Friday 20 September 2013

Tagged Under:

தண்ணீர்ப் பஞ்சத்தை சமாளிக்க தீர்வு சொல்லும் மாணவர்கள்!

By: Unknown On: 18:04
  • Share The Gag

  • நிலத்தடி நீரை சேமித்து தண்ணீர்ப் பஞ்சத்தைச் சமாளிக்க வழி சொல்கிறார்கள் சென்னைக் கல்லூரி மாணவர்கள்.

    வீணாக சாக்கடையில் கலக்கும் மழைநீரை, பாதுகாத்து பத்திரப்படுத்தி பல்வேறு உபயோகங்களுக்குப் பயன்படுத்தினால் எப்படி இருக்கும்? கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. அதற்கான முயற்சிகளை யார் எடுப்பது?

    சென்னை ஸ்ரீ சாராம் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக். (சிவில்) படிப்பை சமீபத்தில் முடித்த மாணவர்கள் விக்னேஷ் சந்திரமௌலி, வி.வினோத், எஸ்.நவீன் குமார், ஜி.பிரபு ஆகியோர் ஒருங்கிணைந்து இதற்கான தீர்வைக் கண்டறிந்துள்ளனர்.

    சென்னை நகர மக்கள் அன்றாடம் சந்தித்து வரும் தண்ணீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையிலான புராஜக்ட்டை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வறட்சியால், மாநிலம் முழுவதுமே நிலத்தடி நீர் வரத்து குறைந்தது. சென்னையில் கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்த ஆண்டு பெய்த மழையால், நீர் வரத்து அதிகரித்தபோதிலும், மழை நீர் சாலைகளில் வீணாக வழிந்தோடியதையும் பார்க்க முடிந்தது. அவ்வாறு வீணாகும் மழை நீர்  இறுதியில் கடலில் கலக்கிறது. தூய்மையான மழை நீரில், 70 சதவீதம் நீர் சாக்கடைகளிலும், சாலைகளிலும் வீணாகிறது. இவ்வாறு வீணாகும் நீரை சேமிக்க வழியுண்டா என்பது பற்றி யோசித்ததன் விளைவே, எங்கள் புராஜக்ட்டுக்கு அடித்தளமாக அமைந்தது" என்று விவரிக்கிறார் வினோத்.

    மழை நீரை வீணாக்காமல், பயனுள்ள முறையில் சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் எங்கள் புராஜக்ட்டை உருவாக்கத் திட்டமிட்டோம். ரெய்ன் சென்டர் அமைப்பின் சேகர் ராகவனைச் சந்தித்தோம். அவரது ஆலோசனைப்படி, சென்னையில் நிலத்தடி நீர் மட்டத்தின் அளவை ஆராய்ந்தோம். இதற்காக பல்வேறு இடங்களைத் தேர்வு செய்தோம். வீடுகளில் மழை நீர் சேமிப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு  முன்பு, நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு என்று இரண்டு கோணங்களில் எங்கள் ஆராய்ச்சியைத் துவக்கினோம். பெசன்ட் நகர், வேளச்சேரி, தி.நகர் போன்ற இடங்களில் மழை அளவையும், வடிகால் வசதிகளையும் ஆராய்ந்தோம். அப்போது எங்களுக்கு சில முடிவுகள் தெரியவந்தன..." என்று விவரிக்கின்றனர் வினோத்தும், பிரபுவும்.

    எங்கள் ஆராய்ச்சியின்படி, கடுமையான பாறைகள் உள்ள பகுதி, களிமண் பகுதி, மணற்பாங்கான பகுதி என்று மூன்று வித்தியாசமான பிரிவுகள் இருப்பதை அறிந்தோம். பெசன்ட் நகர் பகுதி, மணல் அதிகமுள்ள பகுதியாகும், வேளச்சேரி, கடினமான பாறைகளாலான பகுதி. தி.நகர், களிமண் அதிகமுள்ள பகுதி. இப்படி, ஒவ்வொரு பகுதியிலும் அந்தப் பகுதி மண்ணின் தன்மைக்கேற்ப, நிலத்தடியை சீரமைத்து தண்ணீரைத் தேக்கி வைக்கும் வசதிகள் செய்யவேண்டும். எங்கள் புராஜக்ட்டின்போது வேளச்சேரியில் ஒரு தெப்பக்குளத்தைப் பார்த்தோம். 10 லட்சம் லிட்டர் நீரைத் தேக்கி வைக்கும் தன்மை கொண்ட அந்தக் குளத்தில் தேவையற்ற செடி, கொடிகள் பரவியிருந்தன. குளமே தெரியாத அளவுக்கு புதர் மண்டிக் கிடந்தது. இதுபோன்ற குளங்களையும், தண்ணீர் அமைப்புகளையும் கண்டறிந்து தூர் வாரும் பணியை அரசு மேற்கொள்ள வேண்டும்" என்கிறார்கள் நவீன்குமாரும், விக்னேஷ் சந்திரமௌலியும்.

    களிமண் பகுதியான தி.நகர் போன்ற பகுதியில், விளையாட்டு மைதானம் போன்ற ஒரு பொது இடத்தில் சுமார் 6 அடி ஆழத்திற்கு ஒரு சிறிய கிணற்றைத் தோண்டி, அதில் ஒரு பைப்பை நிலத்தடியைத் தொடும்படி இணைக்க வேண்டும். வீணாகும் மழை நீரை இந்த கிணற்றை நோக்கித் திருப்பிவிடவேண்டும். மழை நீருடன் குப்பைகள், கண்ணுக்குத் தெரியாத துகள்கள் கலந்துவிடாமல் இருப்பதற்காக இந்த கிணற்றை, துளைகள் நிறைந்த ஒரு கான்கிரீட் ஸ்லாப்பால் மூடி விடவேண்டும். சாலைகளில் வீணாகும் மழை நீர் இந்த கிணற்றில் விழுவதால், நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும். பெசன்ட் நகர் போன்ற மணற்பாங்கான பகுதிகளில், சாலையின் ஒரு ஓரத்தில் சிறிய அளவில் தண்ணீர் சேகரிப்புத் தொட்டியை அமைத்து, வீணாகும் நீரைச் சேமிக்கலாம். வேளச்சேரி போன்ற பாறைகள் நிறைந்த நிலத்தடியைக் கொண்ட பகுதியில், கோயில் குளம், தெப்பக்குளம் போன்ற குளங்களை தூர்வாரி, மழை நீர் சேகரிப்புத் தொட்டிகளாகப் பயன்படுத்தலாம்" என்கிறார்கள் வினோத்தும் அவரது நண்பர்களும்.

     

    0 comments:

    Post a Comment