Friday 29 November 2013

Tagged Under: , , ,

50 ஆண்டுகளில் பெரிய இழப்பு 25 கோடி பனைமரங்கள் அழிப்பு சர்க்கரை நோயாளிகள் அதிகரித்ததன் மர்மம் தெரியுமா?

By: Unknown On: 20:57
  • Share The Gag
  •  

    கடந்த 50 ஆண்டுகளில் 25 கோடி பனை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பனை வீழ்ந்து கருவேல மரங்கள் வாழ்வதே, தமிழகத்தில் சர்க்கரை நோயாளிகள் அதிகரிக்க காரணம் என்று கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறியுள்ளார்.

    ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 30 கோடி பனை மரங்கள் இருந்தன. தற்போது வெறும் 5 கோடி பனை மரங்கள் மட்டுமே உள்ளன. இவையும் தற்போது அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால், விவசாயிகளும், இயற்கை ஆர்வலர்களும் கவலையடைந்துள்ளனர்.

    இதுகுறித்து, தமிழ்நாடுகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறியதாவது:

    உலகளவில் 108 நாடுகளில் பனை மரங்கள் உள்ளன. எந்த நாட்டிலும் கள் இறக்குவதற்கோ, குடிப்பதற்கோ தடை இல்லை. தமிழகத்தில் மட்டும்  தடை உள்ளது. கள் இறக்குவதற்கான அனுமதி இருந்தவரை, பனை மரங்களை காப்பாற்ற வேண்டும் என்ற கவலை விவசாயிக்கு இருந்தது. தண்ணீர் இல்லாததால், பனை மரங்களை காப்பாற்ற முடியாமல் செங்கல் சூளைக்கும், சுண்ணாம்பு காளவாய்க்கும் எரிபொருளாக வெறும் ரூ.50க்கு விற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

    முன்பு இனிப்புக்கு பனங்கருப்பட்டி, கற்கண்டு மற்றும் பதநீர் போன்றவை பயன்பட்டன. வெள்ளை சர்க்கரை நுகர்வு அதிகரித்ததால், பனைப்பொருட்களின் பயன்பாடு குறைந்து விட்டது. சர்க்கரை நோயாளிகள் அதிகரிக்க இதுவே காரணம். சீமைக் கருவேல மரங்கள் அதிகரித்ததே, பனை மரங்களின் அழிவுக்கு காரணமாகி விட்டது.

    கள், பதநீர், கற்கண்டு, நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு என ஆண்டுதோறும் உணவு கொடுத்து வந்த பனை மரங்களை வெட்டுவதும், அவற்றை தோண்டி எறிவதும் கடும் குற்றத்துக்கு ஒப்பானதுதான். அழிவிலிருந்து காப்பாற்ற பனை மரங்களை வெட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.  பனை மரங்களை காப்பாற்றவும், பனை பொருட்களின் உற்பத்தி மற்றும் தேவையை பெருக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு நல்லசாமி கூறியுள்ளார்.

    0 comments:

    Post a Comment