Sunday 6 October 2013

Tagged Under:

சிங்கமும்..ஈ யும்..(நீதிக்கதை)

By: Unknown On: 16:03
  • Share The Gag



  • ஒரு காட்டில் சிங்கம் ஒன்று இருந்தது.அது தனது பலத்தாலும், கர்ஜனையாலும் காட்டில் இருந்த அனைத்து மிருகங்களையும் பயமுறுத்தி வந்தது.
    பயம் காரணமாய் அனைத்து மிருகங்களும் சிங்கத்திடம் அடக்கமாய் இருந்து வந்தன.
    இந்நிலையில் 'ஈ" ஒன்று பயமின்றி சிங்கத்தின் மீது வந்து அமர்ந்தது.
    அதைப் பார்த்ததும் சிங்கம் கோபமுற்று கர்ஜனை செய்தபடியே..'உன்னை என் பற்களால் கடித்துக் குதறுவேன்..நகங்களால் பிறாண்டுவேன்' என்றது.
    அதற்கு ஈ யோ நீ பலசாலியாய் இருக்கலாம்..உன்னைப் பார்த்து மற்ற மிருகங்கள் பயப்படலாம்.ஆனால் நான் பயப்பட மாட்டேன்.இன்னும் சொல்லப்போனால்..நீ சொன்னபடி உன்னையே நீ பற்களால் கடித்துக் கொள்ளவும், நகங்களால் பிறாண்டிக் கொள்ளவும் செய்வேன்" என்றது.
    சிங்கம் கோபத்துடன் சவால் விட..ஈ பறந்து வந்து சிங்கத்தின் மூக்கிலும்,முகத்திலும் அமர்ந்து அதைக் கடித்தது. ஈ முதுகில் அமர்ந்த போது..அதை விரட்ட சிங்கம்.தன் பற்களால் முயன்ற போது..ஈ பறந்து விட சிங்கம் தன் முதுகைத் தானே கடித்துக் கொண்டது.
    ஈ சிங்கத்தின் முகத்தில் அமர்ந்த போது, அதை விரட்ட தன் கால் நகங்களால் முயல..ஈ பறக்க...சிங்கம் தன் நகங்களால் தன் முகத்தையே பிறாண்டிக் கொண்டது.
    சிங்கத்தை நன்கு இம்சை செய்து விட்டு ஈ பறந்தது.
    அப்போதுதான் சிங்கத்திற்கு புரிந்தது..தான் உடலளவில் வீரமாய் இருந்தாலும்..ஒரு சிறு ஈ தன்னை சங்கடப் படுத்தி விட்டதே என..உருவத்தைக் கண்டு யாரையும் எடை போடக் கூடாது என உணர்ந்தது.
    இதைத்தான் வள்ளுவரும்..

    உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்
    கச்சாணி யன்னார் உடைத்து

    என்றார்.
    (பொருள்- உருவத்தால் சிறியவர்கள் ஆனாலும் யாரையும் கேலி செய்து அலட்சியப் படுத்த்க் கூடாது. பெரிய தேர் ஓடக் காரணமாய் இருப்பது சிறிய அதன் அச்சாணியே)

    0 comments:

    Post a Comment