளம். ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வளைத்தளங்களின் மூலமாகவும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது மட்டுமின்றி,  செல்போன்களிலும் இந்த  வசதியைப் பெறலாம்.

    இதன் மூலம் மக்கள் வீட்டில் இருந்த வண்ணம் ரயில்களின் நிலையை அறிந்துகொண்டு,  அனாவசிய டென்ஷன் இல்லாமல், நிம்மதியாக உரிய நேரத்திற்குக் கிளம்பலாம்.  மேலும் தகவல்களுக்கு: railradar.trainenquiry.com  என்கிற இணையதளத்தில் காணலாம்.

    இனி பார்வையற்றவர்களாலும் காட்சிகளைக் காண முடியும் ! விசேஷக் கருவிக் கண்டுபிடிப்பு!

    By: Unknown On: 17:39
  • Share The Gag


  • பார்வையற்றோர்  காட்சிகளைக் காண வழி செய்யும் ஒருவித விசேஷக் கருவியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பல வருடங்களாக கண்கள், பார்வை குறித்த ஆராய்ச்சியில்  ஈடுபட்டு வந்த ஜெருசலேமின் ஹீப்ரு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தற்போது இந்தக் கருவியைக் கண்டுபிடித்துள்ளனர்.

    இதன் மூலம் காட்சிப் பதிவுகளிலிருந்து வரும் ஒளி அலைகள் (Light waves) பார்வையற்றோரின் காதுகளில் பொருத்தப்படும் இந்தக் கருவியில் ஒலி அலைகளாகப் (Sound waves)  பதிவு செய்யப்படுகிறது. பின்பு மீண்டும் ஒலி அலைகளை  ஒளி அலைகளாக மாற்றி (காட்சி) அதனை மூளைக்கு அனுப்புகிறது. எனவே மனித மூளையில் உள்ள ஒளி உணரும் பகுதி, காட்சிகளை அப்படியே படம் பிடித்தாற்போல் உணர்ந்து கொள்கிறது.

    இது குறித்து ஜெருசலேமிலுள்ள ஹீப்ரு பல்கலைக்கழகத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் அமிர் அமேதி கூறுகையில்;

    இந்த நவீனக் கருவியில் ஒருவித கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமரா, காட்சிகளின் ஒளி அலைகளை உள்வாங்கி பதிவு செய்துகொள்ளும். இதனுள் உள்ள, ‘விஷுவல் வேர்டு ஃபார்ம்’ (Visual Word Form) எனும் தொழில்நுட்பம் காட்சிப் பதிவுகளுக்கான ஒலி மற்றும் ஒளியியல் மொழிகளைக் கொண்டுள்ளது.

    எனவே ஒளி அலைகளை (Light waves) ஒலி அலைகளாக (Sound waves) மாற்றி மூளைக்கு அனுப்பும். மனித மூளையிலுள்ள காட்சிகளை உணரும் பகுதியில் இவை மீண்டும் ஒளி அலைகளாக மாற்றம் செய்யப்படுவதால் பார்வையற்றவர்களுக்கு காட்சிகளை நேராகக் காண்பது போன்ற உணர்வு ஏற்படும். மேலும் இந்தக் கருவியில் உள்ள, சென்சரி சப்ஸ்டியூசன்கள் காட்சிப் பதிவுகளை, ‘விஷுவல் டூ ஆடியோ - ஆடியோ டூ விஷுவல்’எனும் முறையில் காட்சிகளாக மாற்றம் செய்கிறது. இதற்கு  சவுண்ட் ஸ்கேப்"  (Sound Scape) என்று பெயர்.

    தற்போது முதல் கட்டமாக இந்தக் கருவியை பார்வையற்றவர்களிடம் சோதனை செய்ததில் அவர்களால் காட்சிகளைத் தெளிவாகக் காண முடிந்தது. முதல் கட்ட ஆராய்ச்சியில் வெற்றி பெற்றுள்ளோம். அடுத்த கட்டமாக முழுப் பணிகளும் முடிந்தபின் கருவியை ஒளி வெளியிடுவோம். இதன் மூலம்  பார்வையற்றவர்களின்  நீண்ட நாள் கனவு நிறைவேறும். அவர்களாலும் இந்த உலகத்தைக் காண முடியும்" என்கிறார் அமிர் அமேதி.

    அச்சச்சோ!

    By: Unknown On: 17:31
  • Share The Gag


  • 300 வருடங்கள் பழைமையான பேலஸ், 200 ஏக்கர் நிலங்கள், விமான நிலையம், 3 விமானங்கள், ரோல்ஸ் ராய்ஸ் உள்ளிட்ட 18 கார்கள், 1,000 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள், வங்கி இருப்புப் பணம் என மொத்த சொத்தின் இன்றைய மதிப்பு 20,000 கோடி.

    ஆம். பிரிட்டீஷ் இந்தியாவின் செல்வச் செழிப்பான சீக்கிய மஹாராஜா ஹரிந்தர் சிங் பிரார். இவருக்குச் சொந்தமான சொத்துக்களின் பட்டியல்தான் மேலே உள்ளவை. பஞ்சாபிலுள்ள ஃபரித்கோட்டை ஆட்சி செய்தவர் இவர். ஹரிந்தர் சிங்கிற்கு மொத்தம் 3 மகள்கள், ஒரு மகன்.

    1981-இல் ஹரிந்தர்சிங் பிரார் தன் ஒரே மகனை சாலை விபத்தில் பறிகொடுத்தார். இதனால் மிகுந்த மன வேதனை அடைந்த மஹாராஜா தன் சொத்துக்களை நிர்வகிக்க ஓர் அறக்கட்டளையை நிறுவினார். அதில் அவரின் பணியாட்கள், அலுவலர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர்.

    1989-இல் மஹாராஜா மரணமடைந்ததும் அவர் எழுதிய உயில் வெளிச்சத்திற்கு வந்தது. அதில் மூத்த மகள் அம்ரித் கவுர்  அப்பாவின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்துகொண்டதால் மஹாராஜா அவருக்கு சொத்துக்கள் ஏதும் தர விரும்பவில்லை. மேலும் அறக்கட்டளையின் சொத்துக்கள் பொதுச்சொத்தாக இருக்கும் என மஹாராஜா எழுதியதாக உயில் இருந்தது.

    இதை எதிர்த்து 1992-இல் நீதிமன்றம் சென்றார் மூத்த மகள் அம்ரித் கவுர். ‘என் அப்பா ஒருபோதும் இப்படிப்பட்ட உயிலை எழுதவில்லை என்றும் என்னை அவர் புறக்கணிக்கவில்லை, அவரின் இறப்புவரை நான் உடனிருந்தேன்’என தன் தரப்பு வாதத்தை முன்வைத்தார். 21 வருடங்களாக நடைபெற்றுவந்த வழக்கில் தற்போது  தீர்ப்பளித்திருக்கிறது சண்டிகர் நீதிமன்றம்.

    ‘மஹாராஜா எழுதியதாக சொல்லப்படும் உயில் போலியானது, திருத்தப்பட்டது. அறக்கட்டளை நிர்வாகிகளின் திட்டமிட்ட சதி இது. எனவே மனைவியும் இளைய மகளும் தற்போது இறந்து விட்டதால் அறக்கட்டளையின் வசம் இருக்கும்  அவரின் சொத்துக்கள் யாவும் உயிரோடு இருக்கும் 2 மகள்களுக்கே சேரும்’ என்றது அந்தத் தீர்ப்பு.

    21 வருடங்களாக நடைபெற்றுவந்த வழக்கில் நாங்கள் ஜெயித்திருக்கிறோம். எனது தந்தை ஏமாற்றப்பட்டிருக்கிறார். எனவேதான் இந்த வழக்கில் நான் போராட வேண்டியது அவசியமானதாக இருந்தது. இது  வெறும் பணம் என்பது மட்டுமல்ல, மோசடியை வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்பதே என் நோக்கம்.

    வழக்கைத் தொடர்ந்தபோதே கடைசி வரை நான் போராடத் தயாராக இருந்தேன். எனது அப்பாவின்  சொத்துக்களுள் ஒன்றான நான் பிறந்து வளர்ந்த இடத்திற்குச் செல்லக்கூட நான் அனுமதிக்கப்படவில்லை"என்கிறார், வழக்கைத் தொடர்ந்த மூத்த மகளான அம்ரித் கவுர். இவர் தற்போது சண்டிகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    இதில் குறிப்பிடத்தக்க  விஷயம் 2001-இல் இறந்து போன மஹாராஜாவின் இளைய மகள் மஹிபிந்தர் சிங் கடைசிவரை திருமணமே செய்துகொள்ளவில்லை. தன்வாழ் நாளின் கடைசி 12 ஆண்டுகள் மிகவும் வறுமையில் வாடினார்.  நீதிமன்றத் தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தவர் கடைசியில் இவர் இறந்து 12 வருடங்களுக்குப் பிறகே தீர்ப்பளிக்கபட்டிருக்கிறது.

    ஃபரித்கோட்டின் இளைய இளவரசி இன்று உயிரோடு இருந்திருந்தால் 20,000 கோடிக்கு அதிபதி அவர்

    தமிழக மாணவர்களின் கண்டுபிடிப்புகள்!

    By: Unknown On: 17:26
  • Share The Gag

  • தெரு விளக்குகளில் பயன்படுத்தப்படும் சோடியம் விளக்குகள் அதிக அளவு மின்சாரத்தை எடுத்துக் கொள்பவை. வெப்பத்தையும் அதிகமாக உமிழும்.மேலும் தெரு விளக்குகளை தினசரி நேரத்திற்கேற்ப on, off செய்ய வேண்டிய வேலையும் உள்ளது. சில நேரங்களில் கவனக்குறைவாக இருந்துவிட்டால் பகல் முழுவதும் தெரு விளக்கு எரிந்து மின்சாரம் வீணாகிறது. ஆனால் இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் தெரு விளக்கு, சூரிய வெளிச்சம் வந்தவுடன் அணைந்து விடும். சூரிய வெளிச்சம் குறைந்தவுடன் தானாக எரியத் தொடங்கிவிடும்.மேலும் மனிதர்கள் மற்றும் வாகனங்கள் தெரு விளக்கை நெருங்கும்போது தானாகவே வெளிச்சத்தை அதிகப்படுத்திக் கொள்ளும்.ஆட்கள் நடமாட்டம் இல்லாத போது குறைவாக ஒளிரும்.

    சில காலம் முன்னர் நிலவிய கடும் மின் வெட்டு காரணமாக எங்கள் வீட்டில் அனைவரும் சிரமப்பட்டோம். ஆனால் பகல் நேரங்களில் தெரு விளக்குகள் வீணாக எரிவதை பல முறை பார்த்துள்ளேன்.இப்படி வீணாகும் மின்சாரத்தைச் சேமித்தால் மின்வெட்டைக் குறைக்கலாம் என யோசித்தேன். எனவே அதற்காக இந்தத் தானியங்கி தெரு விளக்கை உருவாக்கினேன்.இந்தத் தெருவிளக்கில் சோடியம் பல்பிற்கு மாற்றாக 30 வாட்ஸ் எல்.இ.டி. பல்புகளை பயன்படுத்தியுள்ளதால் மின்சாரம் அதிக அளவில் சேமிக்கப்படும். இதில் 25 வாட்ஸ் திறனுள்ள எல்.இ.டி. பொருட்கள் மற்றும் ஆட்கள் மின் கம்பத்தை நெருங்கும் போது ஒளிரவும், 5 வாட்ஸ் திறனுள்ள எல்.இ.டி. யாரும் இல்லாத நேரத்தில் சாதாரணமாக ஒளிரவும் பயன்படும். தெரு விளக்கில் பொருத்தப்பட்டுள்ள எல்.டி.ஆர். (light dependent resistor)தொழில்நுட்பம் பகல் பொழுது வந்ததும் பல்பு ஒளிர்வதை நிறுத்திவிடும்.இதனால் தெரு விளக்கை யாரும் பராமரிக்கத் தேவையில்லை" என்கிறார் ஹர்ஷதா.

    தற்போது பயன்பாட்டில் உள்ள தெரு விளக்குகளில் இந்தத் தொழில்நுட்பத்தைப் பொருத்தினாலே போதுமானது.இதற்கு ஒரு தெரு விளக்கிற்கு 450 முதல் 500 ரூபாய் வரை செலவாகும். அதிக அளவில் உற்பத்தி செய்யும்போது விலை மேலும் குறையலாம்.
     

    சைவ சிக்கன் / மட்டன் தயார்! – லண்டன் விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு!

    By: Unknown On: 17:06
  • Share The Gag


  • சைவ மட்டன், சிக்கன் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? என்ன வியப்பா? உண்மை தான். சோயா எண்ணெயில் இருந்து சிக்கன், கேரட், உருளைக்கிழங்கில் இருந்து மாட்டிறைச்சி தயாரிக்கலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இறைச்சி தயாரிப்பில் கடந்த மாதம் தான் முதன்முதலில் புரட்சி ஏற்படுத்தப்பட்டது. 


    லண்டனில் உள்ள சில விஞ்ஞானிகள், சோதனைக்குழாயில் குழந்தையை மட்டும் தான் உருவாக்க முடியுமா? இறைச்சியை செயற்கையாக உருவாக்க முடியாதா என்று சவால் விட்டு, ஆராய்ச்சியில் இறங்கினர். பல மாத ஆராய்ச்சிக்கு பின், அவர்கள் கடந்த மாதம் பெரும் புரட்சி ஏற்படுத்தி காட்டினர். உயிருள்ள பசுவின் ஸ்டெம் செல்லில் இருந்து ஒரு வித பசையை எடுத்து, அதை சோதனைக்குழாயில் வைத்து வளர்த்து, மாட்டிறைச்சியை உருவாக்கினர். இதற்கு ‘பிராங்கன் பர்கர்’ என்று பெயரிட்டனர்.

    sep 10 - veg - non veg burger

     


    கடந்த வாரம் நெதர்லாந்து நாட்டின் விஞ்ஞானி ஜாப் கோர்ட்டேவெக், ஒரு படி மேலே போய், சைவ மட்டன், சிக்கனை உருவாக்கி பெரும் சாதனை படைத்துள்ளார். இதற்கு இவர் பயன்படுத்திய பொருட்கள் என்ன தெரியுமா? எல்லாம் சைவ, இயற்கை தாவரங்கள், மூலிகைகள் தான். 


    நெதர்லாந்து நாட்டின் ஹாக் நகரில் உள்ள தன் ஆராய்ச்சி நிலையத்தில் பல மாதங்கள் இது தொடர்பாக ஆராய்ச்சி செய்து வந்தார் கோர்ட்டேவெக். சோயா எண்ணெயில் இருந்து பசை போன்ற திரவத்தை உருவாக்கி, அதை ஒரு அடர்த்தியை தரும் கருவியில் வைத்து சிக்கன் போன்ற உருவத்துடன் உணவு வகையை உருவாக்கினார். அதன் பின், சிக்கன் டேஸ்ட் கிடைப்பதற்காக, அத்துடன், தொழில்நுட்ப ரீதியாக சில மூலிகைகளை சேர்த்துள்ளார். 


    இதன் பின் அவருக்கு ஒரு ஐடியா கிடைத்தது. அதை வைத்து, இப்போது சூப்பர் சைவ சிக்கன் தயாரித்து விஞ்ஞானிகள் சிலருக்கு விருந்து படைத்தார். பலரும் இது உண்மையான சிக்கன் போலவே இருப்பதாக பாராட்டினர். இத்துடன் அவர் நிற்கவில்லை. சோயா போலவே, வேறு காய்கறி, மூலிகைகள், தாவரங்களை வைத்து மட்டன் உருவாக்க விரும்பினார். அதற்கு ஆராய்ச்சிகளை தொடர்ந்தார். அதிலும் அவர் வெற்றி கண்டார். 


    சோயாவுக்கு பதிலாக, கேரட், உருளைக்கிழங்கு, பட்டாணி போன்றவற்றை வைத்து அதே கருவியில் மிகுந்த வெப்பத்தில் நூலிழைகள் போல ஒரு உணவுப் பொருளை உருவாக்கி, அத்துடன், தானிய வகைகளை சேர்த்து, தொழில்நுட்பத்தின் மூலம் மட்டன் உருவாக்கினார். அசல் மாட்டிறைச்சி போலவே இருப்பதாக அதை ருசித்த சக விஞ்ஞானிகள் கூறினர். 


    பத்திரிக்கையாளர்களையும் அழைத்து இந்த சைவ மட்டன், சிக்கன் விருந்து அளித்தார் இந்த விஞ்ஞானி கோர்ட்டேவெக். அவர்களும் இவற்றை ருசித்து சாப்பிட்டு விட்டு , சூப்பராக இருக்கிறது இந்த சைவ மட்டன், சிக்கன். சைவ பிரியர்களும் இனி தைரியமாக மட்டன் , சிக்கன் சாப்பிடலாம்’ என்று கூறினர்.
    நெதர்லாந்தில் ஹாக் நகரில் பிரதான சாலையில் கோட்டேவெக்குக்கு சூப்பர் மார்க்கெட் உள்ளது. இதில், கடந்த மூன்றாண்டாகவே, சைவ பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ஹேம்பர்கர், மீட்பால்ஸ், டுனா சாலட் போன்றவற்றை விற்று வருகிறார். தாவரங்களில், இயற்கை உணவு வகைகளில் இருந்து மட்டன், சிக்கன் தயாரிக்க வேண்டும் என்று சபதம் எடுத்த அவர் இப்போது தான் நிறைவேற்றி உள்ளார். 


    நெதர்லாந்த் கட்சிகளில் ஒன்று பிராணிகள் நல, சைவ ஆதரவு கட்சி. இதில் தேர்வு செய்யப்பட்டு, கோட்டேவெக்கின் மனைவி மரியன் தீம் எம்பியாக உள்ளார். இந்த கட்சியில் நிர்வாகியாக உள்ளார் கோட்டேவெக். ‘அசைவ பிரியர்கள் கூட, சைவத்துக்கு மாற தயாராகி விட்டனர். அவர்களுக்காக தான் நான் இந்த கண்டுபிடிப்பை உருவாக்கினேன். இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஏற்கனவே நான் விற்று வரும் சைவப் பொருட்களின் வரிசையில் இனி சைவ மட்டன், சிக்கன் இடம்பெறும்’ என்றார்.


    World’s first test-tube artificial beef ‘Googleburger’ gets GOOD review as it’s eaten for the first time


    **********************************************************


     It may look like something you’d chuck on the barbecue without a second thought, but this round of meat costs a very beefy £250,000 — as the world’s first test-tube burger.After the patty was lightly fried in a little butter and sunflower oil yesterday, the two volunteers chosen to taste it in front of a live audience were hardly effusive, though.‘I was expecting the texture to be more soft,’ said Austrian food researcher Hanni Rutzler, taking 27 chews before being able to swallow a mouthful. ‘It’s close to meat — it’s not that juicy.’

    இந்திய அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினரின் வெளிநாடு சிகிச்சை செலவை இனி அரசே ஏற்கும்!

    By: Unknown On: 17:01
  • Share The Gag

  • இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு, வெளிநாடுகளில் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளுக்கான செலவை, இனி அரசே ஏற்றுக் கொள்ளும் வகையில் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.இந்த ஆட்சிப் பணி அதிகாரிகள் இது போன்று வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவ சிகிச்சைப் பெற்றால், அதற்கான செலவுத் தொகையை திரும்பப் பெறும் வசதி, இது வரை கிடையாது என்பது நினைவு கூறத்தக்கது..


    sep 10 - hospital cartoon

     


    இந்தியாவில் பணியாற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிகள், அவர்கள் பணியாற்றும் மாநிலத்தை விட்டு வேறு மாநிலத்திலேயோ அல்லது வெளிநாடுகளுக்கு சென்றோ, அவசர மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டால், அதற்கான செலவுத் தொகையை திரும்பப் பெறும் வகையில், புதிய விதிமுறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது.


    ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிகளோ அல்லது அவர்களது குடும்பத்தினரோ, அபாயகரமான இதய அறுவை சிகிச்சை, எலும்பு மஞ்சை மாற்று அறுவை சிகிச்சை மற்றும் நரம்பியல் தொடர்பான பிரச்னைகளுக்கு, வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சை பெறலாம். இதற்கு, அதற்கென நியமிக்கப்பட்ட கமிட்டி பரிந்துரை செய்யும். 

    வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சை பெறுபவருக்கு, விமானத்தில் சென்று வருவதற்கான டிக்கெட் கட்டணத்தையும் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

    அந்தந்த அதிகாரிகளுக்கான மருத்துவச் செலவுத் தொகையாக, எந்த அளவுக்கு திரும்பப் பெறலாம் என்பதை வெளியுறவுத்துறை அமைச்சகம் முடிவு செய்யும்.


    Govt to bear babus’ medical treatment expenses abroad

    **************************************************


     The government has eased norms and allowed bureaucrats and their dependent family members to get medical treatment abroad at state cost.A member of All India Services– Indian Administrative Service (IAS), Indian Police Service (IPS) and Indian Forest Service (IFoS)–can also be airlifted outside the state in cases of a medical emergency, the new rules by Ministry of Personnel said.

    தகவல் அறியும் உரிமை சட்டத்தை மையமாக வைத்து தயாராகும் ‘அங்குசம்’

    By: Unknown On: 16:49
  • Share The Gag
  •  DSC_1419


    மனுஸ்ரீ பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் மனுக்கண்ணன், பானுமதி யுவராஜ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘அங்குசம்’. இதில் நாயகனாக கந்தா, நாயகியாக ஜெயந்தி நடிக்கின்றனர். வாகை சந்திரசேகர், சார்லி, பாலாசிங், பாவா லட்சுமணன், கராத்தே ராஜா, காதல் சுகுமார், காதல் தண்டபாணி, ரஞ்சன், மீராகிருஷ்ணன், ரேகா சுரேஷ், பிருந்தாதரன் ஆகியோரும் நடிக்கின்றனர்.


    இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி மனுக்கண்ணன் இயக்குகிறார். படம் பற்றி கேட்டபோது,.”தகவல் அறியும் உரிமை சட்டத்தை மையமாக வைத்து இப்படம் தயாராகிறது. திருச்சியில் நடந்த உண்மை சம்பவம் ஒன்றை கற்பனை கலந்து படமாக்கியுள்ளோம். காதல், ஆக்ஷன், குடும்ப சென்டிமெண்டுடன் கமர்சியல் படமாக தயாராகியுள்ளது. அனாலும்
    தகவல் அறியும் உரிமை சட்டத்தின் முக்கியத்துவத்தை பாமர மக்களுக்கு இப்படம் கொண்டு செல்லும். சென்னை, ஊட்டி, உளுந்தூர்பேட்டை பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.” என்றார்

    இந்திய ஆயுதத் தொழிற்சாலையில் பல்வேறு பணி வாய்ப்புகள்!

    By: Unknown On: 16:45
  • Share The Gag
  • மத்திய அரசு வேலை வேண்டும் என்று ஏங்கிடும் இளைஞர்கள் எண்ணற்றோர் உண்டு. ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து மத்திய அரசு நிறுவனமான இந்திய ஆயுதத் தொழிற்சாலையில் காலியாகவுள்ள 1578 காலியிடங்களுக்கு போட்டியிட விரும்புவோருக்கான வாய்ப்பை இந்த தொழிற்சாலை அறிவித்துள்ளது.
    இது குறித்த தகவல்கள் இதோ….
    துறை வாரியாக காலியிடங்கள்:
    sep 10 - vazhikatti jobs
    மெக்கானிக்கல் 876,
    ஐ.டி., 23,
    எலக்ட்ரிகல் 133,
    கெமிக்கல் 296,
    சிவில் 39,
    மெடலர்ஜி 46,
    கிளாதிங் டெக்னாலஜி 32,
    லெதர் டெக்னாலஜி 4,
    ஸ்டோர்ஸ் 47,
    ஓ.டி.எஸ்., 59,
    ஆட்டோமொபைல் 3
    மற்றும் எலக்ட்ரானிக்ஸ் 20
    வயது தகுதி : 27 வரை
    சம்பளம் : பணிக்கேற்ப ரூ.9300லிருந்து ரூ.34800 வரை
    விண்ணப்பக் கட்டணம்: ரூ.100
    விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலமாக மட்டுமே
    ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: செப்டம்பர் 21
    இதன் பிரிண்ட் அவுட் அனுப்பிட கடைசி நாள்: செப்டம்பர் 28
    முழு விபரங்களறிய உதவும் இணைய தள தொடர்பு முகவரி




    கம்ப்யூட்டர் தரும் பொதுவான பிரச்னைகள்!

    By: Unknown On: 07:53
  • Share The Gag

  • உங்களிடம் உங்கள் அப்பா பயன்படுத்திய பழைய எக்ஸ்பி அல்லது விண்டோஸ் 98 சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டராக இருந்தாலும், அல்லது புதிய கம்ப்யூட்டராக விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் இருந்தாலும், சில பிரச்னைகள் எல்லா வகை கம்ப்யூட்டர் செயல்பாட்டிலும் இருப்பதாக நாம் உணர்வோம். சில உண்மையிலேயே பிரச்னைகளாக இருக்கும். சில நாமாக எண்ணிக் கொள்பவையாக இருக்கும். இங்கு அத்தகைய பிரச்னைகள் குறித்தும், அவற்றிற்கான தீர்வுகள் சார்ந்தும் சில தகவல்களைப் பார்க்கலாம்.

    1. முதலில் இதனை முயற்சிக்க: 

    எந்தக் கம்ப்யூட்டராக இருந்தாலும், சிக்கல் கொடுப்பது எந்த புரோகிராமாக இருந்தாலும், அவற்றை மூடி, மீண்டும் இயங்க வைத்தால், எந்தப் பிரச்னைக்கும் தீர்வாக அது அமையும். கம்ப்யூட்டர் சிஸ்டம் செயல்பாட்டில் பிரச்னை என்றால், கம்ப்யூட்டர் இயக்கத்தினை முழுமையாக நிறுத்தி, மீண்டும் இயங்க வைப்பது நல்லது. அதே போல, கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்ட துணை சாதனமாக இருந்தால், அதன் இயக்கத்தினையும் நிறுத்தி, கம்ப்யூட்டர் இணைப்பையும் எடுத்துவிட்டு, பின்னர் இணைத்துச் செயல்படுத்திப் பார்க்கவும்.

    2. மிகவும் மெதுவாக செயல்படுகிறது: 

    கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கிச் சில ஆண்டுகள் ஆன பின்னர், எல்லாரும் கூறும் குற்றச்சாட்டு இது. கம்ப்யூட்டர் இயக்கம் முன்பு போல் இல்லாமல், மெதுவாக இருப்பதாகக் கூறுவார்கள். இந்தப் பிரச்னை இருந்தால், முதலில் இதற்கு உங்கள் கம்ப்யூட்டர் தான் பிரச்னை தருகிறதா எனப் பார்க்கவும். தரவிறக்கம் செய்யப்படுவது வீடியோவாக இருந்தால், பழைய இணைய தளமாக இருந்தால், அவை மெதுவாகத்தான் உங்கள் கம்ப்யூட்டரை அடையும். எனவே, உங்கள் கம்ப்யூட்டரில் பிரச்னை இருக்க வாய்ப்பில்லை. எனவே, எதனால் பிரச்னை ஏற்படுகிறது என்பதனைத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பிரச்னையைக் கூறி தீர்வு கேட்ட பலர், பின்னர், இது இணைய இணைப்பின் வேகக் குறைவினால் வந்தது என்று ஒத்துக் கொண்டுள்ளனர். இணைய இணைப்பின் வேகத்தினை Speedtest.net என்னும் தளம் சென்று, பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

    பிரச்னை உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் என்று உறுதியாகத் தெரிந்தால், கீழ்க்கண்டவற்றைச் சோதனை செய்திடவும்.
    2.1 ஹார்ட் ட்ரைவில் தேவையான இடம் உள்ளதா? இல்லை எனில், பைல்களை நீக்கி இடம் அமைக்கவும்.

    2.2 கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்குகையில், உங்களுக்குத் தேவைப்படாமலேயே, சில புரோகிராம்கள் இயக்கப்பட்டு ராம் நினைவகத்தில் தங்கிக் கொண்டு, கம்ப்யூட்டர் செயல்பாட்டினைத் தாமதப்படுத்தும். msconfig கட்டளை மூலம், சிஸ்டம் கான்பிகரேஷன் விண்டோ பெற்று, அதில் Startup என்ற டேப்பினைத் தட்டிப் பார்த்து, தேவையற்ற புரோகிராம்கள் தொடக்கத்தில் இயங்குவதனை நீக்கி அமைக்கலாம். இந்த செயல்பாட்டினை அவ்வப்போது மேற்கொள்வது நல்லது.

    3. தரவிறக்கச் செயல்பாடு அதிக நேரம் எடுக்கிறது: 

    ஸ்பீட் டெஸ்ட் டாட் நெட் தளம் மூலம், இணைய இணைப்பின் வேகத்தினைப் பார்க்கவும். உங்களுக்கு இணைய இணைப்பினை வழங்கும் நிறுவனம், உறுதி செய்த வேகத்தில், குறைந்தது 60% ஆவது வேகம் இருக்க வேண்டும். வேகம் சரியாக இருந்தால், நீங்கள் தேவை இல்லாமல், பெரிய பைல்களைத் தரவிறக்கம் செய்வதனை நிறுத்தலாம். உங்களுடைய நெட்வொர்க் இணைப்பில் உள்ள சாதனங்களுக்குப் புதிய ட்ரைவர் புரோகிராம்கள், அவற்றின் இணைய தளங்களில் இருந்தால், அவற்றை அப்டேட் செய்திடவும்.

    4. தானாக ரீஸ்டார்ட் செய்திடும் பிரச்னை: 

    கம்ப்யூட்டர், செயல்பாட்டில் இருக்கும்போதே, தானாக ரீஸ்டார்ட் ஆகும் பிரச்னையைப் பலர் எதிர் கொண்டுள்ளனர். உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள கிராபிக்ஸ் கார்ட், மதர்போர்ட், நெட்வொர்க் கார்ட் ஆகியவை, புதிய ட்ரைவர் புரோகிராம்களுடன் அப்டேட் செய்திருப்பதை உறுதி செய்திடவும். இவை சரியாக அப்டேட் செய்யப்பட்டிருந்தால், அடிக்கடி ரீஸ்டார்ட் செய்வதற்குக் காரணம், வைரஸ், மால்வேர், அட்வேர், மதர்போர்ட் சூடாவது ஆகியவை ஆக இருக்கலாம். மின் இணைப்பிலிருந்து கம்ப்யூட்டரை விடுவித்து, சிபியு டவரைக் கழற்றி, அதில் பொருத்தப்பட்டுள்ள சிறிய மின் விசிறிகளைச் சோதனை செய்திடவும். அதில் உள்ள அதிகமான தூசு அனைத்தையும் நீக்கவும். இப்போது வருகின்ற கம்ப்யூட்டர் சிஸ்டங்களில், சிஸ்டம் குறிப்பிட்ட அளவிற்கு மேலாக வெப்பச் சூழ்நிலையைச் சந்தித்தால், தானாக மூடப்படும் வசதியுடன் வருகின்றன.இவற்றால் கூட, கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் செய்யப்படலாம்.

    5. டெஸ்க்டாப்பில் எதிர்பாராத நேரங்களில் பாப் அப் விளம்பரங்கள்: 

    உங்கள் பிரவுசர் இயக்கப்படாத நேரங்களில் கூட, பாப் அப்பாக்ஸ் எழுந்து வந்து, வர்த்தக ரீதியான விளம்பரங்களைக் காட்டுகின்றனவா? அப்படியானால், அட்வேர் எனப்படும் தேவையற்ற புரோகிராம் ஒன்று, உங்கள் கம்ப்யூட்டரில் வந்து அமர்ந்து கோண்டுள்ளது என்று பொருள். இத்தகைய விளம்பரங்கள்,நமக்கு எந்த விதத்திலும் பயன் இல்லாததாகவே இருக்கும். இதனை நீக்க, சிறப்பாகச் செயல்படும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு ஒன்றினை இயக்கி, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து பைல்களையும் ஸ்கேன் செய்திடலாம். சந்தேகப்பட்ட கோப்புகள் இருப்பின், அவற்றை நீக்கிவிடலாம்.

    6. கூகுள் தவறும் வேளை: 

     பிரவுசரை ஹைஜாக் செய்து தங்கள் கட்டுப்பாட்டில் சில ஹேக்கர்கள், உங்கள் கம்ப்யூட்டரைக் கொண்டு சென்றுவிடுவார்கள்.கூகுளில் நீங்கள் தேடும்போது, உங்களின் பெர்சனல் தகவல்களைத் தேடுவதற்காக, அவர்களாக வடிவமைத்த தளத்திற்கான லிங்க் தந்து, கிளிக் செய்திடச் சொல்வார்கள். உங்கள் பிரவுசர் ஹைஜாக் செய்யப்பட்டதனை உணர்ந்தால், அந்த பிரவுசரை அன் இன்ஸ்டால் செய்து, மீண்டும் பதிக்கவும். உங்கள் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினையும் இயக்கி, மால்வேர் புரோகிராம்களை நீக்கவும்.

    7. என் வை-பி இணைப்பு துண்டிக்கப்படுகிறது: 

     வை பி மூலம், இணைய இணைப்பு கொண்டிருந்தால், அதில் பிரச்னை ஏற்படுகையில், எந்த சாதனத்தில் பிரச்னை என்று அறிவது பெரிய சவாலாக இருக்கும். கம்ப்யூட்டரா? ரௌட்டரா, இணைய இணைப்பு வழங்கும் நிறுவனத்தின் சர்வரா? என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். எதற்கும் உங்கள் இணைய இணைப்பு நிறுவனத்தை அழைத்து, பிரச்னையைக் கூறி, அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள். ரௌட்டர், அவர்களின் சர்வர், இணைப்பின் நிலை ஆகியவற்றில் பிரச்னை இருந்தால், அவர்களால் துல்லியமாகக் கூற இயலும்.

    அதே நேரத்தில், உங்கள் கம்ப்யூட்டர், வை பி இணைப்பின் எல்லைக்குள் இயக்கப்படுவதனையும் உறுதி செய்து கொள்ளுங்கள். சிக்னல்கள் மிகவும் குறைந்த சக்தியுடன் இருந்தால், இணைப்பு அடிக்கடி விட்டுப் போவது நடக்கும். இந்த பிரச்னையில் விண்டோஸ் சிஸ்டமும் கை கொடுக்கலாம். டாஸ்க் பாரில் உள்ள வை பி ஐகான் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். Troubleshoot problems என்பதனைத் தேர்ந்தெடுத்து இயக்கினால், இதன் மூலமும் பிரச்னை எங்குள்ளது என்பதனைத் தெரிந்து கொள்ளலாம்.

    8. வெப்சைட் செக்யூரிட்டி சர்டிபிகேட்: 

    சில வேளைகளில், பெரிய பிரச்னைகளை, மிக எளிய முறையில் தீர்த்துவிடலாம். பல பிரச்னைகள், நம் சிஸ்டம் கிளாக் சரியான முறையில் இயங்காததனால் ஏற்படுகிறது என்று தொழில் நுட்ப வல்லுநர்கள் கூறுவார்கள். ஒரு இணைய தளத்தின் செக்யூரிட்டி சர்டிபிகேட் கம்ப்யூட்டரின் கடிகாரத்துடன் இணைந்தே செயல்படும். எனவே, சீமாஸ் பேட்டரி செயல் இழந்து, சிஸ்டம் கிளாக் செயல்பாட்டினை நிறுத்தி இருந்தால், இந்த பிரச்னை ஏற்படலாம். எனவே, சிஸ்டம் ட்ரேயில் உள்ள கடிகார ஐகானைக் கிளிக் செய்து, கம்ப்யூட்டர் சிஸ்டத்தின் தேதி மற்றும் நேரத்தினைச் சரியாக செட் செய்தால், இந்த வெப் செக்யூரிட்டி சர்டிபிகேட் பிரச்னையைத் தீர்த்துவிடலாம்.

    9. பிரிண்டர் அச்சடிக்கவில்லை:

      உங்களுடைய பிரிண்டரின் ட்ரைவர் புரோகிராம் அப்டேட் செய்யப்பட்டு, உங்கள் பிரிண்டரில் தாள், டோனர் அல்லது இங்க் காட்ரிட்ஜ் எல்லாம் சரியாக இருப்பதாக வைத்துக் கொண்டால், உங்கள் பிரிண்டரை மின் இணைப்பிலிருந்தும், கம்ப்யூட்டரிலிருந்தும் கழட்டி, பின்னர் இணைக்கவும். இதனை அடுத்து, உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து நீங்கள் அச்சடிக்கக் கொடுத்த பைல்களின் நிலை அறிய, பிரிண்ட் வரிசை (print queue) பார்க்கவும். இதில் ஏதேனும் ஒரு பைலில் பிரச்னை இருந்தால், பிரிண்டர் உங்கள் கட்டளைக்குப் பின்னணியில் காத்துக் கொண்டு, அச்சடிக்காமல் இருக்கலாம். இங்கு கிடைக்கும் மெனுவில், 'Use Printer Offline’ என்ற ஆப்ஷனில் டிக் அடையாளம் இல்லாமல் இருப்பதனை உறுதி செய்திடவும். அச்சடிக்கையில், உங்கள் பிரிண்டர் ஆப் செய்யப்பட்டிருந்தால், ‘Use Printer Offline’ ஆப்ஷன் இயக்கப்படும் நிலை ஏற்படலாம். இதனால், அதன் பின்னர், அச்சிடக் கொடுக்கப்படும் பைல்கள் அச்சடிக்கப்படாமல் இருக்கும் சிக்கல் ஏற்படும்.

    10. இமெயில் இணைப்புகளைத் திறக்க இயலவில்லை: 

    மின் அஞ்சல் செய்திகளுடன் இணைக்கப்பட்ட பைல்களைத் திறக்க இயலவில்லை எனில், அதனைத் திறப்பதற்கான புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரில் இல்லாமல் இருக்க வாய்ப்புண்டு. பொதுவாக பி.டி.எப். பைல்களில் இந்த பிரச்னை இருக்க வாய்ப்புண்டு. இதற்கான பி.டி.எப். ரீடர் புரோகிராமினை இலவசமாக இணையத்திலிருந்து டவுண்லோட் செய்து பதிந்து, பின்னர் திறக்கலாம். வேறு வகை பைல் எனில், பைலின் துணைப் பெயரினைக் கண்டறிந்து, அந்த வகை பைலைத் திறக்க என்ன புரோகிராம் வேண்டும் என்பதனைத் தேடி அறிந்து செயல்பட வேண்டும்.

    11. புதிய கம்ப்யூட்டரில் என் பழைய ப்ரோக்ராம் செயல்படவில்லை: 

     இந்த பிரச்னை, புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டருக்கு மாறுபவர்களிடையே அதிகம் காணப்படுகிறது. குறிப்பாக, விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திலிருந்து, விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாறுபவர்கள், இது குறித்து கடிதங்கள் மற்றும் தொலைபேசி வழியாகவும் தெரிவித்துள்ளனர். இதற்குக் காரணம், நீங்கள் குறிப்பிடும் புரோகிராம், புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்காது. மேலும், விண்டோஸ் சிஸ்டத்தில் இயங்கும் புரோகிராம்கள், மேக் ஓ.எஸ். சிஸ்டத்தில் இயங்காது. மேலும், 32 பிட் சிஸ்டத்தில் இயங்கும் புரோகிராம்கள்,64 பிட் சிஸ்டத்தில் இயங்கும். ஆனால், மாறாக 64 பிட் சிஸ்டத்தில் இயங்கும் புரோகிராம்கள், 32 பிட் சிஸ்டத்தில் இயங்காது. ஆன்லைனில் இயங்கும் சில கேம்ஸ், புதிய கம்ப்யூட்டரில் இயங்காது. இதற்குச் சில ப்ளக் இன் புரோகிராம்கள் இல்லாததே காரணமாக இருக்கும். இதற்கு ஜாவா மற்றும் பிளாஷ் புரோகிராம்கள் காரணமாகவும் இருக்கலாம். பொதுவாக, பிரவுசர்கள், இவை தேவை எனில், உங்களுக்கு எச்சரிக்கை செய்திகளைக் கொடுத்து, இவற்றை இன்ஸ்டால் செய்திடச் சொல்லும்.
    Click Here 
     

    காலக்ஸி கியர் ஸ்மார்ட் வாட்ச் வெளியானது!

    By: Unknown On: 07:41
  • Share The Gag

  • சென்ற வாரம், பெர்லின் நகரில், சாம்சங் நிறுவனம், தன் முதல் காலக்ஸி கியர் ஸ்மார்ட் வாட்ச்சினை அறிமுகம் செய்துள்ளது. சோனி நிறுவனத்தை அடுத்து, இத்தகைய கடிகாரத்தை அறிமுகப்படுத்திய இரண்டாவது நிறுவனமாக, சாம்சங் பெயர் பெற்றுள்ளது. உடலில் சாதனத்தை அணிந்து கொண்டு, அதன் வழியே கம்ப்யூட்டிங் பணிகளை மேற்கொள்ளலாம் என்ற எண்ணப் பாங்கு, டிஜிட்டல் உலகில் வலம் வருபவர்களிடையே பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. மக்கள் பலரும் இத்தகைய சாதனங்களை எதிர்பார்ப்பதால், இதுநல்ல விற்பனையை மேற்கொள்ளும் சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கும். மேலும், வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில் நுட்பம் இதற்கு முழுமையாகக் கை கொடுக்கிறது.

    சாம்சங் நிறுவனத்தின் காலக்ஸி கியர் ஸ்மார்ட் வாட்ச், இந்நிறுவனத்தின் ஸ்மார்ட் போனுடன் இணைந்தே செயல்படும். இணையாக்கப்பட்ட ஸ்மார்ட் போனுடன், புளுடூத் வழி தொடர்பு கொண்டு இது இயங்கும்.


    இந்த கடிகாரத்தில் வைத்து இயக்கவென, எந்த செல்லுலர் தொடர்பும் இருக்காது. இணையாக்கப்பட்ட போன், இரண்டு மீட்டர் தொலைவிற்குள்ளாக இருக்கவேண்டும். தற்போதைக்கு, இந்த ஸ்மார்ட் வாட்ச், சாம்சங் நோட் 3 சாதனத்துடன் இணைவிக்கப்பட்டே இயங்கும். பழைய சாம்சங் போன் அல்லது, மற்ற நிறுவனங்களுடன் இது இயங்காது என்றே தெரிகிறது.
    ஸ்மார்ட் வாட்ச் முன்புறம், சதுர வடிவில் 1.6 அங்குல அகலத்தில் AMOLED டச் ஸ்கிரீன் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு பட்டன் மூலையில் தரப்பட்டுள்ளது. இதனை அழுத்தினால், ஹோம் ஸ்கிரீன் கிடைக்கிறது. இதனை ஸ்வைப் செய்து, பல அப்ளிகேஷன்களைப் பெறலாம். இதன் தொடக்க தோற்றம் ஒரு கடிகாரத்தினுடையதாகத்தான் இருக்கும். 


    பயன்படுத்துபவர், இதனை ஸ்வைப் செய்து, பல பயனுள்ள அப்ளிகேஷன்களைப் பெறலாம். மெசேஜ் மற்றும் அழைப்பு குறித்த அறிவிப்பு இதில் கிடைக்கும். வரும் அழைப்புகளுக்கு, மணிக்கட்டில் உள்ள கடிகாரத்தில் உள்ள, பட்டனை அழுத்திப் பேசலாம். அல்லது அணைத்து ஒதுக்கலாம். இந்தக் கடிகாரத்தில் ஒரு ஸ்பீக்கர் மற்றும் மைக் தரப்பட்டுள்ளது. போனுக்கு வந்திருக்கும் அழைப்புகள் மற்றும் டெக்ஸ்ட் மெசேஜ்களை இதில் பார்க்கலாம். ஆனால், ஜிமெயில், ட்விட்டர் போன்றவற்றிலிருந்து வரும் அழைப்புகள் மற்றும் செய்திகள், அறிவிப்புகளாகத்தான் காட்டப்படும். இவை குறித்து கூடுதல் தகவல்கள் அறிய, பயனாளர் போனைத்தான் பார்க்க வேண்டியதிருக்கும்.

    இதில் டயலர் வசதி தரப்பட்டுள்ளது. எனவே,இதிலிருந்து அழைப்புகளை ஏற்படுத்தி பேசலாம். போனின் துணையுடன் இதனை ஒரு போனாகவும் பயன்படுத்தலாம். இதில் 1.9 மெகா பிக்ஸெல் திறனுடன் கூடிய கேமரா ஒன்று இயங்குகிறது. இது கடிகாரத்தில் இல்லாமல், தனியே அதனைக் கைகளில் கட்டும்
    பட்டையில் உள்ளது. இந்த கேமரா, இதனை அணிந்திருப்பவரைப் பார்க்காது. வாய்ஸ் மெமோ ரெகார்டர், மியூசிக் பிளேயர், அழைப்புகளின் பட்டியல், போன் புக் மற்றும் பிற அப்ளிகேஷன்களுக்கான ஐகான்களைத் தரும் பக்கத்திற்கான ஐகான் என திரையில் காட்சி கிடைக்கிறது.


    செப்டம்பர் 25 லிருந்து, இந்த காலக்ஸி ஸ்மார்ட் வாட்ச் 140 நாடுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அக்டோபர் தொடக்கத்தில் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும். மொபைல் போன் விற்பனை செய்பவர்கள் மூலம் இது விற்பனை செய்யப் படும்.இதன் விலை 300 டாலர் என்ற அளவில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


    புளுடூத் 4 மட்டுமே இயங்கும் என்பதால், புதியதாக வந்துள்ள காலக்ஸி நோட் 3 மட்டுமே, தற்போதைக்கு இதனுடன் இணையாகச் செயல்பட முடியும். இந்த 5.7 அங்குல பேப்ளட் வாங்குவதற்கும் செலவு செய்திட வேண்டும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வளவு செலவு செய்து இதனைப் பயன்படுத்த வேண்டுமா என்பது இன்றைய கேள்வியாக இருந்தாலும், இது போன்ற ஒன்று வேண்டும் என்பது இன்றைய நிலையில் ஒரு தேவையாகத் தரப்படவில்லை.எனவே, புதியதாக அறிமுகப்படுத்தப்படும் இதனை மக்கள் விரும்புவார்கள் என சாம்சங் எதிர்பார்க்கிறது. எப்படி, கம்ப்யூட்டரில் பார்த்துப் பழகிய மின்னஞ்சல்களை, ஸ்மார்ட் போனில் பார்த்துப் பயன்படுத்த நாம் மாறிக் கொண்டோமோ, அதே போல, மொபைல் போனில் மேற்கொள்ளும் செயல்பாடுகளை, இனி ஸ்மார்ட் வாட்சில் பார்க்கும் பழக்கம் வந்து விடும் என சாம்சங் தெரிவித்துள்ளது.