Wednesday 9 July 2014

Tagged Under: ,

சூப்பர் ஸ்டாரையும், உலக நாயகனையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர்!

By: Unknown On: 18:00
  • Share The Gag
  • தமிழ் சினிமாவின் இயக்குனர்கள் எல்லோருக்கும் சிகரமாக இருப்பவர் கே. பாலசந்தர் அவர்கள். 1930ம் வருடம் ஜூலை 9ம் தேதி சினிமாவிற்கு தொண்டாற்றவும், தமிழ் சினிமா பெருமைகளை இந்திய அளவிற்கு கொண்டு செல்வதற்காகவே பிறந்தவர் கே.பி.

    இவர் மேடை நாடகத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர். திரைத்துறையில் 1965ம் ஆண்டு வெளியான நீர்க்குமிழி இவரது முதல் இயக்கமாகும். நாகேஷ் இதில் கதாநாயகனாக நடித்தார்.

    இன்று சூப்பர் ஸ்டார், உலக நாயகன் என்று நாம் மார்தட்டி சொல்லும் பலரும் அன்று இவரது பார்வையில் பட்டதால் தான் இன்று நட்சத்திரங்களாக ஜொலித்து கொண்டிருக்கின்றனர். யாருமே கண்டுகொள்ளாத நடன இயக்குனர்களின் உதவியாளராக ரோட்டில் திரிந்து கொண்டிருந்த ஒரு இளைஞனை தன் படத்தில் நடிக்க வைத்தார் தைரியமாக, அவர் தான் இன்று இந்தியாவே போற்றும் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன்.

    இதே போல் கதாநாயகன் என்றால் சிவந்த தோலும், 6 அடி உயரமும் இருந்த கால கட்டத்தில், ஒரு சாதரண சாமானியனை அபூர்வ ராகங்களில் அறிமுகப்படுத்தி, இன்று இந்திய திரையுலகமே தலையில் தூக்கிவைத்து கொண்டாடும் சூப்பர் ஸ்டாராக உயர்த்தியவர் இவர் தான்.

    இது மட்டுமில்லை ’சின்ன கலைவாணன்’ விவேக், பிரகாஷ் ராஜ் போன்ற எண்ணற்ற திறமை சாலிகள் இவர் மோதிரக்கையில் கொட்டு வாங்கியதால் தான், இன்று நாடு போற்றும் கலைஞர்களாக நம் கண்முன் தெரிகின்றனர்.

    இன்றைய தமிழ் சினிமாவில் பெண்கள் என்றாலே வெறும் கவர்ச்சி பொருளாக தான் வந்து செல்கின்றனர், ஆனால் பெண்களின் உலகை மிக துள்ளியமாகவும், அழகாகவும், கண்ணியமாகவும், தைரியமாகவும் காட்டியவர். இவருடைய பெரும்பாலான படங்களில், மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவையே கருப்பொருளாய் விளங்கின. அபூர்வ ராகங்கள், புன்னகை மன்னன், எதிர் நீச்சல், வறுமையின் நிறம் சிகப்பு, உன்னால் முடியும் தம்பி முதலியன இவர் இயக்கிய சிறந்த படங்களில் சிலவாகும்.

    மேலும் இவர் இயக்கிய சிந்து பைரவி படத்தில் நடித்த சுஹாசினிக்கு அவ்வருடத்தின் சிறந்த கதாநாயகிக்கான தேசிய விருது கிடைத்தது . தமிழ் திரையுலகில் 10 படங்களை எடுப்பதற்குள் நம் பாதி ஆயுள் முடிந்துவிடுகிறது, ஆனால் இவர் இதுவரை 100 படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மகுடத்திற்கெல்லாம் மகுடம் வைத்தார் போல் 2011ம் ஆண்டு திரைதுறையின் நாட்டின் மிக கௌரவமான விருதான தாதாசாகிப் பால்கே விருதை பெற்றார்.

    வயது எண்பதை கடந்தாலும் இன்றும் சளைக்காமல் தன் அடுத்த பரிமாணத்தை உத்தமவில்லனில் நடிகனாக எடுத்திருக்கிறார். அவர் இன்று போல் என்றும் மூளை நரைக்காத கலைஞனாக விளங்கவேண்டும். இந்த மாமேதைக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதில் ‘சினி உலகம்’ கர்வமடைகிறது.

    0 comments:

    Post a Comment