Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Friday, 5 September 2014

குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத சில!

By: Unknown On: 00:51
  • Share The Gag

  • 1. கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

    2. குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, "உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே' என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும் போது, "அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்' என்று சொல்ல நேரிடலாம்.

    3. தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    4. சிறு குழந்தைகளை மிரட்டும் போது, "கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்' போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.

    5. சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், "அப்பாகிட்டே சொல்லிடாதே' என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே "அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்' என்று மிரட்டும்.

    6. குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. "உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே' போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.

    7. குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. " கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்' என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.

    8. குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.

    9. உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.

    10. படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, "பாசிடிவ் அப்ரோச்' இருக்க வேண்டும். "நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்' என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். "நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்' என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.

    11. குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.

    Thursday, 4 September 2014

    அதிகம் கோபம் கொள்ளும் ஆசிரியரை கையாளுவது?

    By: Unknown On: 08:36
  • Share The Gag
  • அதிகம் கோபம் கொள்ளும் ஆசிரியரை கையாளுவது எப்படி?


    ஒரு மாணவராக உங்களுக்கு அதிகமாக வீட்டுப்பாடம் கொடுக்கும் அனைத்து ஆசிரியர்களுமே கொடுமை படுத்தும் ஆசிரியர்களின் வகையறாக்களின் கீழ் வந்து விடுகின்றனர். ஆனால் அது உண்மை இல்லை. உண்மையிலே கொடுமை படுத்தும் கஷ்டமான வகை ஆசிரியர்களை பற்றி இங்கே பார்க்க போகிறோம். பாடம் கற்பிக்கும் துறையை மிகவும் விரும்பினாலும் கூட சில ஆசிரியர்களால் மாணவர்களை பொறுமையாக கையாள தெரியாது. அவர்களே சகித்து கொள்ள முடியாத ஆசிரியர்கள் பட்டியலில் அடங்குவார்கள்.


    அப்படிப்பட்டவர்கள் மாணவர்களுடன் தெளிவான மனநிலையில் நடந்து கொள்ள மாட்டார்கள். நீங்கள் டீனேஜ் பருவத்தில் உள்ளவர்கள் என்பதால் உண்மையான சூழ்நிலையை உணர்ந்து கொள்ள ஒரு முறைக்கு இரண்டு முறை உங்கள் எண்ணங்களை அலசுங்கள். சில நேரம் ஏதாவது ஒரு காரணத்திற்காக உங்களுக்கு ஒரு ஆசிரியரை பிடிக்காமல் போகலாம். ஆனால் அவைகளையெல்லாம் ஓரமாக வைத்து விட்டு ஒரு ஆசிரியர் உண்மையிலேயே கஷ்டப்படுத்துவரா என்பதை நிலைமையை வைத்து புரிந்துக் கொள்ளுங்கள்.


    உங்கள் வகுப்பில் இருக்கும் மற்ற மாணவர்களை கேட்டால், சில ஆசிரியரால் தங்கள் பள்ளி வாழ்க்கையையே திகிலாக உள்ளது என்று கூறுவார்கள். ஒரு மாணவராக அவ்வகை ஆசிரியர்களை சமாளிக்க உங்களுக்கு கஷ்டமாக இருக்கும். கஷ்டமான ஆசிரியர்களை டீனேஜ் மாணவரான நீங்கள் கையாள சில டிப்ஸ் உள்ளது. உங்கள் குறைகளை எல்லாம் உன்னிப்பாக கவனியுங்கள். பின் இவ்வகை கஷ்டமான ஆசிரியர்களை கையாளுவது மிகவும் கஷ்டம் என்று நீங்கள் உணர்ந்தால் கீழ் கூறிய எளிய, ஆனால் சிறந்த டிப்ஸ்களை பின்பற்றுங்கள்.


    எரிச்சல் ஊட்டாதீர்கள்


    எரிச்சலை உண்டாக்கினால் உங்கள் ஆசிரியர் கோபத்தின் உச்சிக்கே போய் விடுவார் என்று தெரிந்தால் நீங்கள் அமைதியாகவும் பொறுமையாகவும் இருப்பது நல்லது. பொறுமையாக இருப்பது என்பது ஒவ்வொரு டீனேஜ் மாணவர்களும் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான டிப்ஸாகும். உங்கள் ஆசிரியர் நிலைமையை மோசமாக மாற்றும் அளவிற்கு ஒரு சூழ்நிலையை நீங்களாகவே உருவாக்கி விடாதீர்கள்.


    குறைபாடற்ற மாணவராக நடந்து கொள்ளுங்கள்:


    குறை கூறிக் கொண்டிருக்கும் ஆசிரியரை கையாள வேண்டுமானால், அந்த ஆசிரியர் சம்பந்தப்பட்ட அனைத்திலேயும் நீங்கள் ஒரு குறைபாடற்ற மாணவராக மாறி விடுங்கள். வீட்டுப்பாடங்களை தினமும் செய்து, ஒழுக்கமாகவும் பணிவாகவும் நடந்து கொள்ளுங்கள். பல ஆசிரியர்களுக்கு குறைபாடற்ற ஒழுக்கமான மாணவர்களையே பிடிக்கும். அதனால் இந்த டிப்ஸை பின்பற்றி கஷ்டமான ஆசிரியர்களை சுலபமாக கையாளலாம்.

    Tuesday, 2 September 2014

    நாஸ்ட்ரடாமஸ் - இந்தியா மட்டும்தான் வல்லரசு நாடாகத் திகழும்!

    By: Unknown On: 22:49
  • Share The Gag

  • 21 ஆம் நூற்றாண்டில் உலகில் இந்தியா மட்டும்தான் வல்லரசு நாடாகத் திகழும்! அதிலும் தென்னாட்டிலிருந்தே மிகச்சக்தி வாய்ந்த ஆட்சி அமையும்!

    - நாஸ்ட்ரடாமஸ்(Nostradamus)

    இவருடைய 500 ஆண்டுகளுக்கு முன் எழுதி வைக்கப்பட்ட உலகப்புகழ் பெற்ற தீர்க்க தரிசனம் நிறைவேறுமா?!

    இவரைப் பற்றிச் சில தகவல்கள்.

    நாஸ்ட்ரடாமஸ் ஒரு புரியாத புதிர் ( Nostradamus )..!


    இந்தியர்களில் சித்தர்களும், ஞானிகளும், ரிஷிகளும், சோதிட நிபுணர்களும் வருங்காலத்தைக் கணித்து வைத்ததைப் போலவே மேல்நாட்டினரும் கணித்திருந்தனர்.

    அவர்களில் மிகவும் புராதனமானவர் இம்ஹோட்டெப் (Imhotep). இவர் நாலாயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தில் தோன்றியவர். எகிப்தியப் பேரரசன் ஜோஸரின் மதிமந்திரி; பொறியியல் வல்லுனர்; மருத்துவ நிபுணர்; சோதிட ஞானி. இப்படிப்பட்ட பேரறிஞர்தான் அவர். பெரும்பெரும் கற்களைக் கொண்டு பிரம்மாண்டமான பிரமிடுகளைக் கட்டும் முறையைக் கண்டுபிடித்தவர். தம்முடைய மருத்துவ ஆற்றலால் பெரும் வியாதிகளை நீக்கியவர். இறப்புக்குப் பின் மீண்டும் உயிர் பெறக்கூடிய ரகசியத்தை அறிந்தவர். இறந்தபின் உடலை பதனப்படுத்திப் பாதுக்காத்துவைக்கும் விதத்தைக் கண்டுபிடித்தவர். பிரமிடுகளும் அவற்றுள் வைக்கப்பட்ட மம்மி(Mummy) எனப்படும் சடலங்களும் இவருடைய ஆற்றலின் விளைவுகளே.

    மேலைநாட்டு தீர்க்கதரிசிகளில் மிகவும் பிரபலமானவர் 'மிஷெல் தெநாத்ருதாம்'(Michel de Notredame). ஆங்கிலத்தில் நாஸ்ட்ரடாமஸ் (Nostradamus) என்று கூறுவார்கள். வருங்காலத்தைப் பற்றி அவர் எழுதிவைத்தவற்றில் பல நிகழ்ச்சிகள் நடந்து விட்டிருக்கின்றன. சில நிகழ்ச்சிகளின் துவக்கம் ஏற்பட்டிருக்கிறது. சில நிகழ்ச்சிகள், சில வாரங்களிலோ சில மாதங்களிலோ உருவாகக்கூடும். தீராத நோய்களைத் தீர்த்தவர்.

    யார் இந்த நாஸ்ட்ரடாமஸ்?

    நாஸ்ட்ரடாமஸ் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். இவர்களது குடும்பம் வருங்காலம் உரைத்தலில் திறமை பெற்றிருந்தது. அதன் வழி இவருக்கும் அந்த ஆற்றல் வந்தது. பாரம்பரிய ஜோதிட முறையை தனது முன்னோர்களிடம் பயின்ற இவர், “கப்பாலா” முறை எனப்படும் ரகசிய ஆருட முறையையும் பயின்றார். ஆனாலும் அவற்றை எல்லாம் விடுத்து மருத்துவத்தை முறையாகப் பயின்று டாக்டர் ஆனார். தம்மை பிரச்சனை என்று நாடி வந்தவர்களது பிரச்சனைகளைப் போக்கினார். அவர்களது நோய்களைக் குணப்படுத்தினார். மனத் தெளிவை ஏற்படுத்தினார். வருங்காலத்தில் நிகழ இருக்கும் செயல்களை முன்னரே கூறி அவர்களை எச்சரிக்கை செய்தார். அதனால் மக்களுக்கு அவர் மீது பெரிய மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது

     நாஸ்ட்ரடமஸ்நாளடைவில் ரசவாதம், மாந்த்ரீகம், இறந்தவர்களுடன் பேசுதல், உடலை விடுத்து வெளியே சென்று வருதல் போன்ற பல ஆற்றல்கள் கை வரப் பெற்றார். ஆனால் மதவாதிகள் எதிர்த்ததால் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். பின் பிரான்ஸின் தெற்குப் பகுதிக்குக் குடியேறினார். ஒரு பெண்ணை மணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்த ஆரம்பித்தார். நாளடைவில் தனது ஆரூடங்களினால் அவருக்கு புகழும் ஆதரவும் பெருகியது. மக்களிடையே செல்வாக்கு வளர்ந்தது.

    சைத்தானின் சீடரா?

    அதன்பின்னர் நாஸ்ட்ரடாமஸ் ஐரோப்பா முழுவதும் புகழ் பெற்றார். ஆனாலும்கூட அவரை சைத்தனின் சீடர் என்று கருதியவர்களும் பலர் இருந்தனர். மருத்துவர் என்ற ஹோதாவைவிட சோதிடர் என்ற முறையிலேயே பொன்னும் பொருளும் புகழும் பெற்றார்.

    இன்னும் இவருடைய புத்தகத்தை படித்தால் நிறைய புரியாத புதிர்கள் நிறைய இருக்கும்

     கறுப்பா, வெள்ளையா?

    ஒருமுறை ஒரு பெரிய பிரபுவின் வீட்ட்க்கு விருந்துக்குச் சென்றார். அவருடைய அரண்மனையின் பின்புறம் ஓரிடத்தில் இரண்டு பன்றிகள் இருந்தன. ஒன்று கறுப்பு; இன்னொன்று வெள்ளை. அவற்றைக் காட்டி, "இந்த இரண்டு பன்றிகளில் எதை நாம் இன்றிரவு விருந்தில் சாப்பிடப்போகிறோம்?", என்று அந்தப் பிரபு நாஸ்ட்ரடாமஸை வினவினார்.

     "கறுப்புப் பன்றியை நாம் சாப்பிடுவோம். வெள்ளைப் பன்றியை ஓநாய் சாப்பிட்டுவிடும்," என்றார் நாஸ்ட்ரடாமஸ்.

     "என்னுடைய அரண்மனை எல்லைக்குள் எங்கிருந்து ஐயா, ஓநாய் வரும்?" என்று எள்ளி நகையாடினார், பிரபு.

    அதன் பிறகு நாஸ்ட்ரடாமஸுக்கே தெரியாமல் சமையற்காரரை அழைத்து அந்த வெள்ளைப் பன்றியைக் கொன்று சமைக்கச் சொல்லிவிட்டுப் போனார் அந்தப பிரபு.

    அன்றிரவு விருந்தில் பன்றிக்கறி பரிமாறப்பட்டு உண்டுமுடிந்தபின், பிரபு மீண்டும் நாஸ்ட்ரடாமஸை வினவினார்.

     "நாம் சற்றுமுன்பு எந்தப் பன்றியைச் சாப்பிட்டோம்?"

     "கறுப்பு" என்று சற்றும் சளைக்காமல் கூறினார் நாஸ்ட்ரடாமஸ்.

    உடனே அப்பிரபு, சமையற்காரரை அழைத்து, விருந்தினர் முன்னிலையில் விசாரித்தார்.

     "எந்தப் பன்றியைப் பரிமாறியிருக்கிறாய், என்று இவர்கள் எல்லாரிடமும் சொல்"

     "கறுப்புப்பன்றி"

    பிரபு அதிர்ந்து போனார்.

     "வெள்ளைப் பன்றியை அல்லவா சமைக்கச் சொன்னேன்? என் கண் முன்னால்தானே அதைக் கொன்றாய்?"

     "ஆம்! பிரபோ. ஆனால் அடுப்பில் வைத்திருந்த பன்றியை உங்கள் வேட்டை நாய் கெளவி இழுத்துச்சென்று விட்டது. ஆகையால் வேறு வழியின்றி கறுப்புப் பன்றியைக் கொன்று சமைத்துப் பரிமாறினேன்", என்று கூறினார் சமையற்காரர்.

    அந்தப் பிரபுவின் வேட்டைநாய் உண்மையிலேயே ஒரு வளர்ப்பு ஓநாய்க்குப் பிறந்தது.

    நல்ல புகழின் உச்சியில் இருந்த நாஸ்ட்ரடாமஸ் கி.பி.1566-ஆம் ஆண்டு இறந்தார். அவரைப் புதைத்துவிட்டார்கள்.

    மண்டை ஓட்டில் மது ஊற்றினான்!

    நாஸ்ட்ரடாமஸான் இறப்புக்குப் பின்னர் அவருடைய மண்டையோட்டில் மதுவை ஊற்றி யார் அருந்துகிறார்களோ அவர்களுக்கு நாஸ்ட்ரடாமஸின் சக்திகள் அனைத்தும் வந்துவிடும் என்றும், ஆனால் அவ்வாறு செய்பவர்கள் உடனேயே இறந்துவிடுவார்கள் என்றும் நம்பப்பட்டது. நாஸ்ட்ரடாமஸ் இறந்து இருநூற்று இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் கி.பி. 1791-ஆம் ஆண்டு மே மாதத்தில் ஒருநாள் நள்ளிரவில் நாஸ்ட்ரடாமஸான் புதைகுழியைத் தோண்டி அவருடைய சவப்பெட்டியை மூன்றுபேர் திறந்தார்கள். அவர்கள் பிரெஞ்சுப் போர்வீரர்கள். அன்று அவர்கள் மிதமிஞ்சி குடிதிருந்தார்கள். போதை ஏறியநிலையில் அவர்கள் நாஸ்ட்ரடாமஸின் கல்லறையைத் தேடிச்சென்று திறந்தார்கள்.

    அந்த சமயத்தில் பிரெஞ்சுப்புரட்சியின் தொடர்பாகக் கலவரம் நடந்து கொண்டிருந்தது.

    சவப்பெட்டிக்குள் நாஸ்ட்ரடாமஸின் எலும்புக்கூடு இருந்தது. அதன் கழுத்தில் 'மே, 1791' என்று பொறிக்கப்பட்டிருந்த பித்தளைப்பட்டயம் ஒன்று விளங்கியது. நாஸ்ட்ரடாமஸை 225 ஆண்டுகளுக்கு முன்னர் அடக்கம் செய்யும்போது அந்தப் பட்டயம் அவருடைய கழுத்தில் மாட்டப்பட்டிருக்கவேண்டும்.

    அம்மூவரில் ஒருவன் நாஸ்ட்ரடாமஸான் மண்டையோட்டை எடுத்து அதில் மதுவை ஊற்றிக் குடித்தான். அப்போது எங்கிருந்தோ வந்த துப்பாக்கிக் குண்டு ஒன்று அவனுடைய கழுத்தில் பாய்ந்தது. உடனே நாஸ்ட்ரடாமஸான் புதைகுழிக்குள்ளேயே அவன் விழுந்து மாண்டுபோனான்.

    சுற்றி நிகழ்ந்துகொண்டிருந்த கலவரத்தில் யாரோ யாரையோ நோக்கிச் சுட்ட குண்டு அவனுடைய கழுத்தில் பாய்ந்துவிட்டது!

    மற்ற இருவருக்கும் 'மே 1791' என்று பட்டயத்தில் எழுதியிருந்த காரணமும் அப்போதுதான் புலப்பட்டது. இன்ன ஆண்டு இன்ன மாதத்தில் தன்னுடைய புதைகுழியை யாராவது திறப்பார்கள் என்று நாஸ்ட்ரடாமஸுக்கு 225 ஆண்டுகளுக்கு முன்னமேயே தெரிந்திருந்திருக்கிறது. ஆகவேதான் தன்னுடைய கழுத்தில் அந்தப் பட்டயத்தைக் கட்டிக்கொண்டு இறந்திருக்கிறார்.

     "புதைகுழியை யார் திறக்கிறார்களோ, அவர்கள் உடனடியாக அதை மூடவில்லையென்றால் பெருங்கெடுதல் நேரிடும்" என்று அவருடைய தீர்க்கதரிசனங்களின் 907-ஆவது பாடலில் கூறியிருந்தார்.

    அவருடைய புதைகுழியைத் திறந்தவர்களில் மற்றவர்களும் திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது எதிரிகளால் சுடப்பட்டு இறந்தார்கள்.

    Wednesday, 27 August 2014

    வாழ்க்கையின் பய‌னுள்ள குறிப்புகள்!

    By: Unknown On: 22:06
  • Share The Gag

  • 1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்


    2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.


    3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.


    4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!


    5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!


    6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.


    7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!


    8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.


    9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.


    10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.


    11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்


    12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்


    13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்


    14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை


    15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்


    16. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்


    17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்



    18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்



    19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்


    20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்


    21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்


    22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.


    23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்


    24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்


    25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்


    26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்


    27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்


    28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.


    29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.


    30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்


    31. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

    மூடநம்பிக்கைகள் - ஒரு உலகளாவிய பார்வை; Superstition of the World

    By: Unknown On: 22:06
  • Share The Gag
  • மூடநம்பிக்கைகள் - ஒரு உலகளாவிய பார்வை....


     எல்லோருக்கும் வணக்கம், நாளுக்கு நாள் விஞ்ஞானம் அசுர வேகத்தில் ஒரு புறம் வளர்ச்சியடைந்து கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் மூட நம்பிக்கைகளும் மூடப்பழக்கங்களும் விஞ்ஞானத்துடன் போட்டி போட்டுக் கொண்டு வளர்ச்சியடைந்து கொண்டுதான் இருக்கிறது.


    மூட நம்பிக்கைகளுக்கு உதாரணம் சொல்வதென்றால், இன்னார் முகத்தில் ராசி என்று நினைத்துக்கொண்டிருப்பது, காரை முதலில் இயக்கும் போது கார் டயருக்கு அடியில் எலுமிச்சம் பலத்தை வைத்து நசுக்குவது, புதிய வீட்டுக்கு வாஸ்து செய்யும் நாளன்று கோழி அல்லது ஆடுகளை பலிகொடுப்பது, இப்படி வரிசையாக மூட நம்பிக்கைகளுக்கு இன்று முழுவதும் உதாரணம் சொல்லிக் கொண்டே போகலாம்.


    சரி., இந்த மாதிரியான மூட இந்தியாவில் மட்டும்தான் இருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும். ஆம் இந்த மாதிரியான மூட நம்பிக்கைகள் உலகம் முழுவதிலும் உள்ள எல்லா நாடுகளிலும், எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. அட அவ்வளவு ஏன் உழைப்புக்கு பெயர் போன ஜப்பான் நாட்டு மக்களிடையேயும் கூட சில மூட நம்பிக்கைகள் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.


    ஜப்பான் நாட்டு மக்களிடையே ஒரு வினோதமான பழக்கம் வழக்கத்தில் உண்டு. பாம்புக்கறியை கன்னாபின்னாவென்று வெட்டும் ஜப்பானியர்களுக்கு பாம்பு தோல் என்பது மிகவும் புனிதமான பொருள் ஆகும். பாம்புத் தோலை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மணி பர்ஸிலும், வீட்டில் பணம் வைக்கும் பீரோக்களிலும் வைத்துக்கொள்கிறார்கள். அப்படி வைத்துக்கொண்டால் பணம் பெருகி பலமடங்கு ஆகிக்கொண்டே இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. அதுவும் வெள்ளை பாம்பின் தோல் என்றால் இன்னுமும் ஸ்பெஷல். எவ்வளவு விலை கொடுத்தும் வாங்க ஜப்பானியர்கள் தயாராக இருப்பார்கள். உழைப்புக்கு பெயர்போன ஜப்பானிய மக்களிடையே இப்படி ஒரு மூடநம்பிக்கை இருப்பது விந்தையிலும் விந்தை.


    நம்மவர்கள் முக்கியமான வேலைக்காக வீட்டை விட்டு வெளியே கிளம்பும் போது பூனை குறுக்கே வந்துவிட்டால் அவ்வளவுதான். மீண்டும் வீட்டுக்குள் வந்து தண்ணீர் அருந்தாமல் மீண்டும் வெளியே செல்ல மாட்டார்கள். இதைப்போல கொரிய நாட்டு மக்களிடம் ஒரு வித்தியாசமான பழக்கம் உண்டு. என்னவென்றால் முக்கியமான வேலை நிமித்தமாக வெளியே செல்லும் போது காகத்தை பார்த்து விட்டார்கள் என்றால் அவ்வளவுதான் அப்செட் ஆகிவிடுவார்கள். மீண்டும் வீட்டுக்குள் வந்து அமர்ந்துவிட்டு சிறிது நேரம் கழித்து தான் செல்வார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.


    பிரேசில் நாட்டை எடுத்துக்கொண்டால் அங்கு ஒரு வித்தியாசமான பழக்கம் வழக்கத்தில் உண்டு. அங்கே எந்த ஹோட்டலுக்கு சென்று காப்பி அல்லது டீ கேட்டீர்கள் என்றால் கப்பை எடுத்துக்கொண்டு முதலில் அதில் சர்க்கரையைத்தான் போடுவார்கள் பிறகுதான் தேயிலை தூள், டிகாஷன் மற்றும் பால் சேர்ப்பார்கள். மறந்தும் கூட கப்பில் முதலில் பாலையோ அல்லது டிகாஷனையோ ஊற்ற மாட்டார்கள்.


    காபியோ அல்லது டீயோ தாயாரிக்கும் போது முதலில் சர்க்கரையை போட்டால் பணம் நம்மிடம் வந்து குவியும் என்றும் அவ்வாறில்லாமல் இறுதியில் சர்க்கரையை போட்டால் நம்மிடம் இருக்கும் எல்லா பணமும் நம்மை விட்டு போய் நாம் ஏழைகள் ஆகிவிடுவோம் என்பதும்  அங்கே காலம் காலமாக வழக்கத்தில் இருந்துவரும் ஒரு நம்பிக்கை ஆகும். தெரியாத்தனமாக அங்கே டீ அல்லது காப்பி தயார் செய்கையில் முதலில் சர்க்கரை அல்லாமல் வேறு எதையும் போட்டோமானால் அவ்வளவுதான் நம்மை அடிதுவைத் தெடுத்துவிடுவார்கள்.


    நம்ம ஊரில் நரிகொம்பு விற்கும் நரிக்குறவர்களை போல மெக்ஸிகோ நாட்டில் மிகவும் பிரபலமானவர்கள் முயலின் வால் மற்றும் தோல் விற்பவர்கள் ஆவர். காரணம், வீட்டில் முயல் தோலோ அல்லது வாலோ இருந்தால் அவ்வீட்டில் வசிப்பவர்கள் எல்லாருடைய முயற்சிகளும் எந்த தடையும் இல்லாமல் வெற்றியடைந்து சிறப்பாக வாழ்வார்கள் என்பது மெச்சிக்கோ நாட்டு மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்.


    எந்த பாத்திரமாக இருந்தாலும் சரி, ஒரு வேலை அது புதிய பாத்திரங்களாகவே இருந்தாலும் சரி, அந்த பாத்திரத்தின் ஏதாவது ஒரு இடத்தில் சிறிய நசுங்கள்கள் இருந்தாலும் அந்த பாத்திரங்களை ரஷ்ய மக்கள் பயன்படுத்த மாட்டார்கள், அதே போல் உடைந்த கண்ணாடியிலும் ரஷ்ய நாட்டு மக்கள் முகம் பார்க்க மாட்டார்கள்.


    இதைப்போல எண்ணற்ற மூடநம்பிக்கைகளும் மூட பழக்கங்களும் உலகெங்கும் எல்லா நாடுகளிலும் எல்ல இடங்களிலும் உண்டு, ஆகையால் மூடநம்பிக்கைகளும் மூடப்பழக்கங்களும் இந்தியாவில் மட்டும் தான் காணப்படுகிறது என்று எண்ணி நம் மக்களை வசை பாடிக்கொண்டிருக்க வேண்டாம். அது எல்லா நாடுகளிலும் உள்ள எல்லா இடங்களிலும் புரையோடிக்கிடக்கும் ஒரு பழக்கம் தான்.

    படித்ததில் பிடித்தது!

    By: Unknown On: 22:06
  • Share The Gag

  • பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும்.


    துன்பம் துன்பம் என்று சலித்துக் கொண்டு என்ன பயன்? உடம்பிலிருக்கும் ஒன்பது ஓட்டைகளோடு அதுவும் பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு : வாழ்வுக்கு நியாமும் நெஞ்சிற்கு நிம்மதியும் கிடைக்கும்.


    உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை. தீமையையும் விரட்டுகிறது.


    அழகான பெண் கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம். இரண்டாமவள் ஒரு புதையல்.


    ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கி விடுகிறாள்.


    பெண் இல்லாத வீடும், வீடு இல்லாத பெண்ணும், மதிப்பு இல்லாதவை!


    பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.


    மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது.


    நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே.


    செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை.


    பறக்க விரும்புபவனால் படர முடியாது.


    ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால் நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.

    பிரசண்டேஷன் தேவையா?

    By: Unknown On: 16:54
  • Share The Gag

  • Stress எனப்படுவது என்ன நாம் யோசிக்கும் முன், ஸ்ட்ரஸ் பற்றி ஒரு நாளில் எத்தனை முறை கதைக்கிறோம் என்று யோசித்துப் பார்க்கலாம். ஆபீஸின் வாட்டர் கூலர் பேச்சுகளில், காபி குடித்துக் கொண்டே, லிப்டில் பயணிக்கும் போது, இஸ்திரி போடுகையில், மனைவியிடம், மானேஜரிடம், பங்குச் சந்தையில், பட்ஜெட் வேடிக்கையில் எனப் பலப்பல முறை ஸ்ட்ரஸ் ஆகிறோம் மற்றும் அதைப் பற்றி பேசுகிறோம். மனச் சோர்வு என்பது Stressன் சுமாரான தமிழாக்கம் மட்டுமே. மனத்தை தாண்டி பாதிக்கப்படுவதை விவரிக்காமல் விட்டுவிட்டது தான் மிகப்பெரிய தப்பு எனத் தோன்றுகிறது.


    ஒரு மானோ வரிக்குதிரையோ மேய்ந்து கொண்டிருக்கிறது அல்லது வழக்கம்போல வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அவைகள் ஒரு நாளில் மூன்று மணிநேரம் மட்டுமே தனக்கு தேவையான உணவு காலரிகளை தேடி அலைகிறது. மற்ற நேரம் வானத்தைப் பார்த்தபடியோ தன் மற்ற உறவினர்களை கொஞ்சியபடியோ செலவழிக்கிறது.  இந்த மானை இரை தேடி வரும் ஒரு சிறுத்தை துரத்தும் போது, விட்டதை போட்டு விட்டு உயிருக்கு ஓடும் அந்த ஓட்டம் தான் ஸ்ட்ரஸ். அது தான் அந்த மானுக்கு ஏற்படும் மிகப்பெரிய stressful situation.


    அந்த நொடியில் அம்மானின் ஏற்படும் உடல் இயக்கத்தை சற்றே வேகம் குறைத்துப் பார்க்கலாம். சிறுத்தையை ஓரக்கண்ணில் பார்க்கும் வினாடியில் மானின் மூளை ஓடு எனக் கட்டளையிட, மற்ற அத்தனை உடல் இயக்கங்களும் சட்டென நின்று விடுகின்றன.  பசியோ உறக்கமோ மற்ற உடல் இச்சைகளோ தடைப்பட்டு அத்தனை ரசாயனங்களும் ஒன்று சேர்ந்து வேலை செய்வது நுரையீரலுக்கு ஆக்ஸிஜனை அனுப்புவதற்க்காகத்தான்.


      அதன் மூலம் உடலெங்கும் ரத்தம் அனுப்பப்பட்டு தசை நார்கள் வேகமாக நகர மான் ஓட்டமாய் ஓடுகிறது. ஆக இந்த மிகக் கடினமான ஓட்டத்திற்காக மற்ற இயக்கங்கள் வழிவிடுகின்றன. ஓட்டத்திற்கு பிறகு…பிறகு என்பது அந்த மானுக்கு இருந்தால் சிறுத்தையிடம் இருந்து தப்பித்த இரண்டு அல்லது மூன்றாம் நிமிடத்தில் உடல் இயக்கங்கள் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடுகிறது. ஸ்ட்ரஸ் போய் விடுகிறது.


    நம்போல் எப்போதும் ஸ்ட்ரஸில் இருக்கும் ஒரு மனிதனின் உடல் எந்த மாதிரி கடும் உழைப்பிற்கு உள்ளாகும் என யூகித்தால் கூட ஸ்ட்ரஸ் வந்து விடும்.  மானின் அந்த பத்து நிமிட ஸ்ட்ரஸ் மனிதனுக்கு ஆறு மாதம் இருந்தால் கூட அவன் உடம்பிற்கு மேலும் இரண்டு வருடங்கள் வயதாகிவிடுவதாக சொல்லுகிறார்கள்.


    அமெரிக்காவில் ஸ்ட்ரஸ் என்பதால் அல்சர் வருவாதாய்த் தான் அறுபதுகளில் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.  இருபது வருடங்கள் கழித்து தான் அதன் காரணம் புரிந்தது.  ஸ்ட்ரஸ் இருக்கும் போது மேலே சொன்ன உடல் இயக்கங்கள் தடைபடும் போது உடல் தடுப்பாற்றல் இழந்து எல்லாவிதமான பாக்டீரியாக்களும் வைரஸ்களும் உள்ளே நுழைய அல்சர் உட்பட எல்லா நோய்களும் வந்து விடுகின்றன.


    கம்ப்யூட்டரும் கையுமாய் எதற்காகவோ எப்போதும் வேகமாய் நகர்ந்து கொண்டே பதட்டமாய் நடமாடுகிற இக்காலத்தில் ஸ்ட்ரஸ் என்பது இல்லையென்றால் ஒரு மாதிரி பார்க்கிறார்கள். எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக் கொண்டு, நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்து கொண்டே, சதா இரண்டு கைகளால் சாப்பிடுபவனை நாமோ,” எப்படி சார் உங்களுக்கு இவ்ளோ டைம் இருக்கு” எனக் கேட்டு அவனை பெருமைப்படுத்தி சீக்கிரமே மேலே அனுப்ப தயாராக்குகிறோம்.


    இதைத் தான் மனச்சோர்வு என்று சொல்வதை விடுத்து மகா-சோர்வு என உண்மை உரைக்கச் சொல்லாம். மகாசோர்வை ஒழித்துக் கட்ட முதல் கட்டம் அதைப்பற்றி அறிந்து கொள்ளுதல் தான். தனக்கு மகாசோர்வு ஏற்படும் தருணங்களை புரிந்து கொள்ளுதலும் அதை கழட்டி விடுவது எப்படி என முடிவெடுப்பதற்கு முக்கியம்.

    Tuesday, 26 August 2014

    நட்பின் சிறப்பு என்பது யாதெனில்....

    By: Unknown On: 17:03
  • Share The Gag

  • உயிர் காப்பான் தோழன்..என்பர்.

    அது எவ்வளவு தூரம் உண்மை என நான் அறியேன்..ஏனெனில் நான் யார் உயிரையும் காப்பாற்றியதில்லை..என்னையும் யாரும் காப்பாற்றியதில்லை.

    ஆனால்..நமக்கு வாழ்வில்..ஏற்படும் நண்பர்கள்தான் எவ்வளவு?

    பள்ளி பருவத்தில்...உண்டாகும் இளம் நண்பர்கள்..மன விகாரம் இல்லா வயது.கிடைத்த அனைத்தையும் பகிர்ந்துக் கொள்ளும் வயது.ஒன்றாக சேர்ந்து விளையாடிய வயது.மாமரத்தில் இருந்து விழும் அல்லது திருடும் மாங்காயை..உப்பு ,காரம் தோய்த்து சாப்பிட்ட நட்பு,கமர்கட்டை காக்காய் கடி கடித்து பகிர்ந்துக் கொண்ட வயது.போட்டி படிப்பில் மட்டுமே.இப்படி அந்த கால நட்பு..மனதில் பசுமரத்தாணி போல பதிந்து இன்றும் நினைவில் அவர்கள் பெயர் தங்கியிருக்கும் நட்பு.

    அடுத்து..கல்லூரி கால நட்பு.பெற்றோர் கஷ்டப்பட்டு செலவு செய்து படிக்க வைப்பது தெரிந்தும்..பணத்தைப்பற்றி கவலைப்படாமல் இருக்கும் வயது.இக்காலத்தில் ஏற்படும் நட்பு சிலருக்கு வாழ்வில்..சிகரெட்,மது,மாது..போன்ற பழக்கங்களை ஏற்படுத்தி வைக்கிறது..அப்படிப்பட்டவர் நட்பு இவ்வயதில் அதிகம் கிடைக்கிறது.இப்படிப்பட்ட நட்பு..ஆசைக்காக..சில எதிர்ப்பார்ப்புகளோடு அமைந்து விடுகிறது.இப்பருவ நட்பு கம்பி மேல் நடப்பது போல.

    அதைத் தாண்டி வந்தால்..அலுவலகத்தில், உடன் வேலை செய்வார் நட்பு.இந்த சமயம்...நிறைய சம்பாதிக்க வேண்டும்,சமுதாயத்தில் ஒரு பெரிய மனிதனாக வரவேண்டும்..அவனைவிட நான் பெரிய ஆளாக வர வேண்டும் என்றெல்லாம் எண்ணக்கூடிய சுயநலம் நிறைந்த நட்பு..

    பின் ஓய்வு பெற்றதும்..கிடைக்கும் நட்பு...பழைய வாழ்வை அசை போடும் நண்பர்களுடன்.

    இப்படி ஒவ்வொரு பருவத்திலும்..பல வேறுபட்ட நண்பர்கள்..பள்ளி பருவம் முதல்..கடைசி வரை தொடரும் நட்பு..ஒரு சிலருக்கே கிட்டும்.அப்படிப்ப நட்பு அமைந்தால் அதுதான் சிறந்த நட்பு..அப்படிப்பட்டவன் தான் சிறந்த நண்பன்.

    ஆனால் எப்பருவத்தில்..எவ்வளவு நாட்கள் தொடரும் நட்பாய் இருந்தாலும்..வீட்டில்..பெற்றோரோ,மனைவியோ கோபப்பட்டால், அதைத் தாங்கும் மனம்..நண்பன் ஒருவன் நம்மை தவறாக புரிந்துக் கொண்டால்..கடுமையாக ஏசி விட்டால்/பேசிவிட்டால் தாங்க மாட்டேன் என்கிறது.

    இது தான் நட்பின் சிறப்பு.

    ஆண்-பெண் நட்பு...?

    By: Unknown On: 16:59
  • Share The Gag

  • இன்று ஐரோப்பியாவில் இது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான ஒரு போராட்டம் என்று கூடச் சொல்லலாம்.

    முக்கியமாகப் பெண் பிள்ளைகள். இவர்கள் கலாச்சாரம், பண்பாடு என்ற இருவிடயங்களால் பெற்றோருடனும் ஒட்ட முடியாமல், ஐரோப்பிய வாழ்க்கையுடனும் ஒட்ட முடியாமல் ஒரு வித மன உளைச்சலுடன் வாழ்கிறார்கள்.

    இதே நேரம், பிள்ளைகள் பால் வேற்றுமையின்றி நட்புடன் பழகுவதை, நட்பு என்ற கண் கொண்டு பார்க்காமல் `எங்கே பிள்ளைகள் தவறி விடுவார்களோ..! ` என்று அச்சப் பட்டு அச்சப்பட்டே பெற்றோர்களும் தமக்குத்தாமே மன உளைச்சலை ஏற்படுத்திக்கொண்டு வாழ்கிறார்கள்.

    இது தப்பு

    நான்கு சுவர்களுக்குள் வளர்க்கப்படும் பிள்ளைகள் காதல் வலையில் விழவில்லையா? தவறுகள் அங்கு நடக்கவில்லையா? என்பதைப் பெற்றோர் நன்றாகச் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

    வீட்டுக்குள் வளர்க்கப்படும் பெண் பிள்ளைகள், வெளி உலகத்தை நன்கு தெரியாமல் வளர்கின்ற போதுதான் தவறுகள் கூடுதலாக அரங்கேறுகின்றன என்பதை, ஏனோ பெற்றோர்கள் சிந்திக்க மறந்து விடுகிறார்கள்.

    உதாரணமாக , வீடு மட்டுமே உலகமாக்கப்பட்டு வளரும் பெண் பிள்ளைகள் வீட்டுக்கு வந்து போகும் அண்ணனின் நண்பனையோ அல்லது பக்கத்து வீட்டு யன்னலில் தெரியும் வாலிபனையோ காதலிக்கத் தொடங்கி விடுகிறார்கள்.

    இதிலிருந்தாவது பெற்றோர்கள், பிள்ளைகளைக் கட்டி வைப்பதால், அவர்கள் மனதையோ உணர்வுகளையோ கட்டிவைக்க முடியாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அத்தோடு இப்படி வளர்க்கப்படும் பெண்பிள்ளைகள் உலகத்தைக் காணத் தவறிவிடுகிறார்கள். மனிதர்களின் நியமான குணங்களைப் புரிந்து கொள்ள முடியாமற் போய் விடுகிறார்கள். தமது வட்டத்துக்குள் தாம் சந்திக்கும் யாராவது ஒரு ஆண்மகனை (அவன் அண்ணனின் நண்பனோ, அல்லது பக்கத்து வீட்டு யன்னலில் தெரிபவனாகவோ இருக்கலாம்) அவன் நல்லவனா, கெட்டவனா, தனக்குப் பொருத்தமானவனா என்று தெரியாமலே கண் மூடித்தனமாய் காதலிக்கத் தொடங்கி விடுகிறார்கள். எந்த வித முன் யோசனையுமின்றி கல்யாணத்துக்குத் தயாராகியும் விடுகிறார்கள். ஆனால் வெளியில் போய் ஆண், பெண் என்ற பேதமின்றி எல்வோருடனும் நட்புடன் பழகும் ஒரு பெண், யாராவது ஒருவனைக் கண்டவுடன் காதலிக்க மாட்டாள். நட்புடன்தான் பழகுவாள்.

    இப்படிப் பலருடன் நட்புடன் பழகும் போது யாராவது ஒருவரின் குண இயல்புகள், பழக்க வழக்கங்கள் அவளுக்குப் பிடிக்கும் போது, அங்கு அது காதலாகவும் மலரலாம். இந்தக் காதல் தப்பு என்று கருதவேண்டிய அவசியம் இல்லை. இந்தக் காதல் ஒருவகையில் நல்லதும் கூட. ஒருவரையொருவர் ஓரளவு முதலே தெரிந்து கொண்ட இவர்களின் மணவாழ்வு பெரும்பாலும் புரிந்துணர்வும், ஒற்றுமையும் மிகுந்ததாகவே இருக்கும்.

    "எங்கடை பெடியள் சரியில்லை." இது பெண்ணைப் பெற்றவர்கள் பலரின் வாய்ப்பாடமும் மனக்கருத்தும். இது மிக மிகத் தப்பானதொரு கருத்து.

    ஆண்கள் கெட்டவர்கள், பெண்கள் நல்லவர்கள் என்றில்லை. நல்லவர்களும் கெட்டவர்களும் இருபகுதியிலும் உள்ளார்கள். அந்தக் கெட்டவர்கள் ஏன் உருவானார்கள் என்பதைத்தான் நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

    இங்கு நாம் எடுத்துக் கொண்ட விடயத்துடன் பார்த்தால், ஆண் பெண் என்ற பாகுபாடின்றி வளரும் போது பெண் பிள்ளைகளுடன் கதைப்பதை, ஒரு சாதனையாக ஆண் பிள்ளைகள் கருதவே மாட்டார்கள். கதைப்பதற்கென்றே அலையவும் மாட்டார்கள். எமது வாழ்க்கை முறையின் தவறினால்தான் இந்தத் தப்புகள் எல்லாம்.

    சின்ன வயதிலிருந்தே பால் பாகுபாடின்றி ஒன்றாக நட்புடன் வளரும் பிள்ளைகள் மத்தியில் ஏற்படும் தவறுகளைவிட, "நீ ஆண், நீ பெண்" என்று பிரித்து தனிமைப் படுத்தப்பட்டு வளர்க்கப்படும் பிள்ளைகளின் மத்தியில்தான் தவறுகள் அதிகமாக ஏற்படுகின்றன.

    12, 13 வயதுகளின் பின், ஒரு பெண் பிள்ளைக்கு பெண் நண்பிகளைத் தவிர, வேறு ஆண் நண்பர்களே இல்லாத போது அவளுக்கு யாராவது ஒரு ஆணுடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டால், உடனேயே அவனில்
    இப்படியான காதலின் போது, இவனுடனான என் வாழ்வு இனிமையாக அமையுமா? இவன் போக்கும் என் போக்கும் பொருந்திப் போகுமா....?, என்பது போன்ற பல விடயங்களைச் சிந்தித்துப் பார்க்கும் மனப்பக்குவம் இல்லாது போய் விடுகிறது. இதே போலத்தான் ஆண் பிள்ளைகளின் நிலையும்.

    ஆனால் ஆண் பெண் என்ற பாகு பாடின்றி நட்புடன் பழகும் பிள்ளைகளிடம், இவன் அல்லது இவள் எனக்குப் பொருத்தமானவளா? இவன் அல்லது இவளுடன் காலம் பூராக வாழ முடியுமா..?, என்பது போன்ற பல விடயங்களைச் சிந்தித்துப் பார்க்கும் மனப்பக்குவம் தாராளமாக இருப்பதைக் கண்கூடாகக் காணமுடிகிறது.

    ஆதலால் ஆண்-பெண் பால் பாகுபாடின்றிய நட்பு அவசியம். பெண் பிள்ளைகளும் உலகத்தைப் பார்க்க பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும்.

    தவறுகள் நடவாதிருக்க உரிய வயதிலேயே உடல் ரீதியான, உணர்வுகள் சம்பந்தமான சில முக்கிய விடயங்களை பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்து அவர்கள் மனதில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.

    அதைவிடுத்து பெண் பிள்ளைகளை ஆண்களுடன் பழகவிடாது வீட்டுக்குள் வைத்து வளர்ப்பதுதான் சரியென நினைத்து பிள்ளைகளையும் மனரீதியாக வதைத்து, பெற்றோர்கள் தம்மையும் தாமே வதைத்துக் கொண்டு, ஏதோ, "நெருப்பைக் கட்டிக்கொண்டு வாழ்கின்றோம்." என்று சொல்வது அனாவசியச் செயலே.

    புதுமைக்குத் தேவை சவால் ...?

    By: Unknown On: 16:58
  • Share The Gag

  • நம்மிடம் உலகத்திலேயே சிறப்பான கருத்து, கற்பனை, சிந்தனை,
    எண்ணம் இருக்கலாம்; ஆனால் அதிலேயே நாம் ஒரு புதுமையானவர்
    ஆகிவிட முடியாது. புதுமைக்கு முதல் தேவை புத்தம் புதிய கருத்து. கருத்தோடு மட்டும் புதுமையை அடைய முடியாது! ஆனால் உண்மையில் புதுமைக்குத் தேவைப்படுவது, ஒரு சவால்தான். நாம் காலம் காலமாகப்
    போய் வந்த பாதையை ஒரேடியாக மாற்றச் செய்யும் ஒரு சவால்!

    டென்மார்க் நாட்டில், ஆர்லாஃபுட்ஸ் என்ற ஒரு நிறுவனம் பால் பொருட்கள் தயாரித்து விற்று வந்தார்கள். புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு ஆசை. எனவே அவர்களுடைய புதுமை படைக்கும் துறையின் இயக்குனர் மைக்கேல் ஸ்டீவன்ஸ், ஒரு சவாலைத் தேடிப் புறப்பட்டார். அதுவரை நிறுவனம் சுற்றிக் கொண்டிருக்கும் பாதையைவிட்டு அப்படியே தூக்கிப்போய் வேறு எங்கோ வீசிவிடப் போகும் சவால் அது! ‘பால் மற்றும் பால் பொருட்களை விண்வெளியில் அனுப்பிய முதல் ஆள் நாமாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தார் அவர். இதுவரை யாரும் இதைச் செய்ததில்லை. விண்வெளி வீரர்கள் பால் எடுத்துக்கொள்வதால் நன்மைகள் ஏராளம்; இருந்தும் ஏவுகணையில் போகும் போது யாரும் பால் சாப்பிட்டதே இல்லை’.

    இந்த ஒரு சவால் மட்டுமே - ஆர்லாஃபுட்ஸின் ஆராய்ச்சிப் பிரிவையும், தயாரிப்பு வளர்ச்சித் துறையையும் அவர்களுகடைய பழகிய பாதையை விட்டு தூக்கிவிட்டது. அவர்கள் வேறு ஏதோ திசையில் எங்கோ வெளியே வந்தபோது, மிகமிகப் புதுமையான தயாரிப்புகளைக் கையில் எடுத்துக் கொண்டுவந்தார்கள். விண்வெளில் மட்டும் இல்லாமல் அவற்றை பூமியிலும் சாப்பிட முடியும்! உதாரணமாக, குளர்சாதன பெட்டியில் வைக்காமலேயே இரண்டு வருடம் வரை கெடாமல் இருக்கும் தயிரைப் பார்த்தீர்களா? பூமியிலேயே கால் பதித்து நின்றியிருந்தால் அவர்கள் இந்த மாதிரியான பொருட்களைத் தயாரிப்பது பற்றி கனவுகூடக் கண்டிருக்கமாட்டார்கள்.

    இவர்கள் மட்டுமல்ல. புதுமையுடன் சவாலையும் சேர்த்துக் கொள்ளும் எந்த ஒரு தனிமனிதனும் அல்லது நிறுவனமும் ரஜினி படத்தின் பாடல் வரிகள் போல “சிகரத்தில் ஏறு, சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு” என்பனபோல உலகஅளவில் தன் வெற்றியை கால் பதிக்கின்றனர்.

    போகிற பாதை மிகவும் பயங்கரமானது! அதன் ஒவ்வொரு அடியிலும் புதிய புதிய சிந்தனைகள் தேவைப்படும். புதுமை செய்கிறேன் என்று புறப்படும் நிறுவனத்தின் பாதை, ஒரு கடினமான மலைப் பாதையைப் போல அணியின் உற்சாகமும் ஈடுபாடும் அணைந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி நம் இதயம் சோர்ந்து போய், “கிழே போய்விடலாம்” என்று சொல்லும்; அதைமீறி மேலே போய்க் கொண்டே இருக்க வேண்டும்.

    ஒரு சாகசப் பயணம் என்றால் வழியில் நூற்றுக்கணக்கான புயல்கள் வீசும், சவால்கள் மறிக்கும். கடைசியாக பயணத்தின் நோக்கம் சிகரத்தை அடைவது மட்டுமே அல்ல;  இன்னும் பல சிகரங்களை எட்டுவதற்கான வல்லமைளை வளர்த்துக் கொள்வதும்தான்!

                     சிகரத்தை அடைவோம்! வானத்தைத் தொடுவோம்!!

    Sunday, 24 August 2014

    தூக்கமும் நீங்களும்...

    By: Unknown On: 22:43
  • Share The Gag

  • உலகில் சரிபாதிப் பேர், நிம்மதியான உறக்கமின்றித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இருட்டு- வெளிச்சம், இன்பம்- துன்பம், கஷ்டம்- நஷ்டம், நன்மை- தீமை, சந்தர்ப்பம்- சூழ்நிலை இவற்றோடு சம்பந்தப்பட்டது, தூக்கம். நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் தூக்கத்தை வரவழைக்க முடியாது.


    அதேமாதிரி நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில் வருகிற தூக்கத்தை நிறுத்தவும் முடியாது. தூக்கமின்மை, அதாவது போதிய நேரம் தூங்காததை மருத்துவ மொழியில் ‘இன்சோம்னியா’ என்று சொல்கிறார்கள். தூங்கப்போவதற்கு முன்பு தீவிரமான யோசனை, மூளையைக் கசக்கி சிந்திப்பது என்று சொல்வார்களே,


    அந்த மாதிரி எண்ணங்கள் உருவாவது, உடலை அதிகமாக வருத்திக்கொள்வது, உடலுக்கு அதிகமாக வேலை கொடுப்பது, தூங்கும் இடம் ஒரு நல்ல சூழ்நிலையில் அமைந்திராமல் இருப்பது, தூங்கும் நேரம் ஒத்துப் போகாமல் இருப்பது, நாள்பட்ட உடல் நோய்கள், தாங்க முடியாத வலி, மன அழுத்தம்,


    மன உளைச்சல் இவை அனைத்துமே தூக்கத்தைப் பாதிக்கும். தூக்கத்தை வரவழைக்க பலரும் பலவித முறைகளைக் கையாளுகிறார்கள். சிலர் யோகா செய்கிறார்கள். சிலர் தியானம் பண்ணுகிறார்கள். சிலர் மருந்து, மாத்திரைகள் சாப்பிடுகிறார்கள்.


    சிலர் மது அருந்துகிறார்கள். இப்படி பலவிதமான முறைகளைக் கையாண்டு தூக்கத்தை வரவழைக்கிறார்கள். தூக்கமின்மைக்கும் மதுவுக்கும் நிறைய சம்பந்தம் உண்டு. மது அருந்தினால் நல்ல தூக்கம் வரும் என்று நிறையப் பேர் நினைக்கிறார்கள்.


    தூக்கம் வர வேண்டும் என்பதற்காகவே மதுபானம் அருந்த ஆரம்பித்தவர்கள் நிறைய பேர். ஆரம்பத்தில் மதுபானம் நல்ல தூக்கத்தைத் தருவதைப் போலத் தோன்றினாலும், நாளடைவில் அது தூக்கத்தைக் குலைக்கும். முன்னிரவில் தூக்கத்தை கொடுத்து பின்னிரவில் தூக்கத்தைக் கெடுத்துவிடும் தன்மையுடையது மது பானம்.


    மேலும் கண்கள் சுற்றிக்கொண்டே தூங்கும் தூக்கத்தையும் (ஆர்.இ.எம். தூக்கம்) மது குறைத்து விடும். வயதானவர்களுக்கு ஒரு சிறிய சத்தம் கூட தூக்கத்தை கெடுத்துவிடும். அதற்குப் பிறகு தூக்கத்தை வரவழைக்க அவர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள்.


    மறுபடியும் தூங்குவதற்கு ரொம்ப நேரம் ஆகும். மனிதனுடைய பழக்கவழக்கங்களை அலசி ஆராய்ந்து பார்த்தால் தூக்கத்தைப் பற்றிய பலவிதமான விஷயங்கள் நமக்குத் தெரியவருகின்றன. செயற்கை வெளிச்சங்கள் அதிகமில்லாத பழைய காலத்தில், சூரியன் மறைந்த கொஞ்ச நேரத்திலேயே தூங்கப் போய்விடுவார்கள்.


    ஆனால் இரவில் நிறைய தடவை விழிப்பார்கள். மறுபடியும் தூங்குவார்கள். முன்னிரவில் ஆழ்ந்த தூக்கமும், பின்னிரவில் லேசான தூக்கமும் இவர்களுக்கு இருக்கும். பின் னிரவில் கண்கள் சுற்றும் (ரேபிட் ஐ மூவ்மெண்ட்) தூக்கமும் இவர்களுக்கு இருக்கும். தூங்குகிற நேரத்தில் உடம்பும், மூளையும் வேலை பார்ப்பதில்லை, இரண்டும் ஓய்வெடுக்க ஆரம்பித்து விடும் என்று நீங்கள் நினைக்கலாம்.


    இது சரியல்ல. நாம் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும், விளையாடிக் கொண்டிருந்தாலும், படித்துக் கொண்டிருந்தாலும் நமது மூளை ‘பிசி’யாக வேலை பார்த்துக் கொண்டு தான் இருக்கும். நமக்கு தூக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்படும் நேரத்தில், மூளையும் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கும்.


    ஆனால் ஓரளவுதான் மூளை ஓய்வு எடுத்துக் கொள்கிறது. நாம் தூங்கும்போது மூளை அதுபாட்டுக்குச் செயல்பாட்டில் இருக்கிறது. அன்றைய பொழுதுக்கும், அடுத்தடுத்த நாட்களுக்கும் உங்களை தெம்பாக வைக்க, உங்களை தேக ஆரோக்கியத்தோடு உற்சாகமாக வைக்க, உடலுக்குள் என்னென்ன ரசாயன மாற்றங்கள் பண்ண வேண்டுமோ அதையெல்லாம் பண்ணி, உடம்பை மூளை தயாராக வைத்திருக்கிறது.

    Thursday, 21 August 2014

    ஆனந்தம் என்பது எது தெரியுமா?

    By: Unknown On: 18:08
  • Share The Gag

  • * தீமையை நன்மையால் வெல்ல வேண்டும். கருமியை ஈகையால்
     வெல்ல வேண்டும். பொய்யனை உண்மையால் வெல்ல வேண்டும். பகைவனைஅன்பினால் வெல்ல வேண்டும். இவையே பண்புடையோரின்
     நெறிமுறையாகும்.


     * பிறர் விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தி அவர்களுடைய
     குறைகளையே காணுபவர்கள், பிறரைப் பற்றி புறஞ்சொல்லும்
     குணமுடையவர்கள், இறுதியில் தங்களுடைய குறைகளை திருத்த
     முடியாமல் தவிப்பார்கள்.


     * உண்மையில் ஆனந்தம் என்பது எது தெரியுமா? உங்களால்
     இயன்ற நல்ல செயல்களை செய்வதில் ஆர்வத்தை வளர்த்துக்
     கொள்ளுங்கள். அதன் மூலம் கிடைக்கும் ஆனந்தத்தை இழக்க
     மாட்டீர்கள்.


     * மனிதன் பழக்கத்திற்கு அடிமையானவன். ஒருமுறை செய்த
     செயலைத் திரும்ப திரும்பச் செய்யும் தன்மை கொண்டவன்.
    ஆதலால், பாவம் தரும் செயல்களை செய்வதற்கு அஞ்சுங்கள்.
    இல்லாவிட்டால், பழக்கத்தினால் மீண்டும் மீண்டும் செய்ய
     ஆரம்பித்து விடுவீர்கள்.


     * துன்பப்பட்டவனுக்கே இன்பத்தின் அருமையை உணர முடியும்.
    எவ்வித முயற்சியும் இல்லாமல் பெறும் இன்பம் வந்த வேகத்தில்
     காணாமல் போய்விடும். பொறாமை, பேராசை மற்றும் கெட்ட எண்ணம்
     உடையவன் பேச்சாலோ, உடலழகாலோ மட்டும் நல்லவனாகி விட
     முடியாது.

    Monday, 18 August 2014

    கணவருக்கு பயப்படலாமா?

    By: Unknown On: 16:41
  • Share The Gag

  • `என் கணவரை நினைச்சாலே பயமாக இருக்கிறது…’ என்று சில பெண்கள் சொல்வார்கள். பயம் என்பது திருடனுக்கு போலீஸ் மீது ஏற்படலாம். கணவன்_மனைவி உறவென்பது போலீஸ் திருடன் போன்றதல்ல.


    கணவன் மீது மரியாதை இருக்க வேண்டும். அதையும் மீறி இருவருக்கும்ளும் இருக்க வேண்டியது நட்பு.


    நட்பு மீது வாழ்க்கை நடத்தும் ஜோடிகள் அதிக மகிழ்ச்சியாக இருப்பார்கள். பிரச்சினைகளை தைரியமாக சமாளிப்பார்கள். இவர்கள் `இல்லற’ வாழ்க்கையும் ரொம்ப ஜாலியாக இருக்குமாம்.


    சில குடும்பங்களில் கணவன்_மனைவி உறவு வாத்தியார் மாணவி என்ற நிலையில் அமைந்து விடுகிறது. சமையலில் பெயர் வாங்க வேண்டும். நடை, உடை, பாவனையில் அவர் பாராட்ட வேண்டும். விழுந்து விழுந்து உபசரித்து `சபாஷ்’ வாங்க வேண்டும் என்ற ரீதியில் அத்தகைய மனைவிகள் நடந்து கொள்கிறார்கள்.


    இப்படிப்பட்ட எதிர்பார்ப்புகளும் வாழ்க்கை சிறக்க உதவுவதில்லை. கடுமையாக மனைவி உழைத்தும், கணவருக்காக தன்னை மாற்றிக் கொண்டும் அதற்குரிய பிரதிபலனை கணவன் வழங்காதபோது அவள் மனதொடிந்து எதிர்மறையாக நடக்கத் தொடங்கி விடுவாள்.


    உங்க வீட்டில் நீங்க எப்படி? பயப்படவோ, எப்போதும் பாராட்டுக்காக உழைக்கவோ செய்யாதீர்கள். அன்பை, நட்பை வெளிப்படுத்துங்கள் அது போதும்… ஆயிரம் விதத்தில் உங்களுக்கும் பிரிக்க முடியாத இறுக்கத்தை ஏற்படுத்தி விடும்.

    Wednesday, 30 July 2014

    மனைவியை வசீகரிக்கும் பரிசு! என்னங்க அது..?

    By: Unknown On: 07:38
  • Share The Gag
  • மனைவிக்கு, கணவர் பரிசுகள் கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். மனைவிக்கு மனப்பூர்வமாக தரும் பரிசுகள் மரியாதைக்குரியதாகவும், நேசிப்பின் சின்னமாகவும் என்றும் அவள் நினைவில் நிறைந்திருக்கும்.

    அந்த பரிசு எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும்?
    - உபயோகப்படுத்தக்கூடிய பொருளாக இருக்கலாம்.

    - நேரடியாக உபயோகம் இல்லாவிட்டாலும், அழகான பொருளாகவும் இருக்கலாம்.

    மனைவிக்கு தேவையான உபயோகப் பொருளை வாங்கிக்கொடுத்தால், அதை உபயோகப் படுத்தும்போதும் கணவரின் நினைவுவரும். அதனால் மனைவி எப்போதும் தன்னை நினைவில் வைத்திருக்கவேண்டும் என்று விரும்பும் கணவர்கள், அவள் அடிக்கடி பயன்படுத்தும் செல்போனை பரிசாக வாங்கிக்கொடுத்துவிடுவார்கள். ஆனால் அடிக்கடி உபயோகப் படுத்தும் பொருட்கள் சீக்கிரமே பழையதாகி, நாளடைவில் செயலற்றதாக ஆகி விடும். அதனால் தான் வாங்கிக்கொடுக் கும் பரிசு, செயலற்றதாகவே ஆகக்கூடாது என்று கருதும் கணவர்கள், கலைப் பொருட்களை வாங்கி பரிசாக வழங்கி விடுகிறார்கள். அழகான அந்த பொருட்கள் எப்போதும் கணவரை பளிச்சென நினைவில் வைத்துக் கொள்ள உதவும்.

    மனைவியை மகிழ்வித்துப் பார்ப்பதுதான் தங்கள் கொள்கை என்று நினைக்கும் கணவர் கள் அழகிய புடவையோ, நகையோ பரிச ளித்து நல்ல பெயர் வாங்கி விடுகிறார்கள்.

    பரிசுகள், திருமண பந்தத்தை கவுரவித்து மரி யாதை செலுத்துவதாக இருக்கிறது. மனைவிக்கு முதன் முதலாக கொடுக்கப்படும் பரிசுகள் இன்ப அதிர்ச்சிகளை கொடுத்து, நீண்ட நாட்கள் மகிழ்விக்கும் தன்மை கொண்டது. இந்த பரிசுகளை சம்பிரதாயமானது, சராசரி யானது என்று இரண்டு வகையாகப் பிரிக் கலாம்.

    சம்பிரதாய ரீதியாக தரப்படும் பரிசுகள் விலை உயர்ந்ததாகவும், குடும்ப கவுரவத்தை வெளிப் படுத்தும் அம்சமாகவும் இருக்கும். அந்த பரிசுகள் தொடக்கத்தில் அதிக ஆச்சரியத் தையும், மகிழ்ச்சியையும் தந்தாலும், அந்த பரம்பரை பரிசுகளை பாதுகாக்கும் பெட்டகம் மாதிரியே அந்த பெண் ஆகிப்போவாள். அந்த பரிசுகளும் பெரும்பாலும் அந்த பெண்ணால் தனிப்பட்ட முறையில் எல்லா இடங்களிலும் பயன்படுத்தக்கூடியதாகவும் இருக்காது. சம்பிர தாய பரிசுகள் பெரும்பாலும் பெட்டகத்தில் வைத்து பூட்டக் கூடியதாகத்தான் இருக்கும். சம்பிரதாயம் இல்லாமல் தனிப்பட்ட முறையில் தரப்படும் பரிசுகள், பயன்பாட்டு அடிப் படையில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. சம்பிரதாய பரிசு எப்போதாவது ஒருசில முறை தான் கிடைக்கும். தனிப்பட்ட பரிசுகள் அடிக்கடி கிடைக்கும். அதனால் இந்த தனிப்பட்ட பரிசுகள் மீது பெண்களுக்கு ஆர்வம் அதிகம். அடிக்கடி அவர்களை சிரிக்கவைக்க இந்த பரிசுகள் உதவும்.

    வாழ்க்கையின் வெகுதூரத்தை கடந்த பிறகும் மலரும் நினைவுகளாக, பல பரிசு பொருட்கள் நிலைத்து நிற்கின்றன. பெரும்பாலான நேரங்களில் சாதாரண பரிசு பொருட்கள் கூட, காலங்கடந்து நின்று பெண்களை மகிழ்ச்சியடையச் செய்யும். மிகப்பெரிய பரிசுகள் கிடைத்தபின்பும், அந்த சாதாரண பரிசுகள் பெண்கள் மனதில் நிலைத்து நிற்பதும் உண்டு.

    சில பரிசுகள் என்ன பரிசு என்பதைவிட, யார் கொடுத்தது என்பதைவைத்து சிறப்பு பெறும். பிற்காலத்தில் ஏற்படும் சில கசப்பான நினைவுகளை மாற்றியமைக்கும் ஆற்றல்கூட அந்த பரிசுகளுக்கு உண்டு.

    முன்பெல்லாம் ஆண்கள் மட்டுமே பெண்களுக்கு பரிசுகளை கொடுத்துக்கொண்டிருந் தார்கள். பெண்கள் உழைப்பதில்லை என்பதால் அந்த நிலை. இப்போது பெண்கள், ஆண்களைவிட அதிகம் சம்பாதிக்கும் நிலை இருந்துகொண்டிருக்கிறது. அதனால் ஆண் களுக்கு நிகராக பெண்களும் அன்புப் பரிசுகளை அள்ளிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

    பழைய காலத்தில் பெரிய பெரிய சமஸ்தானங்களில்கூட மனைவிக்கு பரிசு கொடுக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. மன்னர் ஒருவர் தன் மனைவிக்கு அன்னப்பறவையின் இறகை பரிசாக கொடுத்தார். வியந்து போன அரசி, அவரை ஆச்சர்யத்துடன் பார்க்கையில், “இதை நீ எத்தனை காலம் பத்திரமாக வைத்திருக்கிறாய் என்பதைப் பொறுத்துத்தான் என் மீது நீ வைத்திருக்கும் அன்பை நான் புரிந்து கொள்வேன்” என்றார். அரசி அதனை வாழ்நாள் முழுவதும் தங்கப் பேழையில் வைத்துப் பாதுகாத்தார். அன்னப் பறவையின் இறகு என்பது அந்த காலத்தில் பெரிய விஷயம் இல்லை. ஆனால் அந்த மெல்லிய இறகில் அந்த மன்னர் தன் அன்பையும் கலந்துவிட்டதால் அது தங்க பேழைக்கு செல்லும் உயர்ந்த பரிசாகிவிட்டது. நீங்கள் உங்கள் மனைவிக்கு வழங்கும் பரிசும் அன்பு கலந்ததாக இருக்கட்டும். அவள் அதை தங்க பேழை போன்ற தன் மனதுக்குள் வைத்து பாது காப்பாள். அதன் மூலம் உங்கள் ஆத்மார்த்த உறவு மேம்படும்.

    வங்காளதேசத்து மீனவர் ஒருவர் தன் மனைவிக்கு வெண் சங்கு ஒன்றை அன்பு பரிசாக அளித்தார். அதை பத்திரமாக வெகுகாலம் பாதுகாத்து வந்தாள் மனைவி. மனைவி இறக்கும் தருவாயில் மீனவர் அந்த வெண் சங்கை வீடு முழுவதும் தேடினார். எங்கும் கிடைக்காமல் போகவே, மனைவியிடம் வந்து நான் கொடுத்த அன்பு பரிசை தொலைத்து விட்டாயா என்று கேட்டார். அவளோ தொலைந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் அதில் வளையல் செய்து கைகளில் அணிந்திருக்கிறேன் இதோ பாருங்கள் என்றாள்.

    அன்றிலிருந்து வங்காளதேசத்தில் மணமகளுக்கு மணமகன் வெண் சங்கு வளையல் அணிவிக்கும் வழக்கம் உருவானது. இன்றும் அது தொடர்கிறது!

    Saturday, 26 July 2014

    ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது எது?

    By: Unknown On: 15:41
  • Share The Gag

  • 1) உங்கள் காதலிக்கு திருமணம் ஆகி இருக்கும்.

    2) அப்போது தான் வேலை தேட ஆரம்பித்திருப்பீர்கள். அதற்குள்,பெரியவர்களின் பார்வையெல்லாம்
    " இதெல்லாம் எங்க உறுப்படப்போது? " என்பது
    போன்றே இருக்கும்.

    3) டீன் ஏஜ் பசங்கலெல்லாம் , அவர்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளத் தயங்குவார்கள்.உங்களுக்கு வயதாகி விட்டது போல் எண்ணுவார்கள்.

    4) கார்ட்டூனை ரசிப்பது போல் செய்திகளையும்
    ரசிப்பீர்கள்.

    5) உடல் பருமன் ஏறாமல் , நீங்கள் விரும்பிய அனைத்தையும் உங்களால் சாப்பிட முடியாது.

    6) தினமும் shave செய்யாவிட்டால் , வாலில்லா குரங்கைப் போல் இருப்பீர்கள்.

    7) ஞாயிற்று கிழமைகளில் விளையாடும் கிரிக்கெட் மேட்ச் க்கு உங்களை கூப்பிட உங்கள் தெரு இளவட்டங்கள் மறந்து விடுவார்கள்.

    உறவினர் வீடுகளுக்குச் சென்றாலோ , சுப நிகழ்ச்சிகளுக்கு சென்றாலோ அத்தைமார்கலெல்லாம் எப்போது திருமணம் என்பார்கள்?மாமாக்களோ உன் career பத்தி என்ன முடிவு பண்ணியிருக்க என்பார்கள்?

    9) இந்த உலகை வெல்வதற்கான அத்தனை தன்னம்பிக்கையும் உங்களிடம் நிறைந்திருக்கும்.ஆனால் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மட்டும் குறைவாக இருக்கும்.

    10) இந்த உலகைப் பற்றி உங்களுக்கு பள்ளிகளில் என்னக் கற்பிக்கப் பட்டதோ , அது அத்தனையும் ஒன்றுமே இல்லை என்பது உங்களுக்கு தெரியவந்திருக்கும்.

    11) வேலைக்காக எழுதும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பின்னர் கூட , வேலை கிடைத்திருக்காது.

    12) சிபாரிசு என்றவுடன் வேலை கிடைக்கும்.இங்கு எல்லாமே அரசியல் தான் என்பதை புரிந்துக்கொள்வீர்கள்.

    13) காதலுக்கு கண்கள் உண்டு என்பீர்கள்.காதலை விட நட்புச் சிறந்தது என்று உணர்வீர்கள் .

    14) இங்கு எதுவுமே எளிதில் இலவசமாக கிடைத்து விடாது என்பதை உணர்ந்துக் கொள்வீர்கள். உங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் அதீத நம்பிக்கை மட்டுமே உங்கள் மனசாட்சியை வழி நடத்தும்.

    15) இப்படி ஒரு வாழ்க்கையைத் தான் எதிர்க்கொள்ளப் போகிறோம் என்று சற்றும் எதிர்பார்க்காத ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருப்பீர்கள்.

    # எந்த அளவுக்கு துல்லியமாய் எழுதி இருக்கிறேன் என்றுத் தெரியாது.இதைப் படிக்கையில் நீங்கள் மகிழ்ச்சி அடைந்தால் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

    Tuesday, 22 July 2014

    பணத்தை மிச்சப்படுத்த சில டிப்ஸ்... படித்துப் பாருங்களேன்..!

    By: Unknown On: 16:49
  • Share The Gag

  • சேமிப்பு என்று ஒன்று இருந்துவிட்டால், வீட்டில் எழும் பல்வேறு பொருளாதார பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு கிடைத்துவிடும். உங்கள் உழைப்பை சேமிப்பாக மாற்ற சில டிப்ஸ்…

    * தினமும் நீங்கள் செலவழித்ததை, இரவில் எழுதிப் பாருங்கள். அதில் தேவையற்ற செலவு எனத் தோன்றுவதை அடுத்த முறை தவிர்த்துவிடுங்கள்.

    * மணிக்கு ஒரு முறை காபி, டீ குடிக்கும் பழக்கம் உடையவராக இருந்தால், வீட்டிலிருந்தே ஒரு பிளாஸ்கில் டீ எடுத்துப் போய்விடுங்கள்.

    * புத்தகங்கள் குறித்து முன்பின் அறியாமலேயே வாங்கிக் குவிக்கிறீர்களா? வாடகை புத்தகங்கள் கிடைக்கும் நூலகங்களில் அதனை வாங்கிப் படித்துவிட்டு, அந்த புத்தகத்தை சேர்க்க விரும்பினால் மட்டும் வாங்கிக் கொள்ளலாமே.

    * வீட்டில் தேவைக்கு அதிகமான அலங்காரப் பொருள்கள் அல்லது ஃபர்னிச்சர் பொருள்களை வாங்க நினைத்தால், அந்த திட்டத்தை பத்து நாள் தள்ளிப்போட்டுப் பாருங்கள். அதற்குப் பின்னும் தேவையென்று தோன்றினால் வாங்குங்கள்.

    * நீங்கள் வாங்கவிருக்கும் அல்லது செலவழிக்கப்போகும் பொருளை மூன்று விதமாகப் பிரியுங்கள். அவசியம், அத்தியாவசியம், அனாவசியம். “அத்தியாவசியம்’ என்று தோன்றுவதை மட்டும் செய்யுங்கள்.

    * தபால் நிலையம், வங்கி, அலுவலக சேமிப்பு என நம்பகமான இடங்களில் சிறு சிறு தொகையை சேமியுங்கள். அவசரத் தேவைக்கு அது உதவும்.

    *கிரெடிட் கார்டு உபயோகிப்பதை பெரும்பாலும் தவிர்த்துவிடுங்கள். கையில் பணத்தை வைத்துக் கொண்டு, வட்டியையும், முதலையும் சேர்த்து செலுத்த வேண்டாமே!

    Thursday, 17 July 2014

    கணவன் வாங்கலையோ..கணவன்....?

    By: Unknown On: 21:05
  • Share The Gag


  • ஒரு ஊர்ல கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது....அந்த கடை வாசலில் கடையோட விதிமுறை போர்டு வச்சுருந்தாங்க ..

    அது என்னன்னா...!  

    1.கடைக்கு ஒரு தடவை தான் வரலாம்.


    2. கடைல மொத்தம் 6 தளங்கள் இருக்கு...ஒவ்வொரு தளத்துளயும்


    இருக்குற ஆண்களோட தகுதிகள் மேல போக போக அதிகமாகிட்டே போகும்.


    ஒரு தளத்துல இருந்து மேல போயிட்டா மறுபடி கீழ வர முடியாது ..
    அப்டியே வெளிய தான் போக முடியும்.  

    இதெல்லாம் படிச்சுட்டு ஒரு பெண்மணி கணவர் வாங்க கடைக்கு போறா...."மச்..கணவர் வாங்குறது என்ன காய்கறி வாங்குற மாதிரி கஷ்டமா என்ன...ச்சே ச்சே அப்டி எல்லாம் இருக்காது   


    முதல் தளத்துல அறிக்கை பலகைல

     "முதல் தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்" அப்டின்னு போட்டுருந்துச்சு   


    இது அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போக முடிவு செய்றா


    இரண்டாம் தளத்துல அறிக்கை பலகைல

     "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் " அப்டின்னு போட்டுருந்துச்சு    


    இதுவும் அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போறா.   


    மூன்றாம் தளத்துல அறிக்கை பலகைல


    "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். " அப்டின்னு போட்டுருந்துச்சு


    அந்த பெண்மணி வசீகரமானவர்கள்னு பார்த்ததும் ஆஹா மூணாவது தளத்துலையே இவ்வளவு தகுதிகள் இருந்தா மேல போக போக இன்னும் என்ன எல்லாம் இருக்குமோ அப்டின்னு நினைச்சு மேல போவதாக முடிவெடுத்தாள்.


    நாலாவது தளத்துல அறிக்கை பலகைல


    "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள்.


    வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள் " அப்டின்னு.
    இதை விட வேற என்ன வேணும்...நல்ல குடும்பம் அமைக்கலாமே?


    கடவுளே...மேல என்ன இருக்குன்னு தெரிஞ்சே ஆகணும்." அப்டின்னு முடிவு பண்ணிட்டு மேல போனாள்.


    ஐந்தாவது தளத்துல அறிக்கை பலகைல

     
     "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள்.


    வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்.மிகவும் ரொமாண்டிக் ஆனவர்கள் " அப்டின்னு.
    அவ்ளோ தான்.....


    அந்த பெண்மணியாள முடியல...[ வடிவேலு ஸ்டைலில்] ...சரி இங்கயே யாரையாவது தேர்வு செய்யலாம்னு நினைச்சாலும் இன்னொரு தளம் இருக்கே..அங்க என்ன இருக்குன்னு பார்க்காம எப்டி முடிவு எடுக்குறது...சரி மேல போயி தான் பார்ப்போம்னு போறா ..   

    ஆறாவது தளத்துல அறிக்கை பலகைல


    "இந்த தளத்தில் கனவான்கள் யாரும் இல்லை..வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது ..

    இந்த தளத்தை அமைத்ததற்கு காரணமே பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாதுங்குறது நிரூபிக்கத் தான் .

    எங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி ...
    பார்த்து பதனமாக கீழே படிகளில் இறங்கவும் " அப்டின்னு போட்டிருந்தது .

    Tuesday, 7 January 2014

    பூப்பு நீராட்டு - ஒரு வரலாற்று பார்வை....!

    By: Unknown On: 07:03
  • Share The Gag


  • புதிய உலகத்தில்
    பெரியமனுசியாய்
    கடமைகளுடன்
    கால்தடம் பதிக்கிறாய்.
    வா.
    பெருமையுடனும்
    மரியாதையுடனும்
    வலிமை பொங்க
    நடந்து வா.
    இன்று முதல்
    நீ -
    நம் மக்களின் தாய்.
    நம் தேசத்தின் தாய்.



    பெண்ணின் பூப்படைதலைப் பெருமையுடன் பாடும் அப்பச்சி (Apache) இனக்குழு மக்களின் பாடல் இது.


    பெண் பூப்படைதல் என்பது பல்வேறு இனக்குழு மக்களின் வாழ்க்கையில் கொண்டாட்டத்திற்குரிய சடங்காகவே இருந்து வந்துள்ளது. பூப்பு என்பது தீட்டு, விலக்கு, தீண்டத்தாகதது என்று எதிர்மறையாக நோக்கப்படவில்லை. பூப்பு என்ற சொல் தொடர்ச்சியாக வண்டு நுகர்தல், பிஞ்சு, காய், கனி, என்ற பிம்பங்களை மட்டுமே உருவாக்கி அதன் வழி இனவிருத்திக்கு காரணமான நேர்மறைச் செயலாகவே கருதப்பட்டது. ஆரிய இனப்பண்பாட்டின் தாக்கமும் வைதீகமும் ஆண் சமுதாயமும் கலந்து பெண்ணை அடிமைப்படுத்த முனைந்த காலத்தில் தான் பூப்பு என்ற செயல் "தீட்டாகிப்" போனது.

    மனித வரலாற்றில் இனவிருத்தியின் நிலமாக இருந்தப் பெண்ணின் ஆளுமையைக் கண்டு வியந்து அச்சம் கொண்டு அவள் தலைமையை ஏற்றுக்கொண்ட இனக்குழு வாழ்க்கையில் பெண் தெய்வ வழிபாடே இருந்தது என்பதும் இன்றும் சிவப்பு நிறமும் நெற்றியில் இடப்படும் குங்குமச் சிவப்பும் ரத்தப் பலியிடலும் ஆகிய சடங்குகளின் காரணத்தை ஆராயப் புகுந்தால் பூப்பு என்ற சடங்கின் வேர்களை அடையாளம் காண முடியும். நிலமும் நிலம் சார்ந்த மருதமும் இனக்குழு வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றங்களில் குறிப்பிடத்தக்கது.

    பெண் -இல்லாள் என்றும் மனைமாட்சி என்றும் மாற்றம் பெற்ற காலம். பூப்பு பெண்ணின் ஆளுமையாக இருந்தது மறைந்து இனவிருத்திக்கான அடையாளமாக மட்டுமே சுருங்கிய காலம்.

    ஆண் -பூப்படைதல் சடங்கு

    ஆணுக்கான சடங்குகள் அனைத்தும் போர், வேளாண்மை, அரசாட்சி என்று சமூக ஆள்வினைக்கான சடங்குகளாகவும் பெண்ணுக்கான சடங்குகள் அனைத்தும் பாலியல் உடல் சார்ந்தும் அவ்வுடல் பாலுறவு, மகப்பேறு என்று இனவிருத்தி சார்ந்தும் அமைந்ததாக காணப்படுகின்றன. அருந்தா இனக்குழு வாழ்க்கையில் ஆண் பூப்படைதல் சடங்கு கொண்டாடப்பட்டதைக் காணலாம். அதுவரை ஆடையின்றி அலைந்த ஆண்மகன் வயதுக்கு வந்துவிட்டான் என்பதை அறிவிக்கவும் கொண்டாடவும் அவன் பெற்றோர்கள் ஏற்பாடு செய்யும் சடங்கு இது. அக்குழுவின் வயதான முதியவர் இச்சடங்கை நிகழ்த்துவார்.

    தன் தலையால் ஆண்மகனின் தலையை மோதி ரத்தம் சிந்த வைப்பார். எறும்பு கடிக்கும் குழிக்குள் அவனை தள்ளி உணவின்றி சில நாட்கள் வைப்பார்கள். வீரமும் வலி பொறுத்தலும் போர் வாழ்க்கையில் ஆணுக்கான அம்சங்களாக இருப்பதால் இச்சடங்கை ஆணின் "மறுபிறப்பு" என்று சொல்கிறார்கள்.

    ஆண் பூப்படைதல் சடங்கை "பிணை அறுத்தல்" - க்யா மோட்டு டி செலி (kia motu te sele - to snap the tie) என்றும் பெண் பூப்படைதல் சடங்கை "பாவாடை அணிதல்" ( hakatiti - titi skirt) என்றும் மேற்கத்திய நாடுகளின் இனக்குழு மக்களின் சடங்குகளிலிருந்து நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.

    பல்வேறு நாடுகளில் பூப்பு சடங்குகள்:


    பெண் கருத்தரிக்கும் தகுதியை அடைந்துவிட்டாள் என்பதற்கான உடற்கூறு அறிகுறியை பூப்படைதல் என்று சொல்வர். பெண்ணுக்கு முதலாவதாக நேரும் இந்தப் பூப்படைதல் நிகழ்ந்த பிறகே அவளுக்குப் பாலியல் சுகம் உண்டாகிறது என்பதில்லை. தனி நபரின் உடல் வளர்ச்சியைப் பொறுத்து பெண்ணின் பூப்புக்கு முன்போ பின்போ அத்தகைய சுகத்தை அவள் உணரலாம். எனவே பூப்பு எனில் பெண் கருத்தரிக்கும் ஆற்றலைப் பெற்றுவிட்டாள் என்ற அளவில்தான் பொருள் கொள்ள வேண்டும். பெண் பூப்படைதல் சடங்கு பல்வேறு நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

    ரஷ்யாவில் பெண் பூப்படைந்த உடன் அவள் தாய் பெண்ணின் முகத்தில் ஓங்கி அறைவிடுவாளாம். அவள் அடித்த அடியில் பெண்ணின் கன்னங்கள் சிவந்துவிடுவதை நல்ல அறிகுறியாக நினைக்கிறார்கள். கொண்டாடுகிறார்கள்.

    நேபாளத்தில் பெண் பூப்படைந்தவுடன் அவளை ஒரு இருட்டறையில் அடைத்து வைக்கிறார்கள். வெளியில் வரவோ சூரிய ஒளியைப் பார்க்கவோ கூடாது. அதன் பின் ஒரு குறிப்பிட்ட நாளில் அவள் திருமணத்திற்கு தகுதியுடையவளாகிவிட்டாள் என்பதை உணர்த்தும் வகையில் அவளுக்கும் சூரிய பகவானுக்கும் திருமணம் செய்யும் சடங்கு நடைபெறும்.

    ஆப்பிரிக்கா சுலு (Zulu) இனத்தில் பெண் பூப்படைந்த நாளில் ஆடு பலியிடுதல் நடக்கும். அந்தப் பெண் அவள் ஒத்தப் பெண்களுடன் காலையில் எழுந்து நதியில் நீராடி வந்தப் பின் அவள் உடல் எங்கும் சிவந்த களிமண்ணைப் பூசுவார்கள். பூப்படைந்த அந்த நாட்களில் சில உணவுகளை அவள் விலக்க வேண்டும். வயதானவர்களும் அவளைப் போல ஏற்கனவே பூப்படைந்தப் பெண்களும் பூப்படைந்தப் பெண்ணின் உடல் மாற்றங்களையும் வாழ்க்கை முறையையும் சொல்லிக் கொடுப்பார்கள்

    ஜப்பானில் பெண்ணின் பெருமைக்குரிய சடங்காக பூப்படைதல் நிகழ்வைக் கொண்டாடுகிறார்கள். விருந்துக்கு அழைக்கும் போது விருந்துக்கான காரணத்தைச் சொல்வதில்லை. சிவந்த அரிசியும் பீன்ஸ்சும் நிறைந்த பெரிய தட்டை பூப்படைந்தப் பெண்ணின் முன்னால் வைத்திருப்பதன் மூலம் விருந்துக்கும் கொண்டாட்டத்திற்குமான காரணம் சொல்லப்படும்.

    இந்தியாவிலும் பெண் பூப்படைதல் சடங்கு எல்லா இன மக்களிடமும் இருக்கிறது. அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் இச்சடங்கு இன்றும் கொண்டாடப்படுகிறது. "பூப்பு நன்னீராட்டல்" என்று இச்சடங்கை கொண்டாடும் வழக்கம் இன்றும் தமிழர்கள் வாழ்வில் இடம் பெற்றுள்ளது. இச்சடங்கு குறித்த பதிவுகளை தமிழ்த் திரைப்படங்கள் அளவுக்கு யாரும் பதிவு செய்திருக்க முடியாது! தாய்மாமன் உரிமையிலிருந்து பூப்படைந்தவுடன் பாலியல் உணர்வு ஏற்படுவதாக காட்டப்படும் காட்சிகள் வரை உண்மை, பொய் அனைத்தையும் பூப்பு நன்னீராட்டில் கலந்து காட்டிய பெருமை நம் தமிழ்த் திரைப்படங்களுக்கே உண்டு.

    எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க ...!!!!!

    By: Unknown On: 06:54
  • Share The Gag


  • எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க ...!!!!!


    மனித மனம் எப்போதும் சந்தோஷமாக இருக்கவும்,நிம்மதியாக வாழவுமே விரும்புகிறது.ஆனால் பலருக்கும் அது சாத்தியமாகவே இருப்பதில்லை.வருத்தம்,நோய்,துன்பம் தரும் நிகழ்வுகள் என்று மகிழ்ச்சியை பறிக்கும் எதிரிகள் இருக்கத்தான் செய்கின்றன.அப்படியானால் எப்போதும் சந்தோஷமாக எப்படி இருக்கமுடியும்? சரிதான்.ஒரு முக்கியமான விஷயம் இவை எல்லாம் தினமும் ஏற்படும் ஒரு விஷயமல்ல!


                 நெருங்கிய உறவினரின் இழப்பு யாருக்கும் மகிழ்ச்சியை தராதுதான்.அதையே நினைத்துஏன் பல மாதம்,பல ஆண்டுகள் அந்த பாதிப்பிலேயே இருப்பதுதான் பிரச்சினை.இதுபோலவே மற்ற துன்பங்களுக்கும்,கடந்துவிட்ட கஷ்டங்களுக்கும் பொருந்தும்.நம்முடைய சிக்கல் என்பது ஏற்பட்டுவிட்ட பாதிப்பிலிருந்து எவ்வளவு விரைவில் மீண்டுவருகிறோம் என்பதே!


                மனிதனாக நீங்கள் பிறந்துள்ளதற்கு ஒரு நோக்கம் இருக்கவேண்டும் இல்லையா? உலகம் எதற்காக இருக்கிறது அதை யார் படைத்தார்கள்? மறுபிறவி இருக்கிறதா? இல்லையா? நாம் என்னவாகப்போகிறோம்? இதெல்லாம் விடை இல்லாத கேள்விகள் தான்.ஆனால் நீங்கள் பிறந்துள்ளதன் காரணம் எனக்கு தெரியும்.அது எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு! அதை மற்றவர்களுக்கு பரப்புவதற்கு!


                எப்போதும் அப்படி இருக்க முடிவதில்லை என்பது உண்மைதான்.நூறு சதவீதம் என்பது ஒரு மாயை! அது முழுதும் உண்மையல்ல! அதனால் பெரும்பாலான நேரங்களில் உங்களால் மகிழ்ச்சியுடன் இருக்கமுடியும்.எப்போதும் என்பது அதுதான்.என்னால் முடியவில்லை என்பவர்கள் முதலில் அதைப்பற்றி சிந்திக்க ஆரம்பிக்கவும்.உங்கள் வாழ்க்கையின் குறிக்கோளாக சந்தோஷத்தை தேர்ந்தெடுக்கவும்.


               மகிழ்ச்சிதான் உங்கள் நோக்கமென்று முடிவு செய்துவிட்டால் அதை பெறுவது எளிது.முதலில் நீங்கள் இப்போது சந்தோஷமாக இருக்கிறீர்களா? என்பதை கவனியுங்கள்.இல்லையென்றால் உங்களை சங்கடப்படுத்தும்,கவலைக்குள்ளாக்கும் விஷயம் எது என்று கண்டுபிடிக்கவும்.இப்போதே நீங்கள் பாதி வெற்றியடைந்த்து போலத்தான்.


               உறுத்தும் விஷயத்தைக் கண்டுபிடித்து விட்டாலே அதை தீர்க்கும் வழிகளும் உங்களுக்கு தோன்ற ஆரம்பிக்கும்.இயற்கை அனைவருக்கும் பிரச்சினைகளை தீர்க்கும் சக்தியை கொடுத்திருக்கிறது.தீர்க்க முடியாவிட்டால் உறவினரையோ,நண்பர்களையோ,அதற்கென உள்ள நிபுணர்களையோ அணுக வேண்டும்.பிரச்சினை தீர்ந்தால் மகிழ்ச்சிதானே வரும்.


           முக்கியமான விஷயம் உங்களை சுற்றி உள்ள  மற்றவர்கள் சந்தோஷமாக இருக்கவேண்டுமென்று நினைத்தால் மட்டுமே நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்கமுடியும்.நமது பக்கத்தில் நான்குபேர் அழுது கொண்டிருந்தால் உங்கள் மனநிலையும் பாதிக்கவே செய்யும்.அல்லது மற்றவர்கள் கஷ்ட்த்தில் இருக்கும்போது நீங்கள் சிரித்துக் கொண்டிருந்தால் உங்களுக்கு சிகிச்சை தேவை.


               பிரபல பதிவர் ஒருவர் குறிப்பிட்ட சிலரின் பதிவு ஹிட்டாகிவிட்டால் அன்று முழுக்க சாப்பாடு,தூக்கம் எதுவும் இல்லையாம்.இந்த மாதிரி விஷயங்களால் உங்கள் சந்தோஷம் பாதிக்கப்படுவது கஷ்டம்.மகிழ்ச்சி சட்ட்த்துக்கும்,நெறிகளுக்கும் உட்பட்ட பொருள்களில் இருக்கவேண்டும்.நிகழ்காலத்தில் வாழ்வது,தவறுகளை திருத்திக்கொள்வது போன்றவை முக்கியம்.குழந்தையாக இருங்கள் .வாழ்வு எளிதாகும்.

    உயிரை உறிஞ்சுகிறதா சினிமா?

    By: Unknown On: 06:41
  • Share The Gag

  • என்னிடம் இரண்டு நாய்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒரு நாய்க்குப் பேராசை, சுயநலம், சந்தேகம், பொறாமை பழிவாங்குவது, மற்றவர்களை அச்சுறுத்துவது போன்ற தீக்குணங்கள் அதிகம். அதற்கு நான் 'ஈவில்' என்று பெயர் வைத்திருந்தேன்.

    இன்னொன்று அதற்கு நேர் எதிர். நன்றி , பொறுமை, நட்பு, உதவி செய்யும் மனப்பான்மை இதெல்லாம் அதனிடம் மிகுதி. நான் அதை 'குட்டி' (goodie) என்று அழைப்பேன். இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல. ஒன்றை ஒன்று ஜெயிக்கப்பார்க்கும். எப்போதும் போட்டி போட்டுக் கொண்டே இருக்கும்.

    இரண்டில் "எது ஜெயிக்கும்?"
    "நான் எது ஜெயிக்க வேண்டும் என்று விரும்புகிறேனோ அது ஜெயிக்கும்"
    "எப்படி? உங்களுக்கு புரியவில்லையா?
    "எதை ஊக்குவிக்கிறேனோ, எதற்கு ஊட்டம் அளித்து வளர்க்கிறேனோ, எதைப் பலப்படுத்துகிறேனோ, அதைப் பொறுத்து அந்த இரண்டு நாய்களில் ஒன்று ஜெயிக்கும்"

    நாய்கள் என்று நான் சொல்ல வருவது நம்முடைய மனநிலையைத்தான்....

    சரி, நம்முடைய கல்வி முறை, சமகால இலக்கியங்கள், சினிமா இவை எல்லாம் 'குட்டி[Goodie]'க்குத் தீனி போடுகின்றனவா? அல்லது ஈவிலுக்கா[Evil]?

    யோசனை மனதைப் பிறாண்டத் துவங்கியது. செய்தித்தாள் படிக்கும் போது மற்ற சிந்தனை கூடாது என்று மனதிடம் சொல்லி வைத்திருக்கிறேன். ஆனால் சிந்தனை என்பது காபி குடிப்பது, குளிப்பது போல ஒரு பழக்கத்தின் காரணமாக நேர்கிற செயலா?
    காற்றுப் போல அது நினைத்த நேரத்திற்கு வந்து வருடிக் கொடுக்கும் அல்லது குப்பை சேர்க்கும்.

    "சீ! சும்மாயிரு!" என்று ஒரு அதட்டல் போட்டுவிட்டு அடுத்த பக்கத்தைப் புரட்டினேன்.அங்கே என் கண்ணில் பட்டது இந்த செய்தி.

    "உயிரை உறிஞ்சுகிறதா சினிமா?"

    என்று ஒரு பெரிய கேள்விக் குறியை வீசித் துவங்கியது செய்தி.

    ஐ.நா.சபையின் அமைப்பான உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஒர் ஆய்வு, இந்தியாவில் தயாராகும் படங்களில் முக்கால்வாசிப் படங்கள்- துல்லியமாகச் சொல்வதானால் 76 விழுக்காடு- புகைபிடிக்கும் காட்சிகளைக் கொண்டிருக்கின்றன என்று சொல்கிறது. அதிலும் புகழ் பெற்ற, மக்களிடம் செல்வாக்குச் செலுத்தக்கூடிய நடிக நடிகையர்கள், உதாரணமாக அமிதாப் பச்சன், ஷாரூக்க்கான், ரஜனிகாந்த் அந்தக் காட்சிகளில் நடிப்பதாகவும் அது கவலைப்படுகிறது. ஒரு நாளைக்கு இந்தியாவில் ஒன்றரைக் கோடி பேர் சினிமாப் பார்க்கிறார்கள், ஆண்டொன்றுக்கு 900 திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன என்று கணக்குச் சொல்லி, சினிமா இந்த அளவிற்குப் பிரபலமாக இருப்பதால் புகை பிடிக்கும் பழக்கமும் வலுவாக வேரூன்றியிருக்கிறது என்று அந்த ஆய்வு ஆதங்கப்படுகிறது.

    ஆனால் இவற்றையெல்லாம் விடக் கவலைப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்தியாவில் புகையிலைப் பழக்கம் உள்ள 28 கோடிப் பேரில் 50 லட்சம் பேர் குழந்தைகள்! நாளுக்கு நாள் பதின்ம வயதினர் புகை பிடிப்பது அதிகரித்து வருகிறது, அதற்கு சினிமாக்கள் ஒரு காரணமாக இருக்கலாம் என்று அது கருதுகிறது.

    தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, கறுப்பு -வெள்ளைக் காலத்தில், ஒரு பாத்திரத்தை வில்லனாகக் காட்ட சிகரெட் பயன்பட்டது. கழுத்தில் கர்சீப், கட்டம் போட்ட சட்டை, கலைந்த தலை, வாயில் புகையும் சிகரெட் இவை இருந்தால், அவர் வில்லன் என்று பார்த்தவுடனேயே ரசிகர்கள் தெரிந்து கொள்வார்கள். இதன் காரணமாக நிஜ வாழக்கையில் புகை பிடித்த சில நல்லவர்கள் கூட, அதை பகிரங்கமாகச் செய்யத் தயங்கினார்கள். உதாரணம்: காமராஜர். அவருக்குப் புகை பிடிக்கும் பழக்கம் உண்டு. ஆனால் அவர் புகை பிடிப்பது போல் புகைப்படம்  எடுக்கக்கூட அனுமதிக்க மாட்டார்கள்.

    எம்.ஜி.ஆர். தனது எந்தத் திரைப்படத்திலும் புகை பிடித்ததில்லை. இமேஜை  பற்றிய கவனம் மட்டுமல்ல இதற்குக் காரணம். அவர் தனது பாத்திரங்கள் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் குறித்தும் அறிந்து வைத்திருந்தார் என்று கருத இடம் இருக்கிறது.

    "தைரியமாக  சொல் நீ மனிதன்தானா?
    இல்லை நீதான் ஒரு மிருகம், அந்த மதுவில் விழும் நேரம்"

    என்று அவர் திரையில் பாடியதைக் கேட்டுத் தற்காலிகமாகக் குடிப்பதை நிறுத்தியவர்கள் உண்டு.

    இன்றைய தமிழ் சினிமாவிற்கு, மதுவிற்கு எதிராகவோ, புகைக்கு எதிராகவோ பேசும் தைரியம் கிடையாது. மாறாக அது இன்று புலம்பல் களஞ்சியம்.

     திட்றாங்க, திட்றாங்க, திட்றாங்க, திட்றாங்க,
    தம் அடிச்சா திட்றாங்க, தண்ணியடிச்சா திட்றாங்க,
    சைட் அடிச்சா திட்றாங்க, ரைட் கொடுத்தா திட்றாங்க,
    திட்றாங்க திட்றாங்க, திட்றாங்க, திட்றாங்க,
     டாடியும் மம்மியும் திட்றாங்க'

    தீராத தம்மு வேணும்
    திட்டாத அப்பு[அப்பா] வேணும்
    குறையாத குவாட்டர் வேணும்
    கொண்டாட நட்பு வேணும்...


    என்று அது அழுது  புலம்புகிறது.பின் இதையெல்லாம் செய்தால் அப்பாவும் அம்மாவும் பூரித்து புளாகாங்கிதம் அடைந்து, உச்சி மோந்து, திருஷ்டி சுத்தி, ஈன்ற பொழுதின் பெரிதுவப்பார்களா?

    சரி, மதுவிற்கு எதிராகப் பிரசாரம் செய்த எம்.ஜி.ஆர், ஏன் புகை பிடிப்பதற்கு எதிராகத் திரைப்படத்தில் எந்த பிரசாரமும் செய்யவில்லை? சரித்திரத்தில் விடை காணமுடியாத மில்லியன் டாலர் கேள்விகளில் இதுவும் ஒன்று. அவர் அதைப் பெரிய விஷயமாகக் கருதாமல் இருந்திருக்கலாம். அல்லது அந்தப் பிரசாரம் பலன் தராமல் போய் அது தனது செல்வாக்கிற்கு ஏற்பட்ட வீழ்ச்சியாகக் கருதப்பட்டுவிடும், எதற்கு ரிஸ்க் என்று எண்ணியிருக்கலாம்.

    ஆனால் தனது விளம்பர வருமானத்தைப் பெரிதாகக் கருதாமல், சிகரெட் விளம்பரங்களை வெளியிடப்போவதில்லை என்று பகிரங்கமாக அறிவித்தது ஆனந்த விகடன். அது புகைப்பதற்கு எதிராகக் கொஞ்சநாள் போராட்டமும் நடத்திப் பார்த்தது. ஆனால் பத்திரிகையாளர்களால்- விகடனில் பணியாற்றிய சில பத்திரிகையாளர்களையும் சேர்த்துத்தான் - கை விட முடியாத ஒரு வழக்கமாக இருந்தது புகை பிடிக்கும் பழக்கம்.

    நான் குமுதம் ஆசிரியராகப் பணியாற்றியபோது, சென்னைக்கு வந்த அன்னை தெரசாவைப் பேட்டி கண்டு வருமாறு ஒரு நிருபரை அனுப்பியிருந்தேன். அந்த நிருபருக்குப் புகை பிடிக்கும் பழக்கமுண்டு.தெரசா பேட்டிக்கு வரச் சொல்லியிருந்த நேரத்திற்குச் சற்று முன்னதாகவே சென்று விட்ட அவர், காத்திருக்கும் போது போரடித்ததால், புகைபிடிக்க ஆரம்பித்தார்.மூடப்பட்ட ஒரு அறைக்கு முன்னால் வராந்தாவில் அவர்
    நின்று புகைத்துக் கொண்டிருந்தார். தெரசா அந்த அறைக்குள்தான் இருக்கிறார், வேறு யாருடனோ பேசிக் கொண்டிருகிறார், நம்முடைய நேரம் வரும் போது நம்மை அழைப்பார்கள், அதற்கு முன்னதாக சிகரெட்டைக் கீழே போட்டுவிட்டு கொஞ்சம் பாக்கை மென்றுவிட்டு உள்ளே போய் விடலாம் என்று அவர் நினைத்துக் கொண்டிருந்தார். அவர் நினைத்தது போல் தெரசா அறைக்குள் இல்லை. பேட்டிக்கு சில நிமிடங்கள் முன் தெரசா விறுவிறுவென்று அந்த அறையை நோக்கி வரத் துவங்கினார். வரும் போது அறைவாசலில் புகை பிடித்துக் கொண்டு நின்றிருந்த நிருபரையும் பார்த்து விட்டார்.

    நிருபர் உள்ளே அழைக்கப்பட்டார்.அவர் தெரசாவிடம் கேள்விகள் கேட்கும் முன், தெரசா அவரிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்." புகை பிடிப்பீர்களா?' என்பது முதல் கேள்வி. கையும் புகையுமாகப் பிடிபட்டபின் இல்லை என்றா சொல்ல முடியும். சரி, புகை பிடிப்பதைப் பற்றி ஏதாவது அறிவுரை சொல்லுவார், அதை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிடலாம் என்று எண்ணிக் கொண்ட நிருபர், " ஆமாம். பத்துப்பதினைந்து வருடமாகப் புகைக்கிறேன். பழகிப் போய் விட்டது" என்றார்.

    தெரசா புகையின் தீமைகள் பற்றி உபதேசம் ஏதும் செய்யவில்லை. மாறாக, "ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் புகைப்பீர்கள்?" என்றார்.
    "பத்து அல்லது பனிரெண்டு" என்றார் நிருபர்.
    "அதற்கு என்ன செலவாகும்?"
    "பத்து பதினைந்து ரூபாய் ஆகும்."
    "நீங்கள் புகை பிடிப்பதை நிறுத்திவிட்டு மிச்சமாகும் அந்தத் தொகையை எனக்கு நன்கொடையாகத் தருவீர்களா?" என்றார் தெரசா
    நிருபர் இந்தக் கேள்வியை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
    "அது ஒன்றும் பெரிய தொகையாக இராது மதர்." என்று நழுவப் பார்த்தார் நிருபர்.
    "மாதம் முன்னூறு, நானூறு ரூபாய். அதை வைத்துக் கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு மாதம் முழுக்க இரண்டு வேளை பசியாற்றலாம் தெரியுமா?" என்றார். நிருபர் சங்கடத்தில் நெளிய ஆரம்பித்தார்.


    " நான் என்னுடைய பணியைத் துவக்கியபோது என் கையில் இருந்த பணம் வெறும் பத்து ரூபாய். அது ஒரு குஷ்டரோகியை மருத்துவ மனைக்குக் கொண்டு செல்ல உதவியது.அங்கு அவரது ரணங்களைக் கழுவி மருந்திட்டு சிகிச்சை அளிக்க ஆரம்பித்தார்கள். அது அவரது வாழ்வில் மிகப்பெரிய ஒரு திருப்பம். எல்லோராலும் அருவருப்பாக உணரப்பட்டுக் கவனிப்பாரின்றி தெருவோரமாகக் கிடந்த நம்மையும் கவனிக்க மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணம் ஏற்பட்டு, அவருக்கு மனிதர்கள் மீது நம்பிக்கை பிறந்தது. அதற்குத் தேவைப்பட்டது வெறும் பத்து ரூபாய்.

    சேவை செய்ய அதிகப் பணம் தேவையில்லை. ஆனால் சேவை செய்பவர்களுக்கு ஒவ்வொரு பைசாவும் பெரிய உதவி" என்று சொல்லிய தெரசா, நிருபரிடம், இனிப் புகை பிடிப்பதில்லை, அதற்கு செலவிட்டு வந்த பணத்தை தர்மத்திற்குக் கொடுக்கிறேன் என்று உறுதி வாங்கிக் கொண்டுதான் பேட்டிக்கு சம்மதித்தார்.

    தமிழ் சினிமாக்கள் மதர் தெரசா இல்லை.புகை பிடிப்பவர்கள் மனதில் தர்ம சிந்தனையை விதைக்க அவை முன் வரும் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் அவர்கள் தங்கள் வியாபாரத்தில் செலுத்தும் கவனத்தில் பத்தில் ஒரு பங்கை சமூக நலன்களைப் பேணுவதில் காட்டக் கூடாதா?

    திருட்டு விசிடியை எதிர்த்து ஊர்வலம் போகப் போவதாக, முதல்வரை சந்தித்து மனுக் கொடுக்கப் போவதாக தமிழ் சினிமா நட்சத்திரங்கள் அவ்வப்போது சொல்வதுண்டு. வியாபாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள இந்த முயற்சி.

    சரி, திருட்டு வி.சி.டி.கள் எங்கிருந்து முளைக்கின்றன? அவை விதை போட்டு விளைவதில்லை. வானத்திலிருந்து குதிப்பதில்லை.சினிமா உலகத்தில் இருந்து சினிமா உலகத்தைச் சேர்ந்தவர்களால்தான் உருவாகின்றன. அதற்கு ஏன் வீதியில் இறங்கி ஊர்வலம் போகவேண்டும்? அறைக்குள் உட்கார்ந்து அலசி ஆராய்ந்து முடிவுக்கு வர வேண்டிய விஷயமல்லவா இது? தங்களது பேராசைக்குக் கடிவாளம் போட வேண்டிய விஷயத்திற்கு, ஊராரை ஏன் உசுப்பி விட வேண்டும்?

    இந்த விசிடி விஷயத்தில் காட்டுகிற அக்கறையில். பத்தில் ஒரு பங்கை

    •இனி  தமிழ்த் திரைப்படங்களில் புகைப் ப்டிக்கும் காட்சிகளைக் காண்பிப்பதில்லை,

    •பெண்களைக் கேலி செய்யும் பாடல்களை அனுமதிப்பதில்லை,

    •இரட்டை அர்த்த வசனங்களைப் பேசுவதில்லை,


    •ஜாதிப் பெயர் வருவது போலத் தலைப்பு வைப்பதில்லை
    என்ற விஷயங்களில் முடிவு எடுப்பதில் காட்டலாமே? இந்த விஷயங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஊர்வலம் போகலாமே? கோஷங்கள் எழுப்பலாமே?

    'குட்டி'யைத் தூக்கி வைத்துக் கொஞ்சாவிட்டாலும் பரவாயில்லை, ஈவிலுக்குப் போடுகிற ரொட்டியைக் குறைத்துக் கொள்ளலாமே? செய்யுமா திரை உலகம்? அல்லது திரைக்கு வெளியிலும் வேஷம் போடுமா?