Friday 20 September 2013

Tagged Under: ,

குலைகுலையாய்க் காய்க்கும் குட்டைத் தென்னை!

By: Unknown On: 18:01
  • Share The Gag

  • தென்னையில், நெட்டை ரகம் தேங்காய்களுக்காகவும், குட்டை ரகம் இளநீருக்காகவும் சாகுபடி செய்யப்படுகின்றன. சமீப காலமாக, குட்டை தென்னை ரகங்களை விவசாயிகள் விரும்பிப் பயிரிட்டு வருகின்றனர். குறுகிய காலத்திலேயே மகசூல், எளிய பராமரிப்பு, இளநீருக்கு ஏற்பட்டுள்ள மவுசு, நிலையான கொள்முதல் விலை போன்ற காரணங்களால், தமிழகத்தில் குட்டை தென்னந்தோப்புகள் அதிகரித்து வருகின்றன. நெல்லை மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த அந்தோணிச்சாமி, 4 ஹெக்டேர் பரப்பளவில், குட்டை தென்னை மரங்களைப் பயிரிட்டு, நல்ல லாபமடைந்து வருகிறார். அவரது வழிகாட்டல்கள் இங்கே...

    சமீப காலமாக, கார்பானிக் அமில குளிர்பானங்களை விட, இளநீர் போன்ற இயற்கை பானங்களை மக்கள் விரும்பி அருந்தத் தொடங்கியுள்ளனர். எதிர்வரும் காலத்தில் இளநீர் பானத்திற்கு உள்ள கிராக்கி மேலும் அதிகரிக்கும் என்பதால், வணிக ரீதியாக குட்டை ரக தென்னை மரங்களைப் பயிரிடத் தொடங்கினேன். பச்சை, மஞ்சள், ஆரஞ்சு போன்ற நிறங்களில் சுமார் 800 தென்னை மரங்களை இயற்கை விவசாய முறையில் வளர்த்து வருகிறேன்.

    நடவு முறை

    நல்ல வடிகால் வசதியுடைய வண்டல் மற்றும் செம்பொறை மண் வகைகள் தென்னை சாகுபடிக்கு ஏற்றவை. சவ்காட் ஆரஞ்சு, சவ்காட் பச்சை, மலேசிய மஞ்சள் போன்ற குட்டை தென்னை ரகங்கள் தமிழக தட்பவெப்பநிலைக்கு உகந்தவை. சதுரம் அல்லது முக்கோண நடவு முறையைப் பின்பற்றலாம். நடவு வயலில் 3 அங்குலம் நீள ஆழ அகல அளவில் குழிகள் தோண்டி, ஏக்கருக்கு 70 கன்றுகள் நட வேண்டும். கன்றினை சுற்றியுள்ள மண்ணை நன்கு அழுத்திவிட்டு, தென்னங்கீற்றுகளைப் பயன்படுத்தி நிழல் ஏற்படுத்த வேண்டும். காற்று பலமாக வீசினால் குச்சியை ஊன்றி கன்றினை சேர்த்துக் கட்ட வேண்டும்.

    நீர் மற்றும் உர நிர்வாகம்

    தென்னைக்கு சொட்டுநீர்ப் பாசனமே உகந்தது. களைக் கட்டுப்பாட்டுக்கும், நீர் சிக்கனத்திற்கும் இது உதவும். நடவு செய்த ஓராண்டு வரை, வாரத்திற்கு 3 முறையும், இரண்டாவது ஆண்டு முதல், வாரத்திற்கு 2 முறையும் நீர் பாய்ச்ச வேண்டும். கோடைக்காலங்களில் ஒரு கன்றுக்கு 45  லிட்டர் வீதம், 4 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். தென்னை ஓலைகள், நார்க்கழிவுகளை மரத்தின் அடியில் பரப்புவதன் மூலம் நீர்ப்பற்றாக்குறையை சமாளிக்கலாம்.

    மக்கும் குப்பை, களைச்செடிகள், கரம்பை மண் ஆகியவற்றை கலந்து, 60 நாட்கள் ஊற வைத்து, பின்பு ஒவ்வொரு கன்றுக்கும் அக்கலவையை தேவையான அளவு இட வேண்டும். சிபாரிசு செய்யப்பட்ட ரசாயன உரங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    பயிர்ப் பாதுகாப்பு

    தென்னை சாகுபடியைப் பொருத்தவரையில், காண்டாமிருக வண்டுகள் பெரும் இடையூறாக இருக்கின்றன. இவ்வண்டுகள் விரிவடையாத குருத்துப்பாகம் மற்றும் மொட்டுப்பகுதியை மென்று விடுகின்றன. இதனால் 10-லிருந்து 12 சதவிகித மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இனக்கவர்ச்சிப் பொறி அமைத்தும், முட்டைகளைப் பொறுக்கியும் காண்டாமிருக வண்டுகளை அழித்திடலாம். பென்சில் முனை குறைபாடு காரணமாக, மரம் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தால், அவற்றை அப்புறப்படுத்தி விட வேண்டும். வேர் அழுகல் நோயைத் தவிர்க்க, தோப்பில் நீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.  குரும்பைகள் மற்றும் பூக்கள் உதிர்வதைத் தடுக்க, மரத்திற்கு 2 கிலோ வீதம்,  உப்பை பூ நுனியிலும், வேர்ப்பகுதியிலும் போட்டு, நீர் பாய்ச்ச வேண்டும். மரத்தண்டை கரையான் தாக்கத்திலிருந்து கட்டுப்படுத்த, மரத்தின் 2 அடி உயரத்திற்கு சுண்ணாம்பு அடிக்கலாம்.

    தோப்புப் பராமரிப்பு

    பருவமழை துவங்கும் போதும், முடியும் போதும் தோப்பை உழ வேண்டும். இதன் மூலம் வேர்களுக்கு ஈரத்தன்மை கிடைப்பதுடன், களைகளும் நீக்கப்படுகின்றன. பூச்சி மற்றும் பூஞ்சாணங்கள் தாக்கப்பட்டு இறந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி விடவேண்டும். அடிமரங்களில் அரிவாள் கொண்டு கொத்தி காயம் ஏற்படுத்தக்கூடாது. ஒவ்வொரு தென்னைமரத்தைச் சுற்றியும் 2 மீட்டர் சுற்றளவில், 11 அங்குல ஆழத்திற்கு உரிமட்டைகளை நார்ப்பகுதி மேலே இருக்கும்படி மண்ணில் புதைத்து வைத்தால் மழை நீரும், பாய்ச்சப்படும் நீரும் தக்க வைக்கப்பட்டு மரத்திற்கு கிடைக்கும். மண்ணரிப்பைத் தடுக்க, தோப்பின் 4 ஓரங்களிலும் தடுப்பு வரப்பு அமைக்கலாம்.

    மகசூல்

    நடவு செய்த 3 வருடத்திலிருந்தே காய்ப்பிடிப்பு தொடங்கிவிடும். ஒரு மரத்திலிருந்து ஆண்டுக்கு 200 இளநீர் கிடைக்கும். ஒரு குலையில் குறைந்தது 20 காய்கள் விளையும். 25 நாட்களுக்கு ஒரு முறை காய் பறிக்கலாம்.  4 ஹெக்டேரையும் சேர்த்து ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் காய்கள் கிடைக்கின்றன. ஓர் இளநீர் தற்போது 12 ரூபாய்க்கு விலை போகிறது. கோடைக்காலங்களில் இதன் விலை மேலும் அதிகரிக்கும். குட்டை தென்னை மரங்களை 30 முதல் 40 ஆண்டுகள் வரை பராமரிக்கலாம்" என்கிறார் அந்தோணிச்சாமி.

    0 comments:

    Post a Comment