Saturday 24 August 2013

இளைஞர்களுக்குத் திருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகள்:-

By: Unknown On: 18:02
  • Share The Gag
  • இன்றைய இளைஞர்கள்:
     
    இன்றைய இளைஞர்களுக்குத் திருவள்ளுவர் கூறும் வாழ்வியல் நெறிகள் சிலவற்றைச் சுட்டிக் காட்டுவதாக இக்கட்டுரை அமைகின்றது.
    இருபத்தொன்றாம் நூற்றாண்டில் அறிவியல் வளர்ச்சி காரணமாகச் சமுதாய அமைவுகளில் பலவிதமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கூட்டுக் குடும்ப அமைப்பு சிதைந்து, தனிக் குடும்ப அமைப்பு மேலோங்கி உள்ளது. பழைய மரபுகளும், சிந்தனைகளும் உடைக்கப்பட்டுப் புதிய சித்தாந்தங்களும், புதிய மரபுகளும் படைக்கப்பட்டுள்ளன.
    இவ்விதமான சமுதாயச் சூழ்நிலைகளில்தான் இன்றைய இளைஞர்கள் வளர்கின்றனர். வேலை காரணமாக வெளிநாடுகளுக்கும், பிற மாநிலங்களுக்கும் இளைஞர்கள் செல்கின்றனர். பொருள் சம்பாதித்தல் ஒன்றே அவர்கள் வாழ்வின் குறிக்கோளாக மாறி உள்ளது. இதனால் பிற சமூகச் சூழல்களாலும் பாதிப்படைகின்றனர். இவ்விதமான சூழலில் வாழ்கின்ற இருபத்தொன்றாம் நூற்றாண்டு இளைஞர்களுக்கு இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகளை நினைவூட்ட வேண்டிய காலக்கட்டத்தில் நாம் உள்ளோம்.
    திருவள்ளுவர் இளைஞர்களுக்குத் தேவையான நெறிகளைச் சுட்டிக்காட்டிச்சென்றுள்ளார். அவர் காட்டும் வாழ்வியல் நெறிகளைக் கீழ்க்காணும் வகையில் நாம் அறிந்து கொள்வோம்.
    1. அன்புடைமை
    2. பகுத்தறிதல்
    3. வாய்மை
    4. குற்றங்கடிதல்
    5. வினைத் தூய்மை
    6. கள்ளுண்ணாமை
    7. வெகுளாமை
    1. அன்புடைமை
    அன்பு என்பது வாழும் உயிர்களுக்குப் பொதுவான ஒன்றாகும். இது இயற்கையான உணர்வுகளில் ஒன்று. அதனால் தான் மனிதப் பிறவி விழுமியது என்று ஆன்றோரால் போற்றப் பெற்றது. அன்பு வழி வாழ்க்கை வேண்டும். அவ்வழியே வளரும் வாழ்க்கை பண்பும் பயனும் உடையதாகும்.
    அன்பு உடையவர் பற்றியும், அன்பு இல்லாதவர் பற்றியும் வள்ளுவர் குறிப்பிடும் போது,
    அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
    என்பும் உரியர் பிறர்க்கு - - - (குறள். 72)
    என்று கூறுகின்றார். அதாவது அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வர் எனவும், அன்பு உடையார் தம் உடம்பையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர் எனவும் குறிப்பிடுகிறார். மற்றொரு குறளில் அன்பின் தன்மையை,
    அன்பின் வழியது உயிர்நிலை அஃதுஇலார்க்கு
    என்பு தோல் போர்த்த உடம்பு - - - (குறள். 80)
    என்று குறிப்பிடுகிறார்.
    உடலில் உயிர்நிலை பெறுவது அன்பின் வழிபட்டதேயாகும். ஒருவருக்கு உயிர் இருக்கிறது என்பதற்கு அடையாளமே அவ்வன்புதான். அன்பு இல்லாதவருடைய உடம்பு எலும்பும், தோலும் போர்த்தப்பட்ட உடல் ஆகும். எனவே அன்பைப் பேண வேண்டும் என்பது திருவள்ளுவரின் சீரிய சிந்தனையாகும்.
    2. பகுத்தறிதல்
    அறிவுச்சிந்தனை இன்று பல நிலைகளில் மேம்பாடு அடைந்துள்ளது. பல துறைகளில் நாம் முன்னேறி உள்ளோம். திருவள்ளுவர் இந்த அறிவுச் செல்வத்தைக் கண்டடையும் வழிமுறைகளையும் கூறியுள்ளார்.
    எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு - - - (குறள். 423)
    என்றும்,
    எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு - - - (குறள். 355)
    என்றும்,
    சென்ற இடத்தான் செலவிடா தீதுஒரீஇ
    நன்றின்பால் உய்ப்பது அறிவு - - - (குறள். 422)
    எச்சிந்தனைகளானாலும் அச்சிந்தனைகளின் உண்மைப் பொருளை ஆய்ந்து அறிவதுதான் அறிவு. எனினும் வள்ளுவர் 422 ஆம் குறளில் மனத்தைச் சென்ற இடத்தில் விடாமல் தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும் என்று குறிப்பிடுகிறார். கற்றல் மட்டுமே அறிவு அல்ல. நன்மை, தீமைகளையும் அறிவதே அறிவு என்பதைத் திருவள்ளுவரின் சிந்தனையாய்க் கொள்ளலாம்.
    3. வாய்மை
    "வாய்மை" இன்று மறைந்து போன ஒன்றாகக் காணப்படுகிறது. வாய்மை மனிதனுக்குத் தேவையான பண்பாக இருந்தாலும் கூட அது பல சமயங்களில் பின்பற்றப்படுவதில்லை. வாய்மையின் தன்மையைத் திருவள்ளுவர்,
    வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
    தீமை இலாத சொலல் - - - (குறள். 291)
    பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
    நன்மை பயக்கும் எனின் - - - (குறள். 292)
    என்கிறார்.
    அதாவது "வாய்மை" என்பது பிறருக்கு எந்தவிதத் தீங்கும் செய்யாத சொற்களைச் சொல்வதுதான். பொய்யான சொற்களால் நன்மை விளையாது; பொய்யான சொற்களும் குற்றம் தீர்ந்த நன்மையை விளைவிக்குமானால் வாய்மை என்று கருதத்தக்க இடத்தைப் பெறுவனவாம் என்று கூறுகிறார்.
    இந்நிலையினைத்தான் வள்ளலார்,
    உள்ஒன்று வைத்துப் புறம்ஒன்று பேசுவோர்
    உறவு கலவாமை வேண்டும்
    என்று கூறுகின்றார்.
    எனவே வாய்மையை மனித வாழ்வினில் கடைப்பிடித்தால் அது பலவிதமான நன்மையை உண்டாக்க வல்லதாகும்.
    4. குற்றங்கடிதல்
    ஒருவன் எவ்வளவு உயர்ந்த நிலையில் நின்றாலும், தன் உயர்வைத் தானே வியந்து தற்பெருமை கொள்ளக் கூடாது. அது அறிவுக் கண்ணை மறைக்கக் கூடியது. அவ்வாறு மறைத்தால் உண்மை விளங்காமல் போகும். பல தவறுகள் செய்து அழிவு தேடிக் கொள்ள நேரும்.
    செய்த குற்றம் சிறிதே ஆனாலும், அதைப் பெரிய குற்றமாகக் கருதி மனம் வருந்துவது சான்றோர் பண்பு. குற்றம் வராமல் காக்கும் ஆற்றல் வளரும். குற்றம் வராமல் காத்துக் கொண்டால், வாழ்க்கைக்குத் தீங்கு நேராது.
    தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்
    கொள்வர் பழிநாணு வார் - - - (குறள். 433)
    5. வினைத்தூய்மை
    செய்கின்ற அல்லது செய்யப் போகின்ற செயல் புகழையும் நன்மையையும் தருமா என்று ஆராய்ந்து செய்ய வேண்டும். எவ்வளவு துன்பப்படுவதாக இருந்தாலும் தெளிந்த அறிவுடையவர்கள் இழிவான செயல்களைச் செய்ய மாட்டார்கள் என்பது வள்ளுவரின் வாக்கு. எனவேதான் அவர்,
    ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
    சான்றோர் பழிக்கும் வினை - - - (குறள். 656)
    என்கிறார்.
    அதாவது பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்ற செயல்களை ஒருவன் செய்யக் கூடாது என்கிறார். எனவே வினைதனை மேற்கொள்வோர் இக்குறளினை நினைவில் கொள்ளுதல் நலம் பயக்கும்.
    6. கள்ளுண்ணாமை
    இன்றைய காலகட்டத்தில் கள் என்ற போதைப் பொருள் நவநாகரீகமான ஒன்றாகக் கருதப்படுகின்றது. வள்ளுவர் கள்ளுண்பவர்களின் நிலையைக் கீழ்க்கண்ட வகைகளில் குறிப்பிடுகின்றார்.
    1. மதிப்பை இழந்து விடுவார்கள்.
    2. பகைவரும் அஞ்சமாட்டார்கள்.
    3. சான்றோரின் உறவும் போய்விடும்.
    4. மற்றவர்கள் முன்பு குற்றவாளியாக நிற்க நேரிடும்.
    மேலும் அவர்,
    ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால்; என்மற்றுச்
    சான்றோர் முகத்துக் களி - - - (குறள். 923)
    என்ற குறளில் பெற்ற தாயின் முன்பாக மகன் கள்ளுண்டு மயங்குதல் துன்பம் தருவதாகும். அதனால் அந்த மகனைத் தாய் வெறுத்து ஒதுக்குவாள். அப்படியானால் தாயே வெறுத்து ஒதுக்கும்போது மற்ற சான்றோர்கள் அவனை எப்படி சகித்துக் கொள்வார்கள் எனக் கேட்கிறார். ஆகவே கள்ளுண்ணாமை நன்று என்கிறார் வள்ளுவர்.
    7. வெகுளாமை
    வலியார் மேல்சினம் பிறப்பது உண்டு; ஆனால் அப்போது அது பலிக்காது. மெலியார் மேல்சினம் பிறந்தால் அது அவர்களை வருத்தும்.
    சினம் பலிக்காத வலியார் இடத்தில் மட்டும் சினம் கொள்ளாமல் காத்துக் கொள்வது போதாது. அங்கே சினம் காப்பதும் காவாமையும் ஒன்றுதான். சினம் பலிக்குமிடத்தில் காத்துக் கொள்வோனே சினம் காப்பவன். இது அருளுடையார் செயல் என்பார் திருவள்ளுவர்.
    செல்லிடத்துக் காப்பான் சினம்காப்பான்; அல்விடத்துக்
    காக்கின்என் காவாக்கால் என்? - - - (குறள். 301)
    செல்லா இடத்துச் சினம்தீது; செல்லிடத்தும்
    இல்அதனின் தீய பிற - - - (குறள். 302)
    சினத்தை விடப் பெரிய பகை வேறு இல்லை. படையிடமிருந்து ஒருவன் தன்னைத் தான் காத்துக் கொள்ள விரும்பினால் சினம் வராமல் மனத்தைக் காத்துக் கொள்ள வேண்டும்; காக்கத் தவறினால் சினம் தன்னையே கொன்றுவிடும். ஆகவேதான் சினம் யாரிடம் உள்ளதோ அவர்களையே அழித்துவிடும் என்பது வள்ளுவர் வாக்கு. சினங்கொள்ளாமல் வாழ வழி வகுப்போம்.
    எனவே இன்றைய இளைஞர்கள் திருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகளைத் தம்முடைய வாழ்வில் பின்பற்றினால் அவர்கள் வாழ்வு மேன்மை அடையும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

    ஆர்கானிக் உணவுப்பொருட்களை பயன்படுத்துங்கள்!

    By: Unknown On: 17:31
  • Share The Gag
  •   பாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் விற்கப்படும் "மால்" கலாசாரத்துக்கு அமெரிக்காவில் கூட மவுசு குறைந்து வருகிறது. ஆனால், நம்மூரில் கொடிகட்டிப்பறக்கிறது. "மால்" கலாசாரம் தவறில்லை தான் ஆனால், சத்தான உணவு வகைகள், காய்கறிகள் போன்றவற்றை வாங்கும் நிலை மாறி, பாக்கெட், டப்பா கலாசாரம், உரம் போட்ட காய்கறிகள் என்று நாம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறோம். ஆர்கானிக் காய்கறிகள், தானியங்கள், பழங்கள் என்பது பரம்பரையாக நாம் பின்பற்றி வந்ததுதான். நடுவில், உரம் போட்ட சமாச்சாரங்கள் தலைதூக்கி விட்டன. இப்போது மீண்டும் ஆர்கானிக்குக்கு மவுசு திரும்பி விட்டது. ஆர்கானிக் என்பது உரம் போடாத, ரசாயன கலப்பில்லாத உணவுப்பொருட்கள் சார்ந்தது. எது ஆர்கானிக், அதனால் எந்த அளவுக்கு உடலுக்கு நல்லது என்று பார்ப்போம்.

    உப்பு: 
    இப்போது பலரும் பரவலாக பயன்படுத்துவது அயோடின் சத்துள்ள பாக்கெட் உப்புதான். சில ஆண்டுக்கு முன்வரை பயன்படுத்தி வந்த கல் உப்பு நினைவிருக்கிறதா? அதில் உள்ள கனிம சத்துக்கள் பற்றி பலருக்கும் தெரியாது. இதுதான் ஆர்கானிக் உப்பு. உடலில் அயோடின் சத்து தேவைதான். ஆனால், அயோடின் சத்து கிடைக்கும் நிலையில், உப்பு மூலமும் அது சேர்ந்தால் பிரச்சினைதான்.

    ரீபைண்ட் ஆயில்: 
    செக்கில் ஆட்டிய எண்ணெயை யார் இப்போது பயன்படுத்துகின்றனர். நகரங்களில் எங்குப் பார்த்தாலும் பாக்கெட் உணவு எண்ணெய்தானே.
    அப்படியும் செக்கில் ஆட்டியெடுத்த கடலை, நல்லெண்ணெய் இன்னமும் சில இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதுதான் எந்த கலப்பும் இல்லாத ஆர்கானிக் எண்ணெய். ரீபைண்ட் என்பது, சூடாக்கி சமப்படுத்துவது. அதனால், வாணலியில் இரண்டாவது முறையாக சூடாக்கப்படுகிறது. இதனால், ரசாயன கலப்பு சேர்கிறது உடலில். இதுதான் நிபுணர்கள் கருத்து.

    வெண்ணெய், நெய், வனஸ்பதி: 
    வெண்ணெய், நெய், வனஸ்பதி இவை மூன்றுமே கொழுப்பு சார்ந்ததுதான். அதிகம் பயன்படுத்தக்கூடாது. இதனால், கொலஸ்ட்ரால்தான் உடலில் சேரும். மாறாக, ஆர்கானிக் முறையில் இயற்கையாக உருவாக்கப்பட்ட ஆலிவ் ஆயில், செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய்தான் மிக நல்லது.

    உலர்ந்த தானியங்கள்: 
    பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உலர்ந்த பருப்பு உட்பட தானியங்கள்தான் பயன்படுத்துகிறோம். ஆனால், எந்த கலப்பும், செரிவூட்டலும் இன்றி, இயற்கையாக விளைவித்து எடுக்கப்பட்ட பருப்பு, தானியங்கள்தான் ஆர்கானிக் முறைப்படி நல்லது. நன்கு உலர்ந்த தானியங்களில் கொழுப்புதான் மிஞ்சும். ஆனால், ஆர்கானிக் முறையில் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும்.

    பாலிஷ் அரிசி: 
    அரிசி சாதம், வெள்ளையாக இருக்க வேண்டும். பழுப்பாக இருந்தால் நகரங்களில் உள்ளவர்களுக்கு பிடிக்காது. ஆனால், புழுங்கல் அரிசி சாதம்தான் மிக நல்லது என்பது இப்போதுதான் பலருக்குத் தெரிய ஆரம்பித்துள்ளது. பாலிஷ் செய்யப்படாத புழுங்கல் அரிசி, முழு கோதுமை ஆகியவற்றில்தான் 100 சதவீத சத்துக்கள் உள்ளன என்பதை மறந்து விடாதீர்கள்.

    சந்தை காய்கறி, பழங்கள்: 
    உரம், ரசாயன கலப்பு சார்ந்து விளைவிக்கப்பட்ட, செயற்கையாக பெரிதாக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் கண்களுக்கு கவர்ச்சியாக இருக்கலாம். விலை குறைவாக இருக்கலாம். ஆனால், உடலுக்கு கெடுதல்தான். உரம் கலப்பில்லாத காய்கறிகள், கீரைகள், பழங்கள் மூலம் கிடைக்கும் பலன், மருந்துகளில் கூட கிடையாது.

    பால்:
    பால் உடலுக்கு நல்லதுதான். ஆனால், நாம் சாப்பிடும் பாலில், கொழுப்புச் சத்து நீக்கப்பட்டதால் பரவாயில்லை. ஆனால், கால்நடைகளில் 90 சதவீதம் உரம், ரசாயன ஆன்டிபயாட்டிக் மருந்துகளை பெற்ற நிலையில்தான் உள்ளன என்பது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலே வருத்தத்துடன் கூறியுள்ளது. ஆர்கானிக் வகையில் இப்போது பல வகை மூலிகைகள் வந்துவிட்டன. பாலுடன் இவற்றையும் சாப்பிடலாம்.

    கோலா, காபி, டீ:
    இயற்கையான காபி, டீ இப்போது கிடைப்பதில்லை. எல்லாமே, உரக்கலப்பு மிக்கதுதான். அதிலும், பாக்கெட் பானங்களில் பெரும்பாலும் உடலுக்கு ஆரோக்கியமில்லாத விஷயங்கள்தான். மூலிகை டீ நல்லது. மூலிகை சார்ந்த பானங்கள் இப்போது உள்ளன. அவற்றை வாங்கி அருந்தலாம்.

    சர்க்கரை: 
    சர்க்கரைக்கு பதில், வெல்லத்தைப் பயன்படுத்தலாம். காபி, டீ யில் கருப்பட்டி வெல்லம் போட்டு சாப்பிட்டால், உடலுக்கு நல்லது. எந்த கெடுதலும் வராது.

    ஆர்கானிக் கோஷம் இன்னும், இந்தியாவில் பெரிய அளவில் எடுபடவில்லை. காரணம், இப்போதுள்ள உணவு பொருட்கள் விலையே விண்ணைத் தொடுகிறது. ஆர்கானிக் சமாச்சாரங்கள் விலை இன்னும் அதிகம். இருந்தாலும், காலப்போக்கில், உரக்கலப்பில்லா உணவுப்பொருட்கள் சாப்பிடும் நிலைக்கு வருவது மட்டும் நிச்சயம்.

    '' அம்மா என்றால் அன்பு ''

    By: Unknown On: 16:55
  • Share The Gag

  • மாதங்கள் பத்து சுமந்து
    உன் கற்பனைகளால்
    என்னை செதுக்கிய சிற்பியானாய்...

    கருவில் என் பசி தீர்க்க

    திகட்டும் பொழுதும்
    உணவை உண்டு
    என் உயிர் காத்தாய்...

    பிறந்தவுடன்

    மொழியில்லா என் ஆசைகளை
    சிறு அசைவுதனில் புரிந்துகொண்டு
    நிறைவேற்றி வைத்தாய்...

    விரைவில் நான்

    நடை பழக
    உன் ஐவிரல் கொண்டு
    என் ஒரு விரல் கோர்த்து
    பல மைல்கள்
    நீயும் நடந்திருப்பாய்...

    தலை முடியில்
    விரல் வருடி
    வலக்கை நீட்டி
    என் தலையணை ஆக்கி
    வலிகள் தாங்கி
    நான் தூங்க விழித்திருப்பாய்...

    எனக்கு பசிக்கும் முன்னே

    நீ அறிவதால்
    பசியை நானோ அறிந்ததில்லை...

    குளநீரை கல்லெறிந்து

    கலைப்பது போல்
    என் தோல்விகளில்
    உன் குரல் எறிந்து
    என் சோகங்கள்
    கலைத்து நிற்ப்பாய்...

    எடைதட்டில் உனை அமர்த்தி

    உனக்கு சமம் பார்க்க
    இவ்வுலகில் ஏதுமில்லை...

    இங்கு

    உன்னைப்போல்
    எந்த தெய்வமும் இல்லை....

    தமிழ் ஜோக்ஸ்_பகுதி 2

    By: Unknown On: 16:51
  • Share The Gag
  • எனக்கு மொபைல்ல கிரெடிட் ரீசார்ஜ் பண்ணனும்...
    மொபைல்ல பண்ண முடியாதுங்க சிம் கார்டுல தான் பண்ண முடியும்...

    கழுதைக்கும், மனுஷனுக்கும் என்ன வித்தியாசம்...
    கழுதை பேப்பரை சாப்பிடுது...
    மனுஷன் பேப்பர் ரோஸ்டை சாப்பிடுறான்.

    அறிவாளிகள்  என்று யாரைச் சொல்லலாம்...
    யாரெல்லாம் பொண்டாட்டி திட்டும் போது சிரிச்சுக்கிட்டே இருக்காங்களோ அவங்க எல்லோரும் தான்..

    நான் இருமல் வந்தா உடனே டாக்டர்கிட்டே போய்டுவேன். நீங்க எப்படி?
    நான் இருமல் வந்தால், முதல்ல இருமிட்டு அப்புறம் தான் போவேன்.

    என்ன இவ்வளவு சோகமா இருக்கீங்க...
    என்னோட வைஃப் ஒரு மாசம் என்கூட பேசமாட்டேன் என்று சொல்லிட்டா.

    அதுக்கு நீங்க சந்தோஷம் தானே படணும்...
    எப்படிங்க...இன்னையோட அந்த ஒரு மாசம் முடியுதே...

    பிள்ளையாரும் முருகனும் கம்ப்யூட்டர் கிளாசுக்கு போனாங்க
    பிள்ளையாருக்கும், முருகனுக்கும் மார்க்ஸ் குறைஞ்சு போச்சு
    என்னாச்சு...
    ஏனென்றால்,முருகனோட கம்ப்யூட்டர் மௌஸ் பிள்ளையாரோட மௌஸ் ரெண்டும் சேர்ந்து விளையாடப் போயிட்டுதுகள்...

    அவன் எதுக்கு சுடுகாட்டுக்குப் போகும் போது சோப்பு எடுத்திட்டுப் போறான்..
    ஹமாம் இருக்கப் பயமேன்..

    நான் எப்போதுமே பணம் எதுவும் கையில் அதிகமாக வெச்சிருக்க மாட்டேன்...
    அதெப்படி..வெச்சிருக்கணும் என்று ஆசைப்பட்டாலும் கூட வைஃப்கிட்டே கேட்டு வாங்கிக்கட்டிக்கிறதுக்கு உங்க உடம்புல தான் பலம் கிடையாதே...

    போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இருக்கிறதா சொல்றீங்க, வெயிலைப் பத்தி கவலையே இல்லைங்கறீங்களே, எப்படி?
    நான் ஏ.ஸி. ஆச்சே!"

    உங்களுக்கு அலர்ஜி நோய் வந்திருக்கு... ஒத்துக்காததை எல்லாம் ஒதுக்கி வைக்கணும்!
    அப்படின்னா என் சம்சாரத்தைக் கூடவா டாக்டர்...?

    என் மாமியாருக்கு சர்க்கரை வியாதி இருக்கற விஷயம் உனக்கு எப்படித் தெரியும்?
    உங்க வீட்ல அடிக்கடி ஸ்வீட் செய்யறதை வச்சுத்தான் சொன்னேன்...!

    ஆபீசுக்கு போகும் போது டென்ஷன் படுத்தாதே...
    ஏங்க...?அதையே நெனச்சு நெனச்சு, தூக்கமே வர மாட்டேங்குது...!

    ஏன் என்னோட கச்சேரிக்கு வராம விட்டுட்டீங்க...
    ஸாரி சார்... அன்னைக்கு வீட்லயே தூங்கிட்டேன்!
     
     

    ~*~கவிதைகள்~*~

    By: Unknown On: 16:46
  • Share The Gag
  • ~*~கவிதைகள்~*~

    ஈகை

     
    உண்ணாமல் ஒளித்து வைத்து  
    உறங்காமல் விழித்து நின்று
    கண்ணாகக் காக்கும் காசு
    காக்காது போகும் ஓர்நாள்
    மண்ணாகப் போகும் அந்நாள்
    மதிக்காதே உலகம் உன்னை
    எண்ணத்தில் கொண்டே இஃதை  

    என்றைக்கும் இனிதே ஈவாய்!!!


    கனியும் காலம்

     
    சிற்றுளியால் செதுக்கியதோர் கற்பாறை
    கண்கவரும் சிலையாய் நிற்கும்!
    பொற்கொடியே புடம்போட்ட தங்கம்தான்

    நகையாகிப் பொன்னாய் மின்னும்! 
    பெற்றிடலாம் பட்டுவருந் துன்பமதில்
    பொறுமையெனும் பெற்றி தன்னை!
    கற்றிடுநீ யுன்உழைப்பே வயலிட்ட 

    நீராகி கனியும் காலம்...

    ஹைக்கூக்கள்

    By: Unknown On: 16:39
  • Share The Gag
  •                                   நட்சத்திரம்

                                 யார்சூட மலர்ந்திருக்கின்றன
                                விண்வெளித் தோட்டத்தில்
                                 நட்சத்திரப் பூக்கள்

    படைப்பு!

    மேகக் கவிஞன்
    மழையெனும் மையால்
    எழுதிய கவிதைக்கு
    இயற்கை இட்ட பெயர்....
    பசுமை!'

    அடடே!

    தொகுதி
    மறு சீரமைப்பு...
    மருமகளுக்கு
    மணி மகுடம்!
    மாமியாருக்கு
    முதியோர் இல்லம்.

    இந்தியாவின் ஏழ்மை

    சிக்னல்களில் நிற்கும்
    வெளிநாட்டுக் கார்களின்
    கண்ணாடிக் கதவு தட்டி
    இந்திய ஏழைகள் விற்கிறார்கள்
    காகித தேசியக் கொடி

    நிலநடுக்கம்

    விண்ணை நோக்கி
    விதவிதமான
    அடுக்குமாடி வீடுகள்!
    சுமை தாங்காமல்
    சுளுக்கு விழுந்தது
    பூமிக்கு!

    பட்டுப்புழு

    பட்டுப்புடவையில்
    வண்ணத்துப்பூச்சி
    ஓவியமாக அழுதபடி...

    அழையா விருந்தாளி

    கையசைத்து
    கூப்பிட
    மரங்கள் இல்லாததால்
    வராமல் போனது
    மழை!

    சூரியன்

    அழகாய் பிறக்கிறான் அமைதியாக மடிகிறான்
    நடுவில் அப்படியொரு ஆர்ப்பாட்டமா?
    சூரியன்.

    கலங்கரை விளக்கு

    விடிய விடிய விழித்திருந்து
    நிலவுலகிற்கு வழிகாட்டும் மௌனம்
    கலங்கரை விளக்கம்

    தென்றல்

    உருவம் இல்லை
    உணர்வு உண்டு
    தென்றல்

    அக அழகு

    தோற்றத்தை விட
    குரல் அழகு
    குயில்

     நன்றி கடன்

    அடுத்த பிறவியில்  
    எனக்கு மகளாக 
    என் தாய்...

    வானவில்

                                   பறவைகளைத்
                                   தீண்டுவதில்லை
                                   வான"வில்"
                                   ஆயுதம்...

    ~*~கைபேசி பயன்பாட்டினை நெறிமுறைப்படுத்தும் குறள்கள் - சிந்திப்பதற்கு மட்டுமே~*~

    By: Unknown On: 07:55
  • Share The Gag
  • குறள் :

    1:நோக்கக் குழையா நுண்ணலைக் கைபேசி
    தாக்காதே தகவல் தரும்.
     

    பொருளுரை: நோக்கினாலும் குழையாத நுண்ணலைக் கைபேசி, நுண்ணலைகள் தாக்காதே தகவலைத் தரும்.

    2:
    காணாது தொலையும் கைபேசி; கண்டபின்னும்
    நாணாதே மெல்ல நகும்.

    பொருளுரை: எங்கோ தொலத்து விட்டுவிட்டக் கைபேசி கிட்டினாலும் அதற்கென நாணாதே ஒலிக்கும்.

    3:
    இனிதே மொழி இயம்பினும் நெடண்மை
    மெலிதே கொல்லும் செவி.

    இனிதே மொழி இயம்பினும் நெடு அண்மை
    மெலிதே கொல்லும் செவி.

    பொருளுரை: எத்தனை தான் இனிய மொழியினைக் கொடுப்பினும் கைபேசியை காதிற்கு அண்மையில் நெடு நேரம் கொண்டு கேட்டால், நாளடைவில் செவி கெடாமல் என்ன செய்யும்?

    4:
    அன்புசால் மொழியே ஆயினு மோட்டலில்
    இன்மை யதுகைபேசி உரை.

    அன்புசால் மொழியே ஆயினும்; ஓட்டலில்
    இன்மை அது கைபேசி உரை.

    பொருளுரை: அன்பொடு பேசும் மொழிதானே என்று ஆகினும் வண்டி ஓட்டுகையில் கைபேசி உரையாடுதலால் நன்மை என்று ஏதுமில்லை; அனைவருக்கும் இன்மையைத் தான், கேட்டைத் தான் விளைவிக்கும்.

    5:
    தெவிட்டு மொலி தீதே; கைபேசியுரை
    செவிட்டுக் குவழி செயின்.

    தெவிட்டும் ஒலி தீதே கைபேசி உரை
    செவிட்டுக்கு வழி செயின்.

    பொருளுரை: கைபேசியால் வரும் அதீத ஒலி காதைச் செவிடாக்கும் வகையில்; தெவிட்டும் அளவில் கொள்ளுதல் காதுக்குச் செவிட்டை மாத்திரம் அல்ல உடல் நலத்தையும், உள நலத்தையும் பாதித்து விடும். அளவிற்கு மீறிய அமிர்தமும் நஞ்சுதானே.

    6:
    வாட்டும் வருத்தம் வகையறியான்; நலந்தருமோ
    காட்டும் கைபேசிச் சினம்?

    வாட்டும் வருத்தம் வகை அறியான்; நலம் தருமோ
    காட்டும் கைபேசிச் சினம்?

    பொருளுரை: வாட்டுகின்ற உரையின் வருத்தத்தின் வகையை, காரணத்தை அறியாதவன், கைபேசியின் மேல் காட்டும் சினம்தான் நலம் தருமோ? கைபேசியும், அவன் பாலுள்ள நலமும் தான் கெடும்.

    7:
    இறையில்லத் துவிசை நிறுத்தாக் கைபேசி
    நிறையல்ல; வசைமிகுக்குங் குறை.

    இறை இல்லத்து விசை நிறுத்தாக் கைபேசி
    நிறை அல்ல; வசை மிகுக்கும் குறை.

    பொருளுரை: இறை இல்லமாகிய தேவால
    த்தில்; கோயிலில் நிறுத்தி வைக்கப் படாத கைபேசியால் ஒருவருக்கு எந்த நிறையும் வரப்போவதில்லை; உண்மையில் அஃது பிறரின் வசையைத்தான் மிகுந்து கொடுக்கும் மிகக் குறைபாடான செயல் ஆகும்.

    8:
    சபையிடைச் சலனம் சதுராடும் கைபேசி
    மிகையல்ல மேன்மைக் கிழுக்கு.

    சபையிடைச் சலனம் சதுராடும் கைபேசி
    மிகை அல்ல; மேன்மைக்கு இழுக்கு.

    பொருளுரை: பலர் கூடியிருக்கும் முக்கியச் சபையினில் சலனப்படுத்திச் சதுராடும் கைபேசி குழுமியவரின் முன்னே மேன்மையல்ல; உண்மையில் அஃது ஒருவரின் மேன்மைக்கு இழுக்கு என்றால் அஃது மிகையல்ல. அஃது குழுமிய நேரத்தில் பிறருக்குத் தொந்திரவாக இருப்பதுடன் குழுமிய காரணத்திற்கும் இடைஞ்சலாக அமைந்துவிடும்.

    9:
    சங்கத்தே சமனித்துச் சாற்றாதே கைபேசியுள்
    பங்கமிட்டே இரைவதா பண்பு?

    சங்கத்தே சமனித்துச் சாற்றாதே; கைபேசியுள்
    பங்கமிட்டே இரைவதா பண்பு?

    பொருளுரை: கைபேசியில் அமைதியாகப் பேசுதலே சமூகத்தில் உயரிய சிறந்த பண்பு. இரைந்து கத்துதல் அல்ல என்பதை உணர்வீர்களாக. அவ்வாறு காட்டுக் கத்தாய் கத்திப் பேசுவதா நாகரீகம்?

    10:
    சந்தையின் கூவலைக் கைபேசிப் பரப்பல்
    நிந்தையை நல்குமல்ல பிற.

    சந்தையின் கூவலைக் கைபேசிப் பரப்பல்
    நிந்தையை நல்கும் அல்ல பிற.

    பொருளுரை: சந்தைப் படுத்தும் கூப்பாட்டை; விளம்பரத்தை, அறைகூவலை கைபேசியால் அனைவருக்கும் கூப்பிட்டுப் பரப்புதல் அவர்களின் நிந்தையையே நல்கும்; வேறல்ல. பயனாளிகளுக்குக் கைபேசி வழி சந்தைப் படுத்துதல் உண்மையில் எரிச்சலூட்டும் அணுகுமுறை.

    பயனுள்ள இணையதள முகவரிகள்...

    By: Unknown On: 07:47
  • Share The Gag
  • 1. ஆன்லைன் -ல் புகைப்படங்களை அழகாக வெட்டித்தரும் பயனுள்ள தளம்.

    http://www.cutmypic.com/

    2. வீடியோ விளக்கத்தோடு அசத்தும் இணைய அகராதி.

    http://www.wordia.com/

    3. தமிழில் கணினி செய்திகள்

    http://tamilcomputertips.blogspot.com/

    4. உங்கள் போடோவை ஓவியமாக மாற்ற ஒரு இலவச மென்பொருள்

    http://www.fotosketcher.com/PortableFotoSketcher.exe

    5. அனைத்து அரிய வீடியோக்களையும் கொடுக்கும் பயனுள்ள தளம்.

     http://yttm.tv/

    6. ஆங்கிலம் கற்க கைகொடுக்கும் தளம்.

    http://classbites.com/ 

    7. தேடல் முடிவுகளை வகை வாரியாக பிரித்து கொடுக்கும் மிகவும் பயனுள்ள தளம்.

    http://www.helioid.com

    8. தொலைக்காட்சியில் இருந்து வீடியோ பயனுள்ள தளம்.

     http://www.8on.tv

    9. குழந்தைகள் விரும்பும் கார்டூன் முதல் அத்தனை டி.வி நிகழ்சிகளும் ஒரே இடத்தில் பார்க்க

    http://video.kidzui.com

    10. வீடியோ எடிட்டிங் செய்ய உதவும் இலவச மென்பொருள்.

    http://www.lightworksbeta.com

    11. பிறந்தநாள் வாழ்த்து செய்திகளை கொடுக்கும்  பிரத்யேகமான தளம்.

    http://www.freebirthdaymessages.com

    12. வலைப்பூவுக்கு அழகான பேக்ரவுண்ட் வடிவமைக்க.

    http://bgmaker.ventdaval.com

    13. வீடியோ மெயில்ஆன்லைன் மூலம் இலவசமாக அனுப்ப.

    http://mailvu.com

    கும்மிப்பாடல்களின் அமைப்பு:-

    By: Unknown On: 07:42
  • Share The Gag
  • கும்மிப்பாடல்களின் அமைப்பு:-

                    ஆதிமனிதன் என்று தோன்றி, அறிவுநிலையில் விளக்கம் பெற்றானோ அன்றே அவனுக்குள் கலை ஆர்வம் தோன்றி வளர்ந்திருக்க வேண்டும். கருத்தை உடனே வெளிப்படுத்த உதவும் ஆடலும் பாடலும் அவனுடைய தொடக்கக்காலக் கலைகளாக அமைந்திருக்க வேண்டும். பாடல் இசையை அடிப்படையாகக் கொண்டது. பாடலுக்கேற்ப ஆடும் ஆட்டம் உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. மொழி வளர்ச்சி ஏற்படுவதற்கு முன்னே தன் உணர்ச்சிப் பெருக்கை ஒலி வடிவங்களாக்கி ஓசையெழுப்பியிருப்பான். அதுவே காலப்போக்கில் வாய்மொழிப்பாடலான நாட்டுப் புறக்கலையாக உருவாகியுள்ளது எனலாம். மொழிச் சிந்தனை எதுவும் இன்றி உணர்ச்சிக் கோலமாக எழுந்த ஒலியமைப்புடைய பாடல்களே நாட்டுப்புறப் பாடல்களின் முதல்நிலை என்று கூறலாம். இவ்வகையான நாட்டுப்புறப் பாடல்களுக்கு மக்களின் மனதைக் கவரும் நயமான தன்மைகள் இயல்பாக அமைந்திருந்தன.
                    தொல்காப்பியர் குறிப்பிடும் பண்ணத்தி, பிசி எனும் பாடல் வகைகள் நாட்டுப்புற மக்களின் வாய்மொழிப் பாடல்களாகத்தான் இருந்திருக்க வேண்டும்.....என்பர் ஆய்வாளர். பாணர்கள் போர்க்களத்திலும், காதற்களத்திலும் பாடியுள்ள குறிப்புகள் ஏட்டிலக்கியத்தில் காணப்படுகின்றன. போர்ப் பாடல்கள் வீரவுணர்வு மிக்கப் புறப்பாடல்களாகவும், காதற் பாடல்கள் இன்பவுணர்வு கொண்ட அகப் பாடல்களாகவும் தான் இருக்கவேண்டும். இவை இரண்டும் மனிதனின் இயல்பான, உணர்வுகள். இவற்றையே பானர்கள் தங்கள் வாய் மொழிப் பாடல்களில் பாடியிருப்பர். அவற்றைத்தானே புலவர்களும் சங்க இலக்கியப் பாடல்களில் பாடியுள்ளனர். ஏட்டிலக்கியமான சங்கப்பனுவலுக்கு வாய்மொழிப் பாட்டிலக்கியமான பாணர் பாடல்கள் வழிவகுத்துள்ளன என்று கருதுவது பொருத்தமாகும் எழுத்திலக்கியத்தின் நாற்றாங்காலாக வாய்மொழிப் பாடல்கள் அமைகின்றன
     
    சிலப்பில் வாய்மொழிப் பாடல் அமைப்புகள்:
                    சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுச்சிறந்துள்ள கானல்வரி, வேட்டுவரி, ஆய்ச்சியர் குரவை, ஊர்சூழ்வரி, குன்றக் குரவை, வள்ளைப்பாட்டு, கந்துவரி, முதலியவை வாய் மொழிப்பாடல் அமைப்பை உடையவை. திருவாசகத்தில் வரும் திருப்பொற்சுண்ணம், தெள்ளேணம் கொட்டமோ, திருப்பூவல்லி, திருப்பொன்னூசல் யாவும் வாய்மொழிப்பாடல்களாகப் பாடப்பட்டவை. இடைக்காலத்தில் எழுந்த சிற்றியக்கியங்களான பள்ளு, குறவஞ்சி போன்றவையும் வாய்மொழிப் பாடல் அமைப்புக்கொண்டவை. நாட்டுப்புறப்பாடல்கள் உணர்ச்சிகளை அப்படியே வெளியிட்டு விடுகின்றன. என்றும், நாட்டுப்புறப்பாடல்கள் காலங்கடந்தும் வாழ்வதற்குக் காரணம் மக்கள் நெஞ்சங்களில் பசுமரத்தாணி போல் பதியும் தன்மை அவற்றிற்கு இருப்பதனால் தான் என்றும் குறிப்பிட்டுள்ளார். பழைய பண்பாட்டின் கருவூலமாய் நாட்டுப் புறப்பாடல்கள் துலங்கும் தன்மையுடையவை.
     
    கும்மிப்பாடல்கள்:
                    கும்மிப்பாடல்களும் வாய்மொழியாக இருந்து இலக்கிய உருவங்களாக வளர்ந்தவை. தமிழில் அத்தகைய இலக்கிய பண்புகள் நூற்றுக்கும் அதிகமாக உள்ளன. கும்மிப்பாடலைப்பு பாரதி போன்ற பலருக்குப் பாடல்கள் புனைய உதவியுள்ளது. பெண்களுக்குரிய இக்கும்மிப்பாட்டு வகையால் சமுதாயச் சீர் திருத்தக் கருத்துக்களை வெளிப்படுத்த முடியும் என்பதைத் தெளிவாக உணர்த்தியவர் பாரதியார். பாமர மக்களின் அறியாமையைப் போக்கவும், சமுதாய விழிப்புணர்வை (Social awareness) அளிக்கவும் கும்மிவகைப் பாடல்கள் துணைநின்றன. இத்தகைய பயன்பாட்டு வகைகைச் சார்ந்த மகளிர்கலையாக வளர்ந்துவரும் கும்மிப்பாடல்களின் அமைப்பு முறையே விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
     
    கும்மிப்பாட்டின் அமைப்புமுறை:
                    ஏதாவது ஒரு இலக்கியப் படைப்பைக் குறிப்பிடத்தக்க ஒரு இலக்கிய இனமாகக் கருத வேண்டுமானால், அதெற்கெனச் சில அமைப்பு முறைகளும் தனித்துவக் கூறுகளும் இருக்கவேண்டும் என்பர் ஆய்வாளர். கும்மிப்பாடல்கள் தனக்கென சில அமைப்பு முறைகளையும் கூறுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளன.
    "கும்மியடிப் பெண்கள் கும்மியடி - உங்கள்
    கூந்தல் குலுங்கிடக் கும்மியடி
    நம்மையாளும் விக்கி னேசுவரன் பாதத்தை
    நாடிக் கும்மி யடியுங்கடி - நீங்கள்
    கூடிக் கும்மி யடியுங்கடி"
    இப்பாடலில் பெண்களைப் பார்த்து கும்மியடி பெண்கள் என்று வேண்டுவதைக் காணலாம். அடுத்து இப்பாட்டால் தெய்வ வணக்கத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருப்பதைத் காணமுடிகின்றது. கும்மிப்பாட்டின் ஆசிரியர் பாடுவது கும்மிப்பாட்டு என்பதை உறுதியாக வெளிப்படுத்திவிடுகின்றனர். இது கும்மிப்பாடல்கள் கொண்ட அமைப்பாகும்.
     
    சமுதாயச் சீர்திருத்தங்களைக் கும்மிப்பாடல் மூலம் எடுத்துரைத்தல்:
                    "கும்மியடி! தமிழ்நாடு முழுதும்
                    குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
                    நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
                    நன்மை கண்டோ மென்று கும்மியடி
                    ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
                    றெண்ணியிருந்தவர் மாய்ந்து விட்டார்
                    வீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
                    விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்
                    பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும்
                    பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்.
                    எட்டு மறிவினில் ஆணுக் கிங்கே பெண்
                    இளைப்பில்லை காணென்று கும்மியடி" (பாரதியார் பாடல்கள் ப.211)
    என்ற பாரதியாரின் கும்மிப்பாடல்கள் சமுதாயச் சீர்திருத்தத்தை எடுத்துரைக்கும் விழிப்புணர்வு கும்மிப்பாடல்களாக அமைவதைக் காணலாம்.
     
    கதை சொல்லும் அமைப்பில் கும்மிப்பாடல்:
                    வரலாற்றுச் செய்தியைக் கும்மிக்கேற்ற ஓசை நயத்துடன் கதையாகப் பாடிக்கொண்டே கும்மியடிக்கும் பழக்கம் உண்டு என்பதைச் சிவகங்கைச் சரித்திரக் கும்மியால் அறிய முடிகின்றது.
    "இப்படியாக மருதிருவரும் கும்பினைக் கேற்ற
    பிள்ளையா யரசாண் டிருந்தார்
    அப்படியாக இருக்கையிலே மன்னர்க்
    கழிவ வந்தகைச் சொல்லுகிறேன்" (சிவகங்கைச் சரித்திரக்கும்மி, பதி.தி. சந்திரசேகரன் ப.48)
    மக்களுடைய பேச்சுமொழியில் எழுதப்பட்ட வாய்மொழி இலக்கியத் தன்மையுடன் அமைவதைக் காணலாம்.
     
    அறிவுரை கூறுவதாக அமையும் கும்மிப்பாடல்கள்:
                    மக்களை நோக்கி அறிவுரை கூறுவதாக அமையும் கும்மிப்பாடல்கள் சமுதாயத்தில் பண்பாட்டு முன்னேற்ற நோக்கம் கொண்டவை எனலாம்.
    "மாதர் நடக்கையைச் சொன்னது மல்லாமல்
    வந்திடுந் தீங்கையும் நன்குரைத்தேன்
    பாதகி யாசையை நீக்கிச் சிவஸ்துதி
    பண்ணுவா யெப்போதும் மானிடனே... (விலைமாதர் கும்மி - பாடல் 44)
    விலைமாதர் ஒழிப்பு அவசியம் என்று உரைப்பதைக்காணலாம்
    "கற்புள்ள மாதர் குலம் வாழ்க - நிறை
    கற்பை யறிந்தவரே வாழ்க
    தற்பரனைப் போற்றிக் கும்மியடி - குரு
    சிற்பரனைப் போற்றிக் கும்மியடி" (வாலைக் கும்மி - பாடல் 45)
    என்ற கும்மிப்பாடல் கற்புள்ள மாதரைப் போற்றுவதாக அமைந்துள்ளது.
     
    சந்தவோசையுடைய கும்மிப்பாடல்:
                    சந்தவோசை மிக்க கும்மிப் பாடல்கள் மக்களை எளிதில் கவரும் ஆற்றல் உடையவை. வள்ளிவேடனைப் பார்த்துக் கூறுவதாக அமையும்.
    "எட்டாத தேனுக் கொரு நொண்டி பண்ணாந்து
    கொட்டாவி விட்ட கதைபோல
    ஏங்கிக் கணைதாங்கிப் பனைவாங்கி மிகவோங்கி
    எதிரென் முன்னே நில்லாதே வேடுவனே" (முருகர் ஒயிற்கும்மி. பாடல் 136)
    இப்பாடல் கேட்போரை மகிழச் செய்வதாகும்.
       
    வருணனை மிக்க கும்மிப்பாடல்:
                    பாண்டவர் வல்லியாற்றுக் கரையைக் கடந்து தெய்வ மலையைக் கண்ணாரக் கண்டார்கள் என்ற செய்தியைச் சொல்ல வந்த ஆசிரியர் அம்மலையையும், மலைசூழ்ந்த சோலையையும் மிக்க நயத்துடன் வருணனை செய்துள்ளார்.
    "மாங்கனி தேங்கனி காய்ந்திருக்கு மங்கே
    மாதளை மல்லிகை பூத்திருக்கும்
    தாங்காத வாழைக் குலைசாயு மங்கே
    தாழைமலர் வாசமே பாயும்" (பஞ்சபாண்டவர் வைகுந்தக்கும்மி பாடல் 227)
    இவ்வருணனைப் பகுதி கும்மிப்பாடலுக்கு இலக்கிய இன்பத்தைக் கொடுத்து நிற்பதைக் காணலாம்.
     
    முடிவுரை:
                    கும்மியைத் தமிழருக்கே உரிய கலையாகக் கூற முடியவில்லை. ஆந்திராவிலுள்ள கொப்பியும் கேரளாவிலுள்ள கை கொட்டிக்களி, பிராமணிப்பாட்டு ஆகியவை கும்மிப் பாடலுடன் நெருக்கமான உறவு கொண்டுள்ளன. கன்னட நாட்டிலும் கும்மியைப் போன்று ஒரு ஆடல் நடைபெறுகின்றது. ஆகையினால் கும்மிப்பாட்டை ஒரு திராவிடக் கலை என்று கூறுவதே பொருத்தமாகும். குஜராத் நாட்டில் உள்ள கர்பா நடனமும் ராஜஸ்தானில் நடக்கும் கும்மார ஆட்டமும் கும்மியுடன் தொடர்பு கொண்டதாகத் தோன்றுகின்றன.
                    பெண்கள் கலையாக வளர்ந்து வரும் கும்மிப் பாடல்கள் தனக்கென்று சில கூறுகளை அமைத்துக் கொண்டு வளர்ந்து வந்திருப்பதை அறிய முடிகின்றது. கணினி உலகில் வாழும் இக்காலக் கட்டத்திலும் கிராமங்களில் காணும் பொங்கலன்று பெண்கள் அனைவரும் குறிப்பிட்ட ஒரு பொது இடத்தில் கூடி பல்வகைபாடு பொருளுடன் கூடிய கும்மிப் பாடல்களைப் பாடி கும்மியடிப்பது கண்ணுக்கும், கருத்துக்கும் இன்பம் விளைவிப்பதாகும்.

    கவிதை_வருத்தம் வேண்டாம் வெற்றியருகே!!!

    By: Unknown On: 07:37
  • Share The Gag
  • கவிதை_வருத்தம் வேண்டாம் வெற்றியருகே!!!

    பூக்கள் உதிர்ந்து விழும்
    என்பதற்காக மரங்கள்
    வருத்தப்படுவதில்லை.


    தென்றல் நின்று போகும்
    என்பதற்காக மலர்கள்
    வருத்தப்படுவதில்லை.


    நிலவு தேய்ந்து விடும்
    என்பதற்காக வானம்
    வருத்தப்படுவதில்லை.


    பிறகு ஏன் மனிதா!
    நீ மட்டும் தோல்வி கண்டு
    துவண்டு போகிறாய்?

    காலம் இருக்கு கனிவது நிச்சயம்
    நேரம் இருக்கு நடப்பது நிச்சயம்
    உழைப்பு இருக்கையில் வெற்றி நிச்சயம்!!!