Monday 2 December 2013

Tagged Under: , , ,

ஒருவரின் செயலுக்குரிய பரிசு எது?

By: Unknown On: 16:25
  • Share The Gag
  • மலைக்கு மேல் இருக்கும் தனது வீட்டுக்கு அடிவாரத்தில் இருந்து இரண்டு பானைகளில் தண்ணீர் சுமந்து செல்வான் அந்தக் குடியானவன். ஒரு பானையில் மட்டும் சில ஓட்டைகள் இருந்தன. இதனால் வழிநெடுக நீர் ஒழுகி, வீட்டை அடைவதற்குமுன் பாதியளவு நீர் குறைந்து விடும். முதலாளிக்கு நன்றாகப் பணியாற்ற முடியவில்லையே என்ற வருத் தத்தில் கண்மூடிக் கிடந்தது அந்தப் பானை.

    ஒருநாள் கண்களை திறந்த பானை, வழிநெடுக பச்சைப்பசேலென புற்களும் பூச்செடிகளுமாக வளர்ந்து நிற்பதைக் கண்டு மகிழ்ந்தது. ‘அட... இந்த அற்புதத்தை உருவாக்கியது யார்?’ என்று பானை கேட்க... ‘வழிநெடுக விதையைத் தூவி வைத்தேன். நீதான் நீரூற்றி தோட்டத்தை உருவாக்கினாய்’ என்றான் குடியானவன்.

    கடவுளின் படைப்பில் எதுவும் வீணாகு வதில்லை. எவரையும் வீண் என விலக்க முடியாது.

    ஒவ்வொருவரும் ஏதோவொரு மகத்தான காரியத்தைச் செய்யவே படைக்கப்பட்டிருக்கி றோம். அந்தக் காரியம் என்ன? அதைச் செயல்படுத்துவது எவ்விதம், என்று கண்டறிவதில்தான் நமது வெற்றி அடங்கியுள்ளது. அறிவு நூல்கள் வாழ்வின் இலக்கை சுட்டிக்காட்டி... அதை நோக்கி உற்சாகமாக உழைக்க வழிகாட்டுகின்றன.

    வீட்டுக்கும் நாட்டுக்கும் நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் பல உண்டு. இவற்றைத் தொழில் என்று சொல்வதை விட, தர்மம் என்றே பண்பாடு போதிக்கிறது. அதாவது, பெற்றோராக இருந்து கடமை ஆற்றுவது தொழில் அல்ல; தர்மம்! நமது கடமையை அர்ப்பணிப்பு உணர்வுடன் நிறைவேற்றும் பொறுப்பு நமக்கு உண்டு என்பதை உணர்வது அவசியம்.

    நம்மில் பலரும் உரிமைக் குரல் கொடுக்கின்றனர். ஆனால் கடமையை அலட்சியப்படுத்திவிடுகின்றனர். காலப் போக்கில், உரிமைக்காகப் போராடுவதே கடமையாகி விடுகிறது. நமக்கான உரிமையை எடுத்துரைக்கும் மனித உரிமைக் கழகங்கள் உண்டு. இதேபோல் மனித கடமைக்கழங்கள் ஏதேனும் உண்டா? நமது கடமைக்குள் பிறரது உரிமையும் பிறரின் உரிமைக்குள் நமது கடமையும் மறைந்திருக்கின்றன என்பதை அறிவோமா?

    “சே.... என்ன வாழ்க்கை இது” என அன்றாடக் கடமைகள் குறித்த சலிப்பும், திங்கட் கிழமை மீதான வெறுப்பும், ஞாயிற்றுக்கிழமையை நேசிப்பதுமாக வாழ்பவர்தானே அநேகம்?

    சில அடிப்படை உண்மைகளை புரிந்து கொள்வது அவசியம். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த உலகில் செயல்படாமல் இருக்க முடியாது என்பது இயற்கையின் நியதி. அதுமட்டுமா? போதிய மனப்பக்குவம் இன்றி செயலை விட்டுவிடுவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

    செயலாற்றுவது என்பது ஒரு கலை. இதுகுறித்து கர்ம யோகமாக கீதையில் உபதேசித்திருக்கிறார் கிருஷ்ணர். செயல் புரிவதன் நுணுக்கத்தை அறிந்தோர். தங்களது செயலை இறைவனுக்கான வழி பாடாகக் கருதுவர். செயல்படுவதன் நுணுக் கத்தை அறிந்தால்தான் நிம்மதியாக வாழ முடியும். அப்படி நிம்மதியாக வாழ செய லாற்றுவது குறித்து வாழ்க்கை நெறியையே வகுத்துத் தந்துள்ளனர் முன்னோர். இதன் முதல்படி செயலை நேசித்தல்!

    செயல் என்பது அன்பின் வெளிப்பாடு. நீங்கள் செய்யும் செயலை நேசிக்க முடியவில்லை எனில், செயல் புரிவதை நிறுத்தி விட்டு, கோயில் வாசலில் அமர்ந்து நேசிப்புடன் செயல் புரிபவர் எவரோ அவர்களிடம் பிச்சை எடுத்து உண்பதே சிறந்தது என்பது பாரசீகக் கவிஞர் கலீல் ஜீப்ரானின் கூற்று.

    குளிரூட்டப்பட்ட அறையில், காரணமே இல்லாமல் கடுகடுவென இருப்பவர்களும் உண்டு; வியர்த்து வழியும் பேருந்து நடத்துனர் வேலையில் சில்லறைகளுடன் உபரியாக புன்னகையை தருபவர்களும் உண்டு. அதாவது வேலையை நேசிக்கக் கற்பதே முதல் படி!

    நான் இருக்க வேண்டிய இடமே வேறு. என் தலையெழுத்து... இங்கே மாட்டிக்கிட்டேன் என்று சிலர் புலம்புவதைக் கேட்டிருப்பீர்கள். ‘வேலை வாய்ப்பு’ எனும் சொல்லைப் பயன்படுத்துகிறோம்தானே? இந்த வேலை இறைவன் நமக்கு அருளிய வாய்ப்பு என்பதை மறந்துவிடக் கூடாது. மிகுந்த நேசிப்புடன் செயலாற்றுபவர் களின் கையால், ஒரு கோப்பைத் தேநீர் வாங்கி பருகினாலும் அது தேவாமிர்தத்துக்கு இணையானது!

    அடுத்து இரண்டாவது படி! செயலை நேசித்தால் போதுமா? எப்படிச் செயல் படுவது என்பதைக் கற்றறிதலும் அவசியம். இதைப் போய் இவர்கிட்ட நான் கற்றுக் கொள்ள வேணுமா? எனும் எண்ணமே பெரிய தடைக்கல். கற்றுக் கொள்வதற்கு வயது, பின்புலம், அந்தஸ்து என எதுவும் தடை இல்லை. தணியாத ஆர்வமும் தீராத உற்சாகமும் இருந்தாலே போதும்!

    நடுவழியில் பிழைத்து நின்ற காருடன் ஒரு மணி நேரம் போராடியும் உருப்படியாக ஏதும் செய்ய முடியாமல், மெக்கானிக் ஒருவரை அழைத்து வந்தார் அவர். அந்த மெக்கானிக் காரை ஒரு தட்டுத் தட்டியதும் சரியாகிப் போனது வண்டி. “நூறு ரூபா குடுங்க சார்” என்றார் மெக்கனிக். ஒரு தட்டு தட்டினால் நூறு ரூபாயா? இல்லை எங்கே தட்ட வேண் டும் என்று தெரிந்து தட்டியதற்குத்தான் இந்தக் கூலி!

    மூன்றாவது படி; நேசித்து கற்றுக்கொண்ட செயல் திறனை, விடாமுயற்சியுடன் நடைமுறைப்படுத்துவது, ‘தூக்கம் சோர்வு, பயம், கோபம், சோம்பல், நேரம் தாழ்த்தி செயல்படுத்துவது எனும் ஆறு பெருங்குறைகளையும் நலத்தை விரும் புபவன் தவிர்க்க வேண்டும்” என்கிறது மகாபாரதம்.

    நான்காவதுபடி; செயலில் சிந்தனையையும் குவிக்க வேண்டும். சூரியக்கதிர்கள் குவியும் போதுதான் நெருப்புப் பொறி தோன்றுகிறது. ஒரு முகப்பட்ட மனதுடன் செய்யும் செயல்தான் வெற்றியைத் தரும். இன்றைய இளைஞர்கள் சந்திக்கும் மாபெரும் சவால் செயலையும் சிந்தனை யையும் ஒருங்கிணைப்பதுதான்! எத்தனை இடர் வந்திடினும் கவனத்தை செயலில் குவித்தால் வெற்றி நிச்சயம்!

    ஐந்தாம்படி; இறுதியானதும் கூட! செயலின் விளைவை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒரு தோமஸ் அல்வா எடிசனின் உழைப்பால் இன்று உலகமே மின் விளக்குகளால் ஒளிர்கிறது. அதாவது நமது உழைப்பு நாட்டுக்கும் உலகுக்கும் பயன்தரும் வகையில் இருப்பதே சிறப்பு!

    ஒருவன் செய்யும் செயலுக்குப் பரிசு அந்தச் செயல்தான்!

    உலக மக்களின் புகழ்ச்சி, இகழ்ச்சி எதையும் பொருட்படுத்தாமல் கவனம் முழுவதையும் செயலில் தேக்கி வைத்துக் கொள்ளும் பயிற்சி இளைஞர்களுக்கு அவசியம். சாதனையால் உலகமே தன்னைத் திரும்பிப் பார்த்தாலும், அந்த ஆராய்ச்சியாளர் தனது கவனத்தை ஆராய்ச்சியில்தான் வைத்திருப்பார். அவரது செயல்தான் அவருக்கு ஆனந்தத்தைத் தருகிறது. இவருக்கு விருதுகள் எல்லாம் இலவச இணைப்பு.... அவ்ளோதான்!

    கர்மயோகியானவர், இறைவன் மீதான தனது அன்பை வெளிப்படுத்தும் கருவியாகவே தான் ஆற்றும் செயலைப் பயன்படுத்துகிறார். இதனால் மனக் கொதிப்பும் பதற்றமும் இன்றி எப்போதும் உள்ளத்தில் அன்பு ததும்ப தனது வழிபாட்டை நடத்துகிறார்.

    சிலகாலம் முன்பு மருத்துவராக விளங்கிய ராமகிருஷ்ண மடத்தின் சாது ஒருவர், காசியில் ஏழை நோயாளிகளுக்கு சேவையாற்றி வந்தார். ராமகிருஷ்ணருக்கு வழிபாடு நடத்த தயாராகும் வேளையில், அவசர அறுவைச் சிகிச்சைக்காக ஏதேனும் அழைப்பு வந்தால், அறுவைச் சிகிச்சை நடைபெறும் இடத்தையே கோயிலாகவும் செய்யும் சிகிசையையே வழிபாடாகவும் கருதுவாராம்! இறைவன் மீதிருக்கும் அன்பு, சக உயிர்கள் மீதும் பொங்கித் ததும்பிப் பெருகும். எப்பேர்ப்பட்ட உயர்ந்த மனோ பாவம் இது!

    பலாப்பழ பிசின் கையில் ஒட்டிக் கொண்டால், பலாப்பழத்தை சரியாக நறுக்கவோ சுவைக்கவோ முடியாது. அது போல் ‘நான் செய்தேன் எனும் எண்ணத் தில்... செயலில், அதன் விளைவில் பற்றுக் கொண்டால், செயலில் ஆழ்ந்து ஈடுபட முடியாது. சுயவிருப்பு வெறுப்புகளை மூட்டை கட்டிவைத்துவிட்டு பெரியோர் காட்டிய வழியில் செயல்புரிவதே உத்தம மானது!

    கர்ம யோகியானவர், செயல் மலரெடுத்து இறைவனை அர்ச்சிக்கிறார். செயலின் முடிவையும் இறைவனின் திருவடியில் மலர்களாகவே சமர்ப்பித்து விடுகிறார். ‘கடமையைச் செய், பலனை எதிர்பாராதே இதுதான் கீதையின் சாரம் என்று கீதையைப் படிக்காதவர்கள் கூட சொல்லி விடுவர். இந்தப் புத்தகத்தை அச்சடித்து வெளியிட்டவர் கூட, அது இத்தனை பிரதிகள் விற்க வேண்டும் எனும் எதிர் பார்ப்புடன்தானே செய்திருப்பார்? பலனை எதிர்பார்க்காதே எனில் பலன் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்றாகிவிடும்.

    எதிர்பார்த்த பலன், எதிர்பார்த்ததைவிட அதிகம். எதிர்பார்த்ததைவிடக் குறைவு. எதிர்பார்த்ததற்கு நேரெதிர்... இந்த நான்கு விதமான பலன்களில் எது வேண்டுமானாலும் கிடைக்கலாம். இதை, இறைவனின் அருட்பிரசாதமாக ஏற்றுக் கொள்கிறான். கர்மயோகி. பிரசாதத்தின் குறை- நிறைகளை ஆராயாமல் அதனை அப்படியே ஏற்பதே முறை. இது போலவே செயலின் பலன்களையும் ஏற்கச் சொல்கிறது சாஸ்திரம். பிரசாதம் என்ற சொல்லுக்கே உள்ளத்தெளிவு என்று பொருள். கர்ம யோகம் செய்வதால் உள்ளம் தூய்மை பெறுகிறது.

    மனத்துக்கண் மாசிலன் ஆதல்
    அனைத்தறன் ஆகுல நீரபிற


    என்றார் வள்ளுவர்.

    எல்லா அறங்களும் காம யோகத்தில் அடங்கிவிடுகின்றன. கர்ம யோகிக்கு சலி ப்போ, செயலின் விளைவு குறித்த கவலையோ, பயமோ இல்லை. அவர்களது உள்ளத்தில் இன்பமேயன்றி ஒருபோதும் துன்பம் இல்லை.

    0 comments:

    Post a Comment